7
அவன் தினமும் காலை வேளைகளில் ஏரிக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான்.
அங்கிருந்து திரும்பும்போது அவனைப் பார்த்த குடியானவன் ஒருவன், "யாரு சாமி, தென்னமரத்து வூட்டு மருமகப் புள்ளெதானே? ஏஞ்சாமி, பெஞ்சாதி குளிகுளிச்சிருக்குதாமே? எப்பத்தான் பட்டணத்தாவுக்கு இட்டுகினு போவப் போறே?” என்று கபடம் இல்லாமல் கேட்டான்.
இங்கிதம் தெரியாத கிராமத்துப் பாமர மக்களுக்கு எதையும் வெளிப்படையாகப் பேசித்தான் பழக்கம்.
கிராமத்துப் பெண்கள் தென்னை மரத்து வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க வரும் சாக்கில் சுந்தரத்தின் காதில் கேட்கும்படியாக அசட்டுப் பிசட்டென்று ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார்கள்.
கோடி வீட்டுப் பொன்னம்மாள் சுந்தரத்தின் மாமியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்:
"ஏண்டியம்மா! ஒண்ணாச்சு, இரண்டாச்சு. குடும்பம் பெரிசாயிண்டே போறது. அவனுக்கோ கொஞ்சங்கூடப் பொறுப்பைக் காணோம் இப்படியே எத்தனை நாளைக்குத் தான் நீ உன் பெண்ணை வைத்துக் காப்பாற்றப் போகிறாய்?"
இவ்வார்த்தைகள் சுந்தரத்தின் இதயத்தில் சுருக்கெனத் தைத்தன. கிராம வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது; சகவாசம்தான் பிடிக்கவில்லை.
}மணி நாலு இருக்கும். "மல்லி...யப்!” என்று வழக்கமாகக் கூவிக் கொண்டு வரும் பூக்காரப் பெண்ணின் குரல் கேட்டது.
சுந்தரத்தின் மனைவி வெளியே வந்து நின்றாள். "ஏம்மா, உங்க வூட்டுக்காரரா வந்திருக்காரு? பட்டணம் போவப் போறியாம்மா?" என்று அந்தப் பெண் கேட்டாள்.
“போடி, உனக்கெதுக்கு அந்தச் சங்கதியெல்லாம்?... பூவைப் பாரு! விட்டு விட்டு வெலத்தியாகத் தொடுத்திருக்-