பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


"பசிக்கொடுமை தானோ, என்னவோ"

பல்வேறு குரல்கள் எங்கிருந்தோ தங்கள் அனுதாபத்தைக் காட்டிக் கொண்டன, அதற்குள் அவனைத் தூக்கிப் பிடித்திருந்த ஊழியர் "காரியதரிசியைக் கூப்பிடுங்க" என்று சத்தமிட்டார். தண்ணீர் வந்து சேர்ந்தது. அந்த ஊழியர்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து விசிறினார்கள்.

காரியதரிசி ராஜுவும் அங்குவந்து சேர்ந்தார்;சுற்றிக் குழுமி நின்ற கூட்டம் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கியது.

"யாரது? என்ன விஷயம்?" என்று கூறிக் கொண்டே , அவனது கை நாடியைப் பிடித்துப் பார்த்தார் ராஜு "ஒண்ணும் ஆபத்தில்லை. மயக்கம்தான்" என்று அவர் வாய் முனகியது. அவர் அந்த ஊழியர்களைப் பார்த்து, "எதற்கு இத்தனை கூட்டம்? இவரை உள்ளே எடுத்து வாருங்கள்" என்று கூறியவாறே எழுந்திருந்து காரியாலயத்துக்குள் சென்றார்; ஊழியர்கள் அவனைக் காரியாலய வெளி வரந்தாவில் கொண்டு வந்து சேர்த்தனர்.

"இவர் யார் தெரியுமா?"

"தெரியலியே!"

அதற்குள் அங்கு குழுமி நின்ற கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்;"யாரோ தெரியலை. டவுன்ஹால் பக்கம் இவர் நம்ம ஊர்வலத்திலே வந்து கலந்துக்கிட்டதை நான் பார்த்தேன்,"

சிறிது நேரத்தில் அவனுக்குப் பிரக்ஞை மீளத் தொடங்கியது. கை கால்கள் அசைந்தன; நெடுமூச்சு வாங்கியது; உதடுகளும் கண்ணிமைகளும் லேசாகத் துடித்தன. அவன் கண்களைத் திறந்து சுற்று முற்றும் வெறிக்க வெறிக்கப் பார்த்தான்:

"தண்ணீர்!" அவன் குரல் உள்வாங்கி விக்கி ஒலித்தது.