பக்கம்:கனிச்சாறு 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


92  ஆரியர் விழுது!

நாடென்பார்; மொழியென்பார்; தமிழர்க் கெல்லாம்
நலிவென்பார்; இழிவென்பார்; பிறநாட் டாரால்
கேடென்பார்; மக்களெலாம் திரள்க வென்பார்;
கிளர்ந்தெழுமோர் வல்லுணர்வை எழுதிக் காட்டும்
ஏடென்பார்; எழுத்தென்பார்; இலக்கி யத்தின்
ஏற்றமெலாம் பலவாறாய் எடுத்துக் காட்டிப்
பாடென்பார்; ஆனாலும் தமிழர்க் குற்ற
பழிபோக்க வழிகாட்டார்! பதுங்கு வாரே!

மூச்சென்பார்; தமிழ்மொழியை! ஆள வந்தார்
முதுகெலும்பை முறித்திடுமோர் உயர்ந்த மேடைப்
பேச்சென்பார்! உரைநடையும் பாட்டுஞ் சேர்ந்த
பேருயர்ந்த நாடகத்தை நடித்து விட்டால்,
ஆச்சென்பார்! ஆயிரம்பேர் பட்டம் பெற்ற
அணியென்பார்; முன்னேற்ற நடைகாட் டுங்கை
வீச்சென்பார்! ஆனாலும் ஆரியத்தை
வீழ்த்துதற்கு வழிகாட்டார்! வீழ்கின் றாரே!

‘எழும்பரிதிக் கதிரேயாம்' என்பார்; போர்த்த
இருள்நீக்க எழுந்ததிந்தக் கூட்டம் என்பார்!
தழும்பெல்லாம் போராட்டத் தழும்பே என்பார்,
தனித்துயர்ந்த திரவிடக்கூட் டாட்சி என்றே
பழம்புகழ்ச்சி பேசிடுவார்; ஆனால் நாட்டுப்
பாழ்நிலைதீர் வழிகாட்டார்; காட்டு வோர்க்கும்
விழும்பகைமை காட்டுகின்றார்; ஆரி யர்க்கே
விழுதாக நிற்கின்றார்! வீட ணோரே!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/188&oldid=1424795" இலிருந்து மீள்விக்கப்பட்டது