பக்கம்:குறட்செல்வம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனிவியல் அமைக்கவில்லை. எனினும் ஒரே வழி குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் ஒரு பொருளியல்துறை அறிஞர், பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவையற்றி தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார்.

வறட்சித் தன்மையுடைய மாயா வாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கிய பிறகுதான், தமிழர் வாழ்வியல் கெட்டது: வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது.

இந்த நிலையினை உணர்ந்த தமிழக சிவ நெறி சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர். 'முனிவரும் மன்னவரும் முன்னுவ பொன்னால் முடியும்’ என்பது மாணிக்கவாசகரின் வாக்கு.

“ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றும், “பொன்னானாய், மணியானாய்” என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.

பொருள் உலகியலின் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர், பொருளைப் போற்றவேண்டும் என்று கூறுகின்றார். பொருளை போற்றுதல் என்றால், பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. ‘பொருளைப் பாதுகாத்தல்’ என்பதுதான் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/106&oldid=1562425" இலிருந்து மீள்விக்கப்பட்டது