திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

"பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்; பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது" - எசாயா 48:21.

அதிகாரம் 47 தொகு

பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு தொகு


1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே!
நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;
மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு;
'மெல்லியலாள்', 'இனியவள்' என்று இனி நீ அழைக்கப்படாய்.


2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;
உன் முக்காடுதனை அகற்றிவிடு;
உன் மேலாடையைக் களைத்துவிட்டு,
உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.


3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்;
உன் மானக்கேடு வெளிப்படும்;
நான் பழி வாங்குவேன்;
எந்த ஆளையும் விட்டுவையேன்.


4 எங்கள் மீட்பரின் பெயர் 'படைகளின் ஆண்டவர்';
அவரே 'இஸ்ரயேலின் தூயவர்'.


5 மகள் கல்தேயா!
இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்;
இனி நீ 'அரசுகளின் தலைவி' என அழைக்கப்படமாட்டாய்.


6 நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்;
என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்;
அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;
நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை;
முதியோராய் இருந்தோர் மீதும்
மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.


7 'என்றும் தலைவி நானே, என்றாய் நீ;
இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை;
பின்விளைவு பற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.


8 இன்ப நாட்டம் கொண்டவளே,
போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே,
'எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை;
நான் கைம்பெண் ஆகமாட்டேன்;
பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்'
என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே,
இப்பொழுது இதைக் கேள்;


9 இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்;
பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும்,
ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும்,
பிள்ளை இழப்பும் கைம்மையும்
முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும். [1]


10 உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்;
'என்னைக் காண்பார் யாருமில்லை' என்றாய்.
உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன;
'எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை' என்று
உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.


11 தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;
அது தோன்றும் திக்கை நீ அறியாய்;
அழிவு உன்மேல் விழும்;
அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது;
நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.


12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும்
பில்லி சூனியங்களோடும் வந்து நில்;
ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்;
ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.


13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;
வான்வெளியைக் கணிப்போரும்,
விண்மீன்களை ஆய்வோரும்
நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும்,
வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.


14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,
நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;
தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்;
அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.


15 நீ முயன்று பயின்றவையும் இவ்வாறே அழிவுறும்;
உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்;
ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்;
உன்னை விடுவிக்க எவரும் இரார். [2]


குறிப்புகள்

[1] 47:8-9 = திவெ 18:7-8.
[2] 47:1-15 = எசா 13:1-14:23; எரே 50:1; 51:64.


அதிகாரம் 48 தொகு

ஆண்டவர் வருங்காலத்தின் தலைவர் தொகு


1 யாக்கோபின் வீட்டாரே!
இதற்குச் செவிகொடுங்கள்;
நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்;
யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்;
ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்;
இஸ்ரயேலின் கடவுளைப் புகழ்கின்றீர்கள்.
ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.


2 'திரு நகரினர்' என்று உங்களைப் பற்றிச்
சொல்லிக்கொள்கின்றீர்கள்;
இஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்;
'படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்!


3 பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்;
என் தாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்;
திடீரெனச் செயல்பட்டேன்; யாவும் நிகழ்ந்தன.


4 நீ பிடிவாத குணமுடையவன்;
உன் கழுத்து இரும்புத் தசைநார்;
உன் நெற்றி வெண்கலம்; இதை நான் அறிவேன்.


5 எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்;
அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்;
'என் சிலை அவற்றைச் செய்தது;
நான் வார்த்த வடிவமும் செதுக்கிய உருவமும்
அவற்றைக் கட்டளையிட்டன'
என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.


6 முன்பு நீ கேட்டாய்;
இப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்;
அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ?
இதுமுதல் புதியனவற்றையும்
நீ அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.


7 பண்டைக்காலத்தில் அல்ல,
அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன;
இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை;
அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை;
'அவைபற்றி எனக்குத் தெரியும்' என நீ கூறவும் முடியாது.


8 உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை;
முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை;
ஏனெனில் நீ 'ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்'
என்று பெயர்பெற்றவன்; இதை நான் உறுதியாய் அறிவேன்.


9 என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்;
என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல்,
உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.


10 நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால் வெள்ளியைப் போலல்ல;
துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.


11 என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்;
என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்?
என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.


12 நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே,
எனக்குச் செவிகொடு;
நானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே.


13 என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது;
என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது.
நான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.


14 நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்;
அவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்?
ஆண்டவரின் அன்புக்குரியவன்,
பாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்;
அவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.


15 நான், நானேதான் அதைக் கூறினேன்;
நான் அவனை அழைத்தேன்;
நானே அவனைக் கொண்டு வந்தேன்,
அவன் தன்வழியில் வெற்றி காண்பான்.


16 என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்;
தொடக்கமுதல் நான் மறைவாகப் பேசியதில்லை;
அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன்.
இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர்
என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.

தம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம் தொகு


17 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!
பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும்
செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!


18 என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால்,
உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,
உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.


19 உன் வழிமரபினர் மணல் அளவாயும்,
உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;
அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்;
அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.


20 பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்;
கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்;
ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்;
உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்;
'தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்'
என்று சொல்லுங்கள்.


21 அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது
அவர்கள் தாகமடையவில்லை;
பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்;
பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.


22 'தீயோர்க்கு அமைதி இல்லை'
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 48:12 = எசா 44:6; திவெ 1:17; 22:13.
[2] 48:20 = திவெ 18:4.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 49 முதல் 50 வரை