பக்கம்:மயில்விழி மான்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

85

இருவரும் ஒப்புக்கொண்டு என்னையே முகூர்த்த நாள் பார்க்கும்படி சொன்னார்கள். நான் உடனே மறுவாரத்திலேயே முகூர்த்த நாள் குறிப்பிட்டேன். இரண்டு பேரையும் பொறுக்கியெடுத்த சில சிநேகிதர்களையும் மட்டும் திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று திருமணத்தைச் சுருக்கமாக முடித்து வைத்தேன். பிறகு, நிம்மதியுடன் ஊருக்குத் திரும்பினேன்.

5

திருமணத்துக்கு நான் குறிப்பிட்ட முகூர்த்த நாளில் என்ன கோளாறு இருந்ததோ தெரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிச் சில நாளைக்குள்ளே இடி விழுந்தாற் போன்ற செய்தி சென்னையிலிருந்து வந்து விட்டது. நீலமணி கடித்தத்துக்கு மேல் கடிதமாக எழுதியிருந்த நாலைந்து கடிதங்களையும் சுசீந்திரம் உற்சவக் கச்சேரிக்குப் போய்த் திரும்பி வந்த பிறகு சேர்ந்தாற்போல் படித்ததில் துயரமும் பீதியும் கொள்ளும்படி நேர்ந்தது.

நான் சென்னைக்குப் போயிருந்த போதே நமச்சிவாயத்தின் தொண்டை கம்மியிருந்ததையும் அவன் கமறிக் கமறி அடிக்கடி இருமியதையும் கவனித்தேன். உடம்பும் சிறிது இளைத்திருந்தது. சென்னையில் நாள்தோறும் இடைவிடாமல் நாடகம் நடந்து வந்தது தான் இதற்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.