பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

365



பொதுவாக ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் பராமரிப்புக்குக் குறைந்தது ஐந்து ஏக்கர் தேவை. விளை நிலத்தின் அடிப்படையில் மக்கள் செறிவு 2.5 க்குள் இருத்தல் நல்லது. இப்போது விவசாயம் செய்யப் பெறும் நிலங்களை விட வரப்புகளே அதிகம்.

இதேபோல நெல் சாகுபடி செய்யும் நிலம் குறைந்து வருகிறது. முன்பு சாகுபடி செய்யும் நிலம் 27 இலட்சம் ஹெக்டேராக இருந்தது. இப்போது 21 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டது. நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணப் பயிர்கள், கரும்பு முதலியன உற்பத்தி செய்வது, வீட்டு மனைகளாக மாற்றி விற்பது போன்ற மனப்போக்கு வளர்ந்து வருவதால் விவசாய நிலம் குறைந்து வருகிறது.

இந்தப் போக்கு நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வழி வகுத்ததாகி விடும். முன்பே நமக்கு, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் பற்றாக்குறை என்று கூறியதை நினைவில் கொள்க.

மண் என்பது ஓர் உயிரியல் பொருள் என்பதை நம்மில் பலரும் உணரவேண்டும். பொதுவாக மண்ணில் அங்ககச் சத்து (இயற்கை உரம் 5 சதம், மணிச்சத்து 45 சதம், காற்று 25 சதம், நீர் 25 சதம், தொழு உரச்சத்து 60 சதம்) இருத்தல் நல்ல விளை நிலத்திற்கு அடையாளம்.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மணலே, அதாவது நான்கு அங்குலம் மேற்பரப்பே வேளாண்மைக்கு ஏற்றது. இப்புவிக் கோளத்தில் கல் தோன்றிய பிறகே மண் தோன்றியது. இந்த மண் தோன்ற, குறைந்தது 10 இலட்சம் ஆண்டுகள் பிடித்தன என்று உணர்ந்தால், நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கண்டத்தின் அருமை நமக்குப் புரியும்.