பக்கம்:மயில்விழி மான்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

83

"அப்படி இருக்கும் போது, நான் எந்த ராகத்தில் பாடினால் என்ன? எப்படிப் பாடினால் என்ன?" என்றாள் நீலமணி.

"மாமா! உங்கள் மகளுக்குக் கர்வம் அசாத்தியமாகத் தலைக்கேறிவிட்டது. இனி உருப்படப் போவதேயில்லை. ஊரில் உள்ள முட்டாள் பயல்கள் எல்லம் 'ஆஹு' என்று புகழ்ந்து இப்படி இவளைக் கர்வம் பிடிக்கச் செய்துவிட்டார்கள்!" என்று குறைப்பட்டான் நமச்சிவாயம்.

"ஊரில் உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் அவர்களுக்குத்தானே நாம் நாடகம் ஆடுகிறோம்? நாம் மட்டும் என்ன?" என்றாள் நீலமணி.

"கேட்டீர்களா, மாமா! இவள் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டுவதை! இவளை மேடையில் ஏற்றி நாடெங்கும் புகழ்பெற்ற நாடகக்காரியாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! இல்லையா?" என்றான் நமச்சிவாயம்.

அதற்குப் பதில் நீலமணி என்னமோ சொல்லத் தொடங்கிச் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.

இதையெல்லாம் கேட்டு எனக்கு உண்மையிலேயே சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் போய்விட்டது. அந்தச் சந்தேகமான நிலையில் சிரித்துத்தான் வைப்போமே என்று உடம்பு குலுங்கச் சிரித்தேன்.