பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52❖பூவை. எஸ். ஆறுமுகம்



இன்றைய நினைவுகள் பனிதூங்கும் மலர்கள் போல.

நினைவுகள் காலத்தையும் தூரத்தையும் கடந்து வரும் பொழுது, மனிதன் கடந்து வந்த பாதையின் கஷ்டமும் இனிமையும் ஒர் இனிய-சுகமான அனுபவமாகத் தென்படும்.

இதுவே வாழ்வு!

ஞானசீலனுக்குக் காலத்தைப் பற்றித்தான் மித மிஞ்சிய அக்கறை. அக்கறையில் தெரியும் கலங்கரை என அவர் காலத்தைக் கணிப்பார். "ஒவ்வொரு கணத்திலும் மனிதன் சரித்திர மனிதனாக வாழக் கடமைப்பட்டவன் என்கிற பக்தி பூர்வமானதொரு சிந்தனையுடன் வாழ வேண்டும். அப்பொழுதுதான் அவன் சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளக் கூடிய தகுதி பெற்றவன் ஆகிறான். அதன் விளைவாகத்தான், சரித்திரம் அவனையும் ஒரு பொருட்டாக மதிப்பிட்டுக் கொள்கிறது. அதன் பிறகேதான், சரித்திரத்தில் மனிதன் வாழத் தலைப்படுகிறான்,” என்று அடிக்கொரு முறை அவர் சொல்வார்; எழுதுவார்.

இப்பொழுது அவருக்குச் சரித்திரத்தின் முக்கியத்துவம் பிடிகொடுக்கத் தொடங்கியது.

"நான் சரித்திரத்தில் வாழ வேண்டும்; இது என் கனவு. ஆகவே, என் கனவு ஈடேற, நான் கொண்ட காதலை எப்படிப்பட்ட கோணத்திற்குத் திருப்பி அமைக்க வேண்டும்?.ம்...யோசிக்கத்தான் வேண்டும்!"

எண்ணத்தின் முடிவைத் தொடர்புபடுத்திக் கொண்டு அறைக்குள் வந்த ஞானசீலன், உடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.

இடைவேளைக்குப்பின் நிகழுகின்ற எந்த ஒரு நட்பும் அழகாகவும் அன்பாகவுமே அமைந்துவிடுகிறது.