திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 11 முதல் 13 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

01:48, 27 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

"ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்." (எபிரேயர் 11:11-12)

அதிகாரம் 11

7. நம்பிக்கையின் மேன்மை


1 நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி;
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.
2 இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.


3 உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும்
காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும்
நம்பிக்கையாலேயே புரிந்து கொள்கிறோம். [1]


4 நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட
மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார்.
அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார்.
அவருடைய காணிக்கைகளைக் குறித்துக் கடவுளே சான்று பகர்ந்தார்.
இறந்துபோன போதிலும் இந்த ஆபேல் நம்பிக்கையின் மூலம்
இன்னும் பேசிக் கொண்டேயிருக்கிறார். [2]


5 நம்பிக்கையாலேயே ஏனோக்கு சாவுக்குட்படாதபடி
கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
கடவுள் அவரை எடுத்துக் கொண்டதால் அவர் காணாமற் போய் விட்டார்.
அவர் மேலே எடுத்துக் கொள்ளப்படும் முன்பே
கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார். [3]
6 நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது.
ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும்
அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.


7 நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது,
தம் குடும்பத்தைக் காப்பாற்ற,
கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான்.
அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து
இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான். [4]


8 ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து,
உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான்.
தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். [5]
9 வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி
ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே.
அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான யாக்கோபுடனும்
அவர் கூடாரங்களில் குடியிருந்தார். [6]
10 ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார்.
அதைத்திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.
11 ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும்,
அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். [7]
ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். [8]


12 இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து
வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும்
கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். [9]
13 இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்;
வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும்,
தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்;
இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும்
தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். [10]
14 இவ்வாறு ஏற்றுக் கொள்வோர்
தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு.
15 தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை.
அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
16 ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை,
அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள்.
அதனால்தான் கடவுளும் தம்மை, "அவர்களுடைய கடவுள்" என்று
அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை.
அவர்களுக்கென அவர் ஒருநகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.


17-18 ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது
ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான்.
"ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்" என்ற
வாக்குறுதியை அவர் பெற்றிருந்த போதிலும்,
அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். [11] [12]
19 ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர்
என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார்.
பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.


20 ஈசாக்கு, பிற்காலத்தில் நிகழவிருந்தவற்றைக் குறிப்பிட்டு,
யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி வழங்கியது நம்பிக்கையினால்தான். [13]


21 யாக்கோபு தாம் இறக்கும்முன்
யோசேப்பின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கியதும்
தம் ஊன்றுகோலின்மேல் சாய்ந்து கடவுளைத் தொழுததும் நம்பிக்கையினால்தான். [14]


22 இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டு வெளியேறுவர் என்று
இறக்கும் தறுவாயிலிருந்த யோசேப்பு குறிப்பிட்டதும்
தம் எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்று பணித்ததும் நம்பிக்கையினால்தான். [15]


23 மோசே பிறந்தபோது, குழந்தை அழகாய் இருக்கக்கண்டு,
அவருடைய பெற்றோர் அரசனுடைய ஆணைக்கும் அஞ்சாது,
மூன்று மாதம் அவரை ஒளித்து வைத்திருந்ததும் நம்பிக்கையினால்தான்.


24 மோசே பெரியவரான பின்பு
பார்வோனுடைய மகளின் மகன் என
அழைக்கப்பட மறுத்ததும் நம்பிக்கையினாலேதான்.
25 பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதைவிட,
கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுவதையே அவர் தேர்ந்து கொண்டார்.
26 ஏனெனில், தமக்குக் கிடைக்கவிருந்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்தி,
அவர் எகிப்தின் செல்வங்களைவிட,
'மெசியாவின்' பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார்.


27 அரசனுடைய சீற்றத்திற்கு அஞ்சாது,
அவர் எகிப்தைவிட்டு வெளியேறியதும் நம்பிக்கையினால்தான்;
கண்ணுக்குப் புலப்படாதவரைக் கண்ணால் பார்ப்பவர் போன்று உறுதியாய் இருந்தார்.
28 அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும்
தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி
இரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால்தான்.


