எனக்கு என்றுமே காமராஜர் மீது அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. காந்திஜிக்கு அடுத்தபடியாக நான் மதித்த தலைவர் அவர் ஒருவர்தான். அவரோடு நான் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். அம்மாதிரி நேரங்களில் அவருடன் நிறையப் பேசி அவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய எளிமை, நேர்மை, ஏழைகளின் மீது காட்டிய கருணை போன்ற உயர்ந்த பண்புகள் அவரை உயரத்தில் கொண்டு வைத்து விட்டன. பயணங்களின் போது பேச்சு வாக்கில் என்னைப் பற்றி எப்போதாவது அவர் விசாரிப்பதுண்டு. அவரிடம் நான் என்றைக்கும் எந்தவிதமான சொந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்ததில்லை. இதை அவர் நன்கு அறிந்து கொண்டிருந்ததால்தான் என்னை அத்தனை நெருக்கமாகப் பழகுவதற்கு அனுமதித்தார்.
ஒரு நாள் அவர் என்னைக் கேட்டார்:
“என்ன, சொந்தமா வீடு கீடு ஏதாவது வச்சிருக்கீங்களா?”
“இல்லை.”
“இப்படியே இருந்தா எப்படி? நீங்க வெங்கட்ராமனைப் பாருங்க” என்றார் அவராகவே.
அப்போது திரு ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வீட்டு வசதி அமைச்சராக இருந்தார். நான் காமராஜர் சொன்னார் என்பதற்காக வெங்கட்ராமனைப் போய்ப் பார்க்கவில்லை.
ஆனாலும் ஒருநாள் அவரைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு காரணமாக ஏற்பட்டது. ‘சத்ய சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி. அதற்கு நான் செயலாளராக இருந்த போது ஒருநாள்