பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சுழலில் மிதக்கும் தீபங்கள்


"...உங்க காஃபி நேர்த்தியைச் சொல்லிக் கூட்டிட்டு வந்தேன் கிரி ஆன்டி.”

சிரிஜா மென்மையாகப் புன்னகை செய்கிறாள்.

“உங்களைப் பற்றி ரத்னா நிறையவே சமாசாரம் சொன்னாள்!” அவன் தமிழில்தான் பேசுகிறான்.

கிரிஜா உள்ளே வந்து, காபி கலக்கச் சித்தமாகிறாள்.

சாரு டான்ஸ் சிளாசுக்கும், கவிதா சிநேகிதி வீட்டுக்கும் போயிருக்கிறார்கள். பரத் மேல்மாடியில் மல்ஹோத்ரா பையனுடன் பட்டம் விடுகிறான். கிரிஜா, மாமியாருக்கு சொஜ்ஜி கிளறி வைத்திருக்கிறாள். ரத்னா எல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே வந்து, குளிரலமாரியைத் திறக்கிறாள்.

“கிரி, எதானும் கொறிக்க இருக்கா?”

“இங்க டப்பாவில் தேன்குழல் இருக்கு பார்!”

“ஹாய், சொஜ்ஜியா ஏலக்காய் மணம் வருதேன்னு அதானே பார்த்தேன்.”

சற்றும் தயங்காமல் தட்டில் இரண்டு கரண்டியளவு வைத்துக் கொண்டு தேங்குழலையும் நொறுக்கிப் போட்டுக் கொள்கிறாள். இரண்டு தட்டுக்களையும் ஏந்திக் கொண்டு செல்கிறாள்.

“என்னைக் கேட்கக்கூடாதா, ரத்னா?”

திரும்பிப் பார்க்கிறாள்.

“உன் பாட்டி நேற்று பட்டினி கிடந்தாள் இன்று ரகளை?” அவள் பேசாமல் சிரித்த வண்ணம் முன்னறைக்குப் போகிறாள். தட்டுக்களை அங்கு கொண்டு வைத்துவிட்டு மீண்டும் குளிர் நீரெடுக்க வருகிறாள்.

“ரத்னா, உன்னால் என் நிலைமையைப் புரிஞ்சிக்க முடியாது. என் குடும்ப அமைதியில் நீ தலையிடாதே!”