பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழர் தம் அகத்திணை வாழ்விலும் கூட ஏறு தழுவுதல் என்ற துறை அமைந்துள்ளது. தொன்மையான சிவநெறியில் எருது சிறப்பான இடத்தை, சிவபெருமானுக்கு ஊர்தியாகவும், உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் சிறப்பிக்கப் பெறுகிறது. தைத் திங்களில் பொங்கலின் போது, மாட்டுப் பொங்கலும் உண்டு.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு சுமார் 9 விழுக்காடு இருந்து வருகிறது. இந்தியாவில் வேளாண்மைத்துறை மூலம் கிடைக்கும் வருவாயில் 30 விழுக்காடு கால்நடைகள் மூலம் கிடைக்கிறது. இது தவிர, தோல் மற்றும் தோல் அடிப்படையில் ஆன பொருள்களின் உற்பத்தி 2600 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைப் பொருளாதாரத்தின் பங்கு கணிசமாக இருக்கிறது. நமது நாடு, அந்நியச் செலாவணியாக 50 கோடி ரூபாய் வரையில் கால்நடைகளின் தோல், தோல் அடிப்படையிலான பொருள்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டுகிறது. ஆதலால், தரமான கால்நடைகளை - மாடுகளை வளர்ப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைக் கூடுதலாக ஈட்டமுடியும்.

நிலங்களில் பணப்பயிர்கள் சாகுபடி செய்து அடையும் இலாபத்தை விட கால்நடைகளுக்குள்ள தீவனப்புல் வளர்த்து, கால்நடைகளையும் வளர்த்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

மூன்று கலப்பின ஜெர்சி கறவை மாடுகள், 54-1 அளவுள்ள தலைச்சேரி இன வெள்ளாடுகள் கொண்ட ஒரு யூனிட் வைத்து வளர்த்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 22,800 கிடைக்கும். சாதாரணமாகச் செய்யும் சாகுபடியில் ரூ. 8,450 தான் கிடைக்கும். இந்த மாதிரி பண்ணைகளுக்கு "ஒருங்கிணைந்த பண்ணை" என்று பெயர்.