பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற திரு ஜி. டி. நாயுடுவின் மகன் கோபால் திருமணத்திற்கு நான் போயிருந்தேன்.
என்னைக் கண்டதும் திரு நாயுடு அவர்கள் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “நீங்கள் இன்று முழுதும் என் பக்கத்திலேயே இருக்க வேண்டும்; என்னுடனையே சாப்பிடலாம்” என்று ஓர் உத்தரவு போல் கூறிவிட்டார். அவர் பேச்சைத் தட்ட முடியாமல் நான் அன்று முழுதும் அவர் கூடவே இருந்தேன்.
சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய், “வாங்க. சமையல்கட்டு வரை போயிட்டு வரலாம்” என்று என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே சமையல் ஏக தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கூடை கூடையாக அப்பளங்களைப் பொரித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நாயுடுவின் முகம் ஒரு மாதிரியாக மாறியது. விடுவிடுவென்று எல்லா அப்பளக் கூடைகளையும் குழாயடிக்கு இழுத்துச் சென்று குழாயைத் திறந்து விட்டு விட்டார். சில வினாடிகளில் அவ்வளவு அப்பளங்களும் நனைந்து ஊறிப் பஞ்சாய் அமுங்கிப் போயின. அப்புறம்தான் நாயுடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“இவ்வளவு அப்பளங்களையும் தண்ணீரில் நனைத்து வீணாக்கி விட்டீர்களே” என்பது போல் நான் ‘த்சூ!’ கொட்டினேன்.
நாயுடு சொன்னார்: