பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

செப்பேடுகள் கூறவில்லை. களப்பிரரிடமிருந்து சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவது முற்றிலும் உண்மை . அக்காலத்தில் சோழ நாட்டைச் சோழ மன்னர் ஆளவில்லை. சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டபோது சோழர் அவருக்குக் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே சிம்ம விஷ்ணு களப்பிரரிடமிருத்துதான் சோழ நாட்டை வென்றான் என்பது வெளிப்படை. களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், பல்லவர் சோழ நாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கினார்கள்.

பாண்டியன் கடுங்கோனும் பல்லவ சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வென்று வீழ்த்தியது ஏறத்தாழ கி.பி. 575 என்று கருதப்படுகிறது. கி.பி.575ல் அல்லது அதற்குச் சற்று முன் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்றிருக்க வேண்டும் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.[1] கி.பி. 590-ல் களப்பிரர் வெல்லப்பட்டனர் என்று திரு. நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார்.[2] கி.பி.575-ல் களப்பிரர் வீழ்ச்சியடைந்தனர் என்று கொள்வதே சரி என்று தோன்றுகிறது.

கி.பி. 450-க்கும் 550-க்கும் இடையில் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது என்று திரு.பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். பிறகு கி.பி. 5-ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர் களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்று கூறுகிறார்.[3] அதாவது கி.பி.450 முதல் 600 வரையில் 150 ஆண்டு களப்பிரர் ஆட்சி இருந்ததென்று கூறுகிறார். இவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. ஏறத்தாழ கி.பி. 250 முதல் 573 வரையில் தமிழ் நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது.

பாண்டி நாட்டைக் கடுங்கோனும் சோழ நாட்டைச் சிம்ம விஷ்ணுவும் வென்று கொண்டபோது சேர நாட்டைச் சேர அரசன் களப்பிரரிடமிருந்து வென்று கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் சேரனது பெயர் தெரியவில்லை. களப்பிரர் தங்கள் இராச்சியத்தைச் சேர பல்லவ பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைந்தனர். அவர்கள் சோழ நாட்டிலே தஞ்சாவூர், செந்தலை முதலான ஊர்களில் தங்கிச் சிற்றரசர்களாகப் பல்லவ அரசருக்கு அடங்கிவிட்டனர்.

மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்) இரண்டாம் நந்திவர்மன் ஆகிய பல்லவ அரசர்களப்பிரரை வென்றதாகக் கூறிக் கொள்கின்றனர்.[4] சாளுக்கிய அரசர்களான முதலாம் விக்கிரமாதித்தன், விசயாதித்தன் முதலான அரசர்கள் களப்பிரரை வென்றதாகக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் வென்ற களப்பிரர் பேரரசாகத் தமிழ் நாட்டையாண்ட களப்பிரர் அல்லர், அரசை இழந்து சிற்றரசர் நிலையையடைந்த பிற்காலத்துக் களப்பிரர் ஆவார்.


  1. சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. 1969, பக்கம் 31.
  2. K.A.N.Sastry, The Pandyan Kingdom.
  3. P.T.Srinivasn Iyangar, History of the Tamils, 1929. p.534.
  4. கூரம் செப்பேடு, வரி 15; புவ்லூச் செப்பேடு, பட்டத்தால் மங்கலம் செப்பேடு, சுலோகம் 9.