பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

149






மே 12


வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் நன்றாக வாழ்ந்திட அருள் செய்!

இறைவா, காலத்தின் காலமாகி நிற்கும் தலைவா! நான் "கால"மாகி நின்றிட முயன்றேனில்லை. இறைவா, நான் சென்ற காலத்தை நினைந்தே வருந்துகிறேன்; அழுகிறேன். ஆண்டாண்டுதோறும் அழுதாலும் சென்ற காலம் சென்றது தான். இறைவா, அதைவிடப் பெரிய கொடுமை நான் இப்பொழுது இந்தப் பொழுதில் வாழ்வதில்லை.

நிகழ்காலம் உண்மை. இதனை நான் முழுமையாகப் பயன்படுத்தினாலே சென்ற காலத்தவறுகள் திருந்தும்; எதிர்காலம் பயன்பெறும்.

நான் என் கண்முன்னே என்னைவிட்டு நெகிழ்ந்து ஓடத் துடித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலத்தைப் பொருட்படுத்துவதில்லை. பயன்படுத்துவதில்லை.

நிகழ் காலத்திற்கு உழைப்பு உரு, கொடுப்பதில்லை. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கிக் கனவுகளைக் காண்கிறேன். இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து என்னைக் காப்பாற்று. நிகழ்காலம் தாய்! நிகழ்காலம் கழிக்கப்பெற்ற பாங்கின் அடிப்படையிலேயே எதிர்காலம் அமையும்.

நான் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பதைக் கைவிடச் செய்க! இன்று இப்பொழுது வாழ்ந்திட அருள் செய்க! எனக்கு எதிர் காலக் கவலை வேண்டாம். நன்மை, தானே வரும். அது வரும்பொழுது வரட்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் நன்றாக வாழ்ந்திட அருள் செய்க!