பக்கம்:குறட்செல்வம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. புறஞ்சொல்லும் புன்மை


திருக்குறள் நடைமுறை வாழ்வியலின் விளைவுகளை விளக்கும் நூல். குற்றங்களையும் குணங்களையும் அவற்றின் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கி வழி காட்டுகிறது. அதுமட்டுமன்று. ஒன்றின் முழுத்தன்மையையும் அளந்து காட்டுவதில் திருக்குறள் மிகச் சிறந்து விளங்குகிறது.

மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பகை, புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல். புறங்கூறி வாழ்தலின் மூலம் பொய் பெருகுகிறது. பகை வளர்கிறது. நட்பு கெடுகிறது. நல்லவை தேய்கிறது. அல்லவை பெருகுகிறது.

புறங்கூறுதலைவிட மோசமான குணக்கேடு பிறிதொன்றில்லை என்று ஒழுக்க நூலார் வரையறுத்துக் காட்டுகின்றனர். 'புறங்கூறுதல்' வெறுப்பை வளர்க்கிறது. வெறுப்பு, வேற்றுமைகளை விளைவிக்கிறது — வேற்றுமைகள் பிரிவினைகளை உண்டாக்குகின்றன! என்று குவாரில்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் கூறுகிறார்.

மனித இயலும், திருவருட் சிந்தனையும் இல்லாத மனிதர்கள், தீமைகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அத் தீமைகளை உதட்டில் தாங்கிப் பகை என்னும் பெரு நெருப்பை எரிக்கிறார்கள். தற்காலிகமாகப் பிறர் குற்றத்தில் குளிர் காய்கிறார்கள். ஆனால் அடையக் கூடிய பயனோ அழிவு! அழிவு! அழிவு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/70&oldid=1562410" இலிருந்து மீள்விக்கப்பட்டது