38 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
26 குரங்கு வாயில்!
வரிமணல் தென்துறை கண்டுமீள் வெண்மலை
வானரங்காள்!
நரியனை யார்வந்து தாழ்த்திய செந்தமிழ்
நாட்டினின்று
கரியனை யாரொரு கோடியர் சொன்னதாய்த்
தாய்த்தமிழை
அரியணை ஏற்றுவீர் என்றுரைப் பீர்தில்லி
ஆளுநர்க்கே!
1
இந்திக்கு மேலுடை இட்டணி பூட்டி
இளையவர், முன்
தந்திமி தீமென ஆடவைத் தீர்;தமிழ்ப்
பாவையட்கே
கந்தைதந் தீர்;இகழ்ந் தீர்; ஒழிந் தீர்;திறங்
காட்டுமுன்னம்
முந்திக்கொள் வீரென ஓதுவீர் தில்லி
முகாமையர்க்கே!
2
மந்தையென் றாநினைத் தீர்தமிழ் மக்களை;
மாண்டமிழ்த்தாய்
தந்தையற் கேபிறந் தோமெனில் இந்தத்
தமிழகத்தைச்
சந்தையென் றேநினைத் திங்குவந் தார்திறஞ்
சாவெடுப்போம்;
சிந்தையொன் றேயெனக் கூறுவீர்; ஆட்சி
செறிப்பவர்க்கே!
3
என் நினைந் தாரவர்; இந்தித் திணிப்பை
யணுவணுவாய்
முன்னினைத் தெந்தமிழ் முற்றுமி லாது
முழுதழித்தே
தன்னினத் தாரர சாண்டிட எந்தமிழ்த்
தாய்பயந்த
தென்னினத் தாரழி வாரெனத் தீக்கனாக்
காண்குநரே!
4