இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
109
கடைசியில், இட்லியும் உப்புமாவும் சாப்பிட்ட பிறகே என்னை வெளியே அனுப்பினார்.
பதினாறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என் மூத்த மகள் ஜெயந்தியின் திருமணத்துக்கு நாயுடு அவர்கள் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு பாக்கெட் கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். அந்தப் பரிசை என் மகள் என்னிடம் கொடுத்து “அப்பா! நாயுடு உங்களுக்குத்தான் கொடுத்திருப்பார், ஆகையால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டாள். கோலி போன்ற கண்ணாடிக் கூண்டு வடிவத்தில் அமைந்துள்ள அந்த ஜெர்மன் கடிகாரம் இன்றும் இன்னமும் இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
எனக்கு நாயுடு அவர்களின் நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கடிகாரத்தை எடுத்து வாஞ்சையோடு பார்ப்பேன். மெலிதான அதன் விநாடிமுள் துல்லியமாக நகரும்போது நாயுடு அவர்களே நேரில் வந்து உரையாடுவது போல், ஒரு பிரமை தோன்றும்!