123
நேராக உள்ளே போனேன். போலீஸ் வேலையில் சேர வந்திருப்பதாகச் சொன்னேன்.
உடனே என்னை உட்காரச் சொன்னார்கள். பிறகு எழுந்திருக்கச் சொன்னார்கள். மார்பு அளவு, உயரம், எடை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.
“எல்லாம் சரியாக இருக்கிறது. நாளை காலை எட்டு மணிக்கு வந்துவிடு தம்பி! வேலூருக்குப் போக வேண்டியிருக்கும். அங்கேதான் ட்ரெயினிங். ஆகவே, காலையில் வரும்போதே உன் துணிமணியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடு” என்றார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விடும் என்று நான் எண்ணவில்லை. “சரி. வருகிறேன்” என்று சொல்லி அவர்கள் கொடுத்த பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் மறுநாள் நான் போகவில்லை. அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விட்டதாலோ என்னவோ எனக்கு அந்த வேலைக்குப் போவதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. அத்துடன் மறுநாள் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் பெரிய விருந்து நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். விருந்து சாப்பாட்டை விட்டுச் செல்ல மனம் இல்லாததும் ஒரு காரணம்.
ஒருவேளை, அன்று நான் போலீஸ் உத்தியோகத்தில் சேர்ந்திருந்தால் இன்று ஒரு ‘கிராக்கி’யாக ஆகியிருப்பேனோ என்னவோ!