நா. பார்த்தசாரதி
413
பொறுத்தருளுமாறு முதலிலேயே கூறினேன்" என்றான் கொல்லன். அவ்வளவில் கொல்லனிடம் உரையாடுவதை நிறுத்திக் கொண்டு, சந்தனமும், பூக்களும், இளம் பெண்கள் மேனிக்குப் பூசிக் கொள்ளும் நறுமணச் சுண்ணமும் மணக்கும், அந்த ஒலைக் கற்றையைப் பிரித்தான் இளையநம்பி. அவன் அந்தரங்கமான அவ்வோலையைப் படித்து அறியும் போது, தான் அருகில் நின்று அவனுடைய தனிமைக்கு இடையூறாகி விடலாகாது என்று கருதியும், திடும் என்று இரத்தினமாலை அங்கே வந்து விடாமல், கண்காணித்துக் கொள்ள நினைத்தும் விலகி நடந்து சென்று நிலவறையிலிருந்து கணிகை மாளிகைக்குப் படியேறுகிற இடத்தில், நின்று கொண்டான் கொல்லன். தான் நின்ற இடத்தின் பக்கச் சுவரில் சொருகியிருந்த தீப்பந்தத்தின் கீழே போய், அந்த ஒலையைப் படிக்கலானான் இளையநம்பி.
இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஒலை, கோபத்தோடும் தாபத்தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும், தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும், கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில், அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரிய முடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.
“திருக்கானப்பேர் நம்பிக்கு, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள், இந்தப் பேதையை