பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/143

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

139



மனம் மகிழ்கிறதல்லவா? இறைவன் மன்றத்தில் திருக்கூத்து நிகழ்த்துவதாக இன்றைக்கும் கூறுகின்றார்களன்றோ?

இன்னும் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க சில சுவையான செய்திகள் வருமாறு:—

நீரும் வயலும் சூழ்ந்த ஊருக்குத்தான் ‘கிராமம்’ என்று பெயராம்.

“சுரந்த நீரும் வயலும் சூழ்ந்தஊர்
கிராம மாகக் கிளக்கப் படுமே.”

ஐந்நூறு குடும்பங்களுக்குக் குறையாத கிராமத்திற்குப் ‘பெருங்கிராமம்’ என்று பெயராம்.

“குடி ஐஞ்ஞூறுக்குக் குறைவற நிறைந்தது
பெருங்கிராமம் எனப் பேசப் படுமே.”

சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஊர்—அதாவது, மலைகளுக்கு நடுவே உள்ள ஊர் ‘கேடகம்’ எனப்படும். மலையும் ஆறும் அடுத்த ஊர் ‘கர்வடம்’ எனப்படும். பல பண்டங்கள் விற்கும் கடற்கரை ஊரின் பெயர் ‘பட்டினம்’ என்பதாம். பாடி, புரம் என்பன நகரத்தைக் குறிக்கும் பெயர்களாம். சுற்றிலும் சிற்றூர்கள் சூழ்ந்த பெரிய நகரத்தின் பெயர் ‘மடப்பம்’ என்பதாம். இச்செய்திகளை,

“கிரிபல சூழ அடுத்தஊர் கேடகம்.”

“மலையும் ஆறும் அடுத்தஊர் கர்வடம்.”

“பண்டம் பலகொடு பகரும் கடற்கரை
மன்னும் பதியே பட்டினம் ஆகும்.”

“பாடியும் புரமும் நகரப் பதியே.”

“மருங்கில் ஊர்சூழ் பெரும்பதி மடப்பம்.”

என்னும் பாடல்களால் அறியலாம். மேலும் பலவகை வழிகளின் பெயர்கள் ஈண்டு குறிப்பிடத்தக்கன.

9