பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110



உற்று நின்று - விபீடணனை நெருங்கி நின்று; அவன் உணர்வை - அவனது மனப்பான்மையை தன் உணர்வினால் - தன் கூர்மதியினால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டான் ; இவன் - இந்த விபீடணன்; குற்றம் இல்லது ஓர் குணத்தினன் - குற்றமற்றதான நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன்; எனக் கொண்டான் - என்று எண்ணிக் கொண்டான்; (அதனால்) செற்றம் நீங்கிய மனத்தினன் -பகையில்லாத மனத்தினனாய்; ஒரு திசை சென்றான் - வேறு ஒரு வழியிலே சென்றான்; ஓர் நொடியிடை - ஒரு நொடியில்; பொற்ற மாடங்கள் கோடி புக்கான் - மலைகளைப் போன்ற மாளிகை பலவற்றுள் புகுந்து தேடினான்.

***

முந்து அரம்பையர் முதலினர்
        முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர்
        பலரையும் தெரிந்து
மந்திரம் பல கடந்து தன்
        மனத்தின் முன் செல்வான்
இந்திரன் சிறையிருந்த
        வாயிலின் கடை எதிர்ந்தான்.

பூரண சந்திரன் போல் விளங்குகின்ற அழகிய முகம் தொண்ட அரம்பையர்கள், தங்கள் உதடுகளுக்குச் சிவப்பு நிறந்தடவி மேலும் அழகுடன் சோபிக்கிறார்கள். இவர்களிடையே சீதாபிராட்டி இருக்கிறாளோ என்று தேடுகிறான் அநுமன். கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் பல மாளிகைகளைக் கடந்து செல்கிறான். வேகமாகச் செல்கிறான்.

மனோ வேகத்தை விட அதிவேகமாகச் செல்கிறான். இந்திரனைச் சிறை வைத்திருக்கும் வாயில் முன் வந்து நிற்கிறான்.

***