பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


ஐ. நா. வின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஸ்ரீ ஐஸன்ஹோவர் கூறியதைவிட வேறு எதைத்தான் ஆதாரமாகக் காட்ட முடியும்? வெற்றிக்கொடி நாட்டிய வீரரான அவர் கூறுகிறார்; படை பலத்தைப் பயன்படுத்தித் தேசத் தகராறுகளைத் தீர்க்கலாம் என்று ஐ. நா. ஸ்தாபனம் எப்போதாவது ஒப்புக் கொண்டு விட்டால் அப்போது அந்த ஸ்தாபனத்தின் அடிப்படையையும், உலக முறைமை ஒன்றை உருவாக்குவதற்கான நமது சிறந்த நம்பிக்கையையும் அழித்திருப்போம்--அது எல்லோருக்குமே அழிவாகத்தான் இருக்கும்."

ஐ. நா. வின் உடன் பிறந்த குறைகளையும், பிறகு சேர்ந்த குறைகளையும் நன்கு உணர்ந்திருந்த பண்டித் ஜவாஹர்லால் நேரு, ஐ. நா. வுக்காக மிகப் பலமாக வாதாடினார். "ஐ. நா. வின் இயல்பை மாற்ற முயன்றால் அமைதிக்காகப் பாடுபடும் மேலும் வலுவான ஒரு அமைப்பை இதனால் உருவாக்க முடியாது. ஏற்கெனவே இருக்கும் சிறந்த ஒரு அமைப்பைக் குலைப்பதாகத்தான் அதற்குப் பொருள். இதற்குப் பதிலாக வேறு எதையும் உருவாக்க முடியாது.

ஆதலால்தான் இந்த ஸ்தாபனத்தை வலுப்படுத்தி உள்ள விவகாரங்களில் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக மாற்ற வேண்டுமே ஒழியப் போர் வெறியர்களின் வெறியாட்டத்தை அழிக்கக் கூடிய நிலையில் உலகை விட்டு விட வேண்டாம் என்று சிந்தனையாளர்கள் அனைவரும் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறார்கள். ஐ. நா. தலைமைக் காரியதரிசி ஊதாண்ட் கூறியிருப்பதைப் போல "எவ்வளவு வலிமை இருப்பினும், எவ்வளவு செல்வம் கொழிப்பினும் எந்த ஒரு நாடும் இன்று தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியாது."

தனித்து வாழ்வதோ, மற்ற நாடுகளின் சிதைவுகளுக்கு மேல் இருப்பதோ சாத்தியமல்ல என்பதைப் பல நாடுகளும்