பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சொல்வதெல்லாம் செய்தல் சுதந்தரம்



சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம், மக்கள் மனதிலே இயற்கையாகவும், தொடர்ந்தும், தோன்றுகிற முறையிலும் அளவிலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. சுதந்திர வேட்கையே மக்கள் உள்ளத்திலே கிடையாது என்பதல்ல இதன் பொருள். சுதந்தரத்தைப் பற்றிய கருத்து அவ்வளவு தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசப்படுவதில்லை.

பெரும்பாலான மக்கள் சுகமாக வாழவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதுதவறும் ஆகாது. அந்தச் சுக வாழ்வுக்கு, என்ன வழி என்று சிந்தித்தபோது கிடைத்த பல எண்ணங்களிலே மிக முக்கியமானது சுதந்தரம் என்ற கருத்து.

ஆதி மனிதன், மிகமிகச் சுதந்தரபுருஷன்--அவன் வரி செலுத்தியதில்லை ---அவனைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டமும் கிடையாது. 144--வது செக்ஷனை அவன் அறியான், வழக்கு மன்றமும் கிடையாது. வாதாடும் முறை கிடையாது. சிறையோ சிரச்சேதமோ கிடையாது. இங்கே நுழையாதே; இதைத் தொடாதே; இப்படிச் செய்யாதே என்று அவன் ஆட்டிவைக்கப்பட்டதில்லை, கண்ணெதிரே தெரிந்த காட்டில் தன்னிச்சையாகத் திரிந்து, பசித்தால் புசித்து, அலுத்தால் உறங்கி, கோபம் வந்தால் கூவி, குதூகலம் வந்தால் ஆடிப்பாடிக் கொண்டுதான் இருந்தான்.

இந்தச் சுதந்தர வாழ்வு, நெடுநாட்களுக்கு அவனுக்குச் சுகவாழ்வு கிடைக்கும் வழி செய்யவில்லை. யாரும் அவளைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் அவனுடைய வாழ்க்கை