பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன 99


கையையும் அவர் நினைத்துக் கொள்ள வேண்டியவரானார். மேற்படி மஞ்சள் பத்திரிகைக்காரர்களை நேரில் சென்று வம்புக்கு இழுத்துத் திட்டிவிட்டு வந்த தீரத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகக்கூடி அவை எல்லாம் சேர்ந்து அவரைக் குடைந்தெடுத்தன. வெட்கம் பிடுங்கித் தின்றது. ரத்தக் கண்ணீர் சுரந்தோடியது.

அம்மா சாப்பாட்டுக்குக் கூப்பிட்டாள்.

கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தார். அமைதியும் இரங்கி வந்தது!

'இலக்கியத் திருட்டுகள்' பற்றி நடப்பு மாதத்துக்கு எழுதியிருந்த கட்டுரை கம்போஸ் ஆகி வந்திருந்தது. பகிரங்கமாக எழுதியிருந்தார். குற்றவாளிகள் சிலர் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். 'இவர்கள் தங்கள் குற்றங்களை இனியும் உணரா விட்டால், நடக்க விருக்கும் எழுத்தாளர் மாநாட்டிலும் இவர்களை மேடையேற்றிவிட வேண்டியதுதான்!”

ஒரு வாரத்தில் வந்து விடுவதாகக் கூறி வந்தவர். மறுமுறையும் தம் முதலாளிக்குத் தபால் எழுகினர். அதில், தாம் வாணியையே மணக்க முடிவு செய்திருப்பதாகவும் சேர்த்திருந்தார்.

விடிந்ததும், வாணி வருவாள். அவளிடம் நாட்குறிப்பு விருத்தாந்தங்களைப் பற்றி அறிய வேண்டும். இது ஞானசீலனின் திட்டம்.

முகம் கழுவிச் சாப்பிட உட்கார்ந்தார். விபூதி மடல் தெரிந்தது. துளி எடுத்து நெற்றியில் பூசினார்; அமர்ந்தார். திருவாரூர் மாசிலாமணி வந்துபோன விவரம் தெரிவிக்கப்பட்டது. இப்பொழுது அவரைக் கமலாட்சி ஆட்கொண்டாள்!

சில நிமிஷத் தேய்வு.