மயில்விழி மான்
27
"இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதன்!"
இதைக்கேட்டு நான் அடைந்த அதிசயத்தைக் காட்டிலும் அவளுடைய பெயரை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாயிற்று.
"உன் பெயர் என்னவோ?"
"மயில்விழி மான்!"
"என்ன என்ன? நீ இப்போது சொன்னது உன் பெயரா? அல்லது உன்னைப் பற்றிக் கவிஞரின் வர்ணனையா?"
"என் பெயர் தான்! இப்போது இங்கே கவிஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்னமோ? நீங்கள் ஏதோ ஒரு தேசத்திலிருந்து வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே பக்கத்தில் செந்தமிழ் நாடு என்று எங்கேயாவது இருக்கிறதா?" என்று கேட்டாள்.
"மயில்விழி மானே! கேள். இந்தியா தேசத்தில் ஒரு பகுதிதான் செந்தமிழ் நாடு. நானே செந்தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான். மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்!" என்றேன் நான்.
"எந்த மதுரை? தமிழ்ச்சங்கம் இருந்ததே அந்த மதுரையா?"
"அதே மதுரைமா நகரந்தான்!"
"இன்னும் அங்கே சங்கம் இருக்கிறதா?"