பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



"வாணி, உன்னுடைய இந்தத் தர்க்கத்தை சினிமாவில் பேசச் சொல்லிக் கேட்டால்கூட, யாரும் இயற்கைக்கு மீறிய 'டயலாக்' என்று ஒதுக்கி விடுவார்களே ! நாவலில் கூட இம்மாதிரிப்பட்ட தியாகங்களைக் காண முடியாதே, வாணி? சிரித்துக் கொண்டிருந்தவனை ஏன் அழச் செய்கிறாய்? சிந்தித்துக் கொண்டிருந்தவனை எதற்காகத் துடிக்கச் செய்கிறாய்? இலக்கண விதி முறைகளைக் கடந்த பாடலாக நீ வேஷம் போட்டு நடிக்க எத்தனை நாட்கள் கனவு கண்டாய்? உன் தியாக மனத்தை நிரூபிக்க நான்தானா அகப்பட்டேன்? என்னை ஆட்டிப் படைக்கத் தவசீலியை ஆண்டவனா உன் கண்களில் காட்டினான்? ஐயோ!" சீறினார்.

"ஸார்...ஸார்!" என்று உணர்ச்சி பீறிட இடை வெட்டிக் கத்தினாள் வாணி. "நான் வேஷம் போட்டு நடிக்கிறேனா? எவ்வளவு லகுவாகச் சொல்லிவிட்டீர்கள்? சரி, நான் வருகிறேன்!” என்று சொல்லிப் புறப்பட்டாள் வாணி.

அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில். "வாணி! வாணி நில்லம்மா!" என்று கூக்குரலிட்டவாறு கோசலை அம்மாள் கதறிய சத்தம் கேட்டது.

ஞானசீலன் ஓடினார். தவசீலியும் விரைந்தாள்.

'விஷம்' என்று லேபிள் ஒட்டப்பட்டிருந்த சின்னச் சீசா ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள் வாணி. விழிப்புனல் வடிந்து கொண்டே யிருந்தது. துணியின் இரு மருங்கிலும் இருபுள்ளிகள் துலாம்பரமாகத் தெரிந்தன.