திருவாசகம்/குழைத்த பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"குழைத்தால், பண்டைக் கொடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:04, 14 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன்

உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;

பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? 'பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று

அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே


அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;

கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, `ஆ! ஆ!' என்று அருளி,

செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!

உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?


ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை,

இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!

குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால்,

என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!


மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்

ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்;

ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,

கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே?


கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!

தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!

வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,

தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?


வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;

வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?


அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?

இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?


நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்;

மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,

ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?

காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!


கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர;

எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால்

மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்

அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!


அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே!

திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;

புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,

குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!


திருச்சிற்றம்பலம்