பக்கம்:தமிழின எழுச்சி.pdf/75

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74 • தமிழின எழுச்சி


பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய தலைவர் அவர்களே! வணக்கத்திற்குரிய பாவாணர் அவர்களே! அறிவியல் முனைவர் கோ.து. அவர்களே! மற்றும் இங்குக் கூடியிருக்கும் பேராசிரியப் பெருமக்களே! புலவர் பெருமக்களே! தமிழன்பர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என் பணிவான வணக்கம்.

இந்த மாநாடு தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்ற பெயரிலே கூடியிருக்கின்றது. இது மிகவும் தேவையான ஒரு மாநாடாக இருந்தாலும்கூட, இந்த மாநாட்டு நடைமுறைகளும், இதனுடைய முடிவான கருத்து அறிவிப்பும் பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தியாக எனக்குப் படுகின்றது. ஏனென்றால், கடந்த காலத்திலெல்லாம் யாரையோ ஒருவனைப் பார்த்து, அவன் எங்கிருந்தோ வந்தவன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நாம். ஏதோ மழைக்காக - இருளுக்காக அஞ்சி, நம்முடைய திண்ணையிலே, வெளிப்புறத்திலே வந்து ஒண்ட வந்தவன் போலிருந்து, அத் திண்ணையிலே கொஞ்சம் இடம் கேட்டு உட்கார்ந்து கொண்டு, இப்பொழுது, வீட்டிலுள்ள நம்மைப் பார்த்து. “இந்த வீடு உனக்குச் சொந்தமா? எனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமில்லை; நீ வெளியிலே வா; ஒரு வேளை நான் இதற்குச் சொந்தமாக இருப்பேன்” என்று சொல்லக் கூடிய அளவிலே, சொல்லுகிறது போலவும், நாம் “இல்லை, எங்களுக்குத்தான் சொந்தம் என்று தருக்கமிட்டுக் கொண்டு இருப்பது போலவும் ஆகிய ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது இம் மாநாடு. “தமிழ் தன்னுடைய நிலையிலே வளர வேண்டும்; அதற்குரிய பெருமையைப் பெற வேண்டும்” என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே "தமிழ் எங்குப் பிறந்தது? தமிழன் எங்குப் பிறந்தவன்? - என்று ஆய்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். தமிழனுடைய பிறந்தகம் இதுதான் என்பதிலே ஒரு சிறிதும் ஐயமில்லாமல் இருந்த அந்தநிலை போய், இப்பொழுது 'தமிழனும் வேறு எங்கோ இருந்து இங்கு வந்தவன்' என்று சொல்லக் கூடிய ஒரு கருத்தும் “அப்படியில்லை ; இங்குதான் இருந்தான்; இதுதான் அவனுடைய பிறந்தகம் என்று நாம் எதிர்த்துச் சொல்லக் கூடிய ஒரு நிலையும் நமக்கு உண்டாகியிருப்பது, மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.

தமிழனுடைய பிறந்தகம் எது? அதைத் தீர்மானிக்க வேண்டியவர் யார்? என்கின்ற நிலையெல்லாம் இப்பொழுது இல்லை. தமிழன் இப்பொழுதிருக்கின்ற இந்த நிலையைக்கூட வலுப்படுத்திக் கொள்வானாடி என்று வருந்திக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் நடந்த அந்தச் செய்தியைப் பற்றிப்