பக்கம்:மயில்விழி மான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

23

ஊரில் எனக்குச் சங்கீதத்தில் மோகமுள்ளவன் என்று எப்போதும் ஒரு பெயர் உண்டு. என்னுடைய சங்கீதக் கிறுக்கு ஒரு நாள் என்னைச் சங்கடத்தில் மாட்டி வைக்கப் போகிறது என்று என் நண்பர்கள் எச்சரித்ததும் உண்டு. அது இச்சமயம் உண்மையாயிற்று. அந்தப் பெண் இரண்டாவது அடியைப் பாடி முடிப்பதற்குள் நான் என்னை மறந்து பலமாகத் தாளம் போட ஆரம்பித்து விட்டேன்.

அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அதற்கு முன் அம்மாதிரி அதிசயத்தை என்றும் கண்டறியாதவள் போல் அத்தனை வியப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

"மிச்சப் பாட்டையும் பாடு! ரொம்ப நன்றாயிருக்கிறது! எங்களூர்க் கலாமணி பாடிய பாடல் மாதிரியல்லவோ இருக்கிறது?" என்றேன்.

அந்தப் பெண் தட்டுத் தடுமாறி "நீர் யார், உமக்கு எந்த ஊர்?" என்று கேட்டாள்.

"எனக்கு இந்தியதேசம். இந்தியா தேசத்தில் எஞ்சியுள்ள மதராஸ் ராஜ்யத்தைச் சேர்ந்தவன்."

"அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?"

"ஓகோ! உனக்குப் பூகோள சாஸ்திரமே தெரியாது போல் இருக்கிறது. பிறகு விவரமாகச் சொல்கிறேன். அந்தப் பாட்டை பாடி முடி!"

"பாட்டு உமக்கு ரொம்பப் பிடிக்குமோ?"