பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்நீச்சலடித்த இரட்டையர்


பெருந்தன்மையோடு கூடிய பொதுவாழ்வு வெற்றியையன்றி வேறெதையும் தந்திடாது.

அறிவுத் தெளிவுக்கும் வாழ்க்கைப் பணியில் உறுதிக்கும் இவ்விரட்டையர் முன் உதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவ்விரட்டையரது அறிவாழம் மிக்க புலமையிலும் இவர்களது தருக்க நியதிகளிலும் ஐயப்பாடு என்பது எவருக்குமிருக்காது. இவ்வாறிருப்பினும் அனைவரும் இவர்களைப் பின்பற்றுவதில்லை.

ஆற்றில் எதிர்நீச்சலடித்து சுழல்தனைச் சந்தித்து மேல்நோக்கிச் சென்றுள்ள இவர்கள் அவ்வாறு செய்தது வீர பிரதாபங்களுக்காக அல்ல. அறிவுத் தெளிவோடு தாங்கள் கொண்ட கொள்கைகளில் உறுதியோடு தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதையில் அவர்கள் திடமாகவே சென்றுள்ளனர். எனினும் அவர்கள் வெற்றியையே தழுவி இருக்கிறார்கள்.

ஆற்காடு சகோதார்கள் என்றழைக்கப்படும் இரட்டையர் தமிழகம் தந்த உரம் மிகுந்த வல்லவர்கள். இந்தியாவின் மேதைகள்--உலகறிந்த சான்றோர்-இந்த நூற்றாண்டின் உலக மேதைகளுள் சிலராக மதிக்கப்படுவர்.

இவ்வுலகிலே பெரிய மனிதர் என்ற பெயரெடுக்கத் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து விலகிடுபவர் உண்டு. ஆனால் சர். ராமசாமியோ ஓராயிரம் களம் கண்டவர்.