பக்கம்:சோழர் வரலாறு.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

329



நன்முறையில் நடைபெற்றன; கோவில் கண்காணிப்பு வேலை செவ்வனே நடந்தன; குற்றவாளிகள் அவ்வப்போது தண்டிக்கப்பெற்றனர்.[1]

அரசன் சிறப்புப் பெயர்கள் : இவன் பரகேசரி குலோத்துங்க சோழ தேவன் எனப்பட்டான். ‘திரிபுவன சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவற்றுடன் இவன் வீரராசேந்திரன், குமார குலோத்துங்கன், முடிவழங்கு சோழன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொணட பெருமான், உலகுடைய நாயனார், உலகுடைய பெருமான், உலகுய்ய வந்த நாயனார், இராசாக்கள் தம்பிரான், இராசாக்கள் நாயன்,தனிநாயகன், தியாக விநோதன் முதலியன பெற்றிருந்தான். இவை அனைத்தும் இவனுடைய எண்ணிறந்த கல்வெட்டுகளில் பயின்றுள்ளன. இவற்றுடன் இவனுக்குக் கோனேரின்மை கொண்டான்’ என்றதொரு சிறப்புப் பெயரும் இருந்தது. ‘கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன் திரிபுவன வீரதேவன்’ என்பது இவனது கல்வெட்டு.[2]

தியாக விநோதன் : இப் பெயர்களுள் இவன் பெரிதும் விரும்பியது தியாக விநோதன் என்பது. இதனை இவன் காலத்துமக்கள் வழங்கினர். ‘தியாகவிநோதபட்டன்’, ‘தியாக விநோத மூவேந்த வேளான்’, ‘தியாக விநோதன்’ என்ற பெயர்களைக் கல்வெட்டுகளிற் காணலாம். ஊர்கட்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது.தியாக விநோதன் திருமடம்’ என மடத்துக்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது. ‘தியாக மேகம்’ என்று இராசராசன் வழங்கப்பட்டான்; ‘தியாக சமுத்திரம்’ என்று விக்கிரம சோழன் குறிக்கப்பட்டான்.


  1. 80 of 1925 of 1929.
  2. இதனுடன் வீரராசேந்திரன் கல்வெட்டுத் தொடக்கத்தைக் குழப்பலாகாது.அது ‘வீரசோழ கரிகால சோழ வீரராசேந்திர இராசகேசரி பன்மரான கோனேரின்மை கொண்டான்’ என வரும்.
    Vide M.E.R. 51 of 1931.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/331&oldid=1234336" இலிருந்து மீள்விக்கப்பட்டது