பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

மக்சீம் கார்க்கி


அவளது குரல் உடைபட்டுத் தடைப்பட்டது. அவள் ஆடியசைந்தாள்: மயங்கி விழும் நிலையில் தடுமாறினாள், யாரோ அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள்.

“அவள் பேசுவது ஆண்டவனின் உண்மை ; கடவுளின் சத்தியம்!” என்று யாரோ ஒருவன் உணர்ச்சி வேகத்தில் கத்தினான். “கடவுளின் சத்தியம், ஜனங்களே! அதைக் கேளுங்கள்!”

“அவள் எப்படித் தன்னைத்தானே சித்ரவதை செய்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்” என்று இன்னொருவன் பரிவோடு பேசினான்.

“அவள் தன்னைத்தானே சித்ரவதை செய்யவில்லை” என்று மற்றொருவன் பேச ஆரம்பித்தான்.” ஆனால் முட்டாள்களே! அவள் நம்மைத்தான் சித்ரவதைக்கு ஆளாக்குகிறாள். அதை நீங்கள் இன்னுமா அறியவில்லை?”

“உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள்!” என்று ஒரு பெண் நடுநடுங்கும் உரத்த குரலில் கத்தினாள்; “என் மீத்யா-அவன் ஒரு களங்கமற்ற புனித ஆத்மா! அவன் என்ன தவறைச் செய்தான்? தான் நேசிக்கும் தோழர்களைத்தானே அவன் பின்பற்றினான். அவள் சொல்வது ரொம்ப சரி. நாம் ஏன் நமது பிள்ளைகளை நிராதரவாய் நிர்க்கதியாய் விடவேண்டும்? அவர்கள் ஏதாவது தவறு செய்தார்களா?”

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாய் நடுநடுங்கினாள். அமைதியாக அழுதாள்.

“வீட்டுக்குப்போ, பெலகேயா நீலவ்னா!” என்றான் சிஸோவ்; “வீட்டுக்குப் போ, அம்மா, இன்று நீ மிகவும் களைத்துவிட்டாய்!”

அவனது முகம் வெளுத்து, தாடி கலைந்து போயிருந்தது. திடீரென அவன் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் ஒரு கடுமையான பார்வை பார்த்துவிட்டு, அழுத்தமாகப் பேச ஆரம்பித்தான்:

“என் மகன் மத்வேய் எப்படித் தொழிற்சாலையிலே கொல்லப்பட்டான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவன் மட்டும் உயிரோடிருந்தால், நானே அவனை அவர்களுக்குப் பின்னால் அனுப்பி வைப்பேன். ‘நீயும் போது, மத்வேய்! அது ஒன்றுதான் சரியான சத்திய மார்க்கம்; நேர்மையான மார்க்கம்!’ என்று நானே அவனிடம் சொல்வேன்”.

அவனும் திடீரெனப் பேச்சை நிறுத்தி அமைதியில் ஆழ்ந்தான்: எல்லோருமே ஏதோ ஒரு புதிய, பெரிய உணர்ச்சியால், அந்த உணர்ச்சியைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சியின் பிடியில் அகப்பட்டு, மோன சமாதியில் ஆழ்ந்து போனார்கள். சிஸோவ் தன் முஷ்டியை ஆட்டிக்கொண்டு மேலும் பேசத்தொடங்கினான்: