பக்கம்:மயில்விழி மான்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக் 'கடவுளின் கருணை மழை' என்றார்கள். வேறு சிலர், "இப்படிப் பயங்கரமான புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?" என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில் மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி நேர்ந்தது.

கதையோ, கட்டுரையோ, விறுவிறுப்பாக ஓட வேண்டும் என்றால் அதை ரெயிலிலே ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இந்தக் கதை என்னமோ ரெயிலிலேதான் ஆரம்பமாகிறது. அதிலும் ஸிலோன் போட் மெயிலில் ஆரம்பமாகிறது. ஆனாலும் என்ன பயன்? அதிவிரைவாகச் செல்ல வேண்டிய அந்த ரெயில் சீர்காழிக்கும் வைத்தீசுவரன் கோயிலுக்கும் நடுவில் சுமார் மூன்று மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டது.