29 இஸ்ரயேலர் கட்டாந்தரையைக் கடப்பது போன்று
செங்கடலைக் கடந்து சென்றது நம்பிக்கையினால் தான்.
ஆனால் எகிப்தியர் அதைக் கடக்க முயன்றபோது மூழ்கிவிட்டனர். [16]


30 இஸ்ரயேலர் ஏழுநாள் வலம் வந்த பின்னர்,
எரிகோவின் மதில்கள் விழுந்ததும் நம்பிக்கையினால்தான். [17]
31 விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று,
கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான். [18]
32 இன்னும் கூறவேண்டுமா?
கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு,
தாவீது, சாமுவேல் ஆகியோர்பற்றியும்,
இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. [19]
33 நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்;
நேர்மையாகச் செயல்பட்டார்கள்;
கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்;
சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; [20]
34 தீயின் கொடுமையைத் தணித்தார்கள்;
வாள்முனைக்குத் தப்பினார்கள்;
வலுவற்றராயிருந்தும் வலிமை பெற்றார்கள்;
போரில் வீரம் காட்டினார்கள்;
மாற்றார் படைகளை முறியடித்தார்கள். [21]
35அ பெண்கள் இறந்த தம் உறவினரை
உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள்.
35ஆ உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு,
சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர். [22]
36 வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்;
விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். [23]
37 சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்;
வாளுக்கு இரையாகி மடிந்தனர்;
செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும்
போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்;
வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். [24]
38 அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று.
மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும்
பாலை வெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.


39 இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள்.
ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.
40 ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவு பெற முடியும்


குறிப்புகள்

[1] 11:3 = தொநூ 1:1; திபா 33:6,9; யோவா 1:3.
[2] 11:4 = தொநூ 4:3-10.
[3] 11:5 = தொநூ 5:21-24.
[4] 11:7 = தொநூ 6:13-22.
[5] 11:8 = தொநூ 12:1-5.
[6] 11:9 = தொநூ 35:27.
[7] 11:11 - "சாரா வயது முதியவராயிருந்தும் ஒரு தாய் ஆவதற்கு
அவர் ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான்" எனவும்
இச்சொற்றடரை மொழிபெயர்க்கலாம்.
[8] 11:11 = தொநூ 18:11-14; 21:2.
[9] 11:12 = தொநூ 15:5; 22:17; 32:12.
[10] 11:13 = தொநூ 23:4; 1 குறி 29:15; திபா 39:12.
[11] 11:17 = தொநூ 22:1-14.
[12] 11:18 = தொநூ 21:12.
[13] 11:20 = தொநூ 27:27-29,39,40.
[14] 11:21 = தொநூ 47:31-48:20.
[15] 11:22 = தொநூ 50:24,25; விப 13:19.
[16] 11:29 = விப 14:21-31.
[17] 11:30 = யோசு 6:12-21.
[18] 11:31 = யோசு 2:1-21; 6:22-25.
[19] 11:32 = நீத 6:11-8:32; 4:6-5:31; 11:1-12:7; 1 சாமு 16:1;
1 அர 2:11; 1 சாமு 1:1-25:1.
[20] 11:33 = தானி 6:1-27.
[21] 11:34 = தானி 3:1-10.
[22] 11:35 = 1 அர 17:17-24; 2 அர 4:25-37.
[23] 11:36 = 1 அர 22:26,27; 2 குறி 18:25,26; எரே 20:2; 37:15; 38:6.
[24] 11:37 = 2 குறி 24:21.


அதிகாரம் 12

ஆண்டவர் அளிக்கும் பயிற்சி


1 எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க
எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு,
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.
2 நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும்
அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.
அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு,
இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்.
இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.


3 பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும்
மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள்.
அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள்.
4 பாவத்திற்கு எதிரான போராட்டத்தில்,
இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
5 தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன்
உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்:


"பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை


வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.


அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே."


6 "தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்;


ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ


அவர்களைக் கண்டிக்கிறார்." [1]


7 திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்.
தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?
8 எல்லாப் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் தண்டனை உங்களுக்கு அளிக்கப்படாவிட்டால்,
நீங்கள் உண்மையான பிள்ளைகளாய் இருக்க மாட்டீர்கள்;
முறை தவறிப் பிறந்த பிள்ளைகளாகவே இருப்பீர்கள்.
9 இவ்வுலகத் தந்தையர் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்.
நாமும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தோம்.
அவ்வாறாயின், விண்ணகத் தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து வாழ வேண்டும் அன்றோ?
10 மேலும், இவ்வுலகத் தந்தையர் தங்களுக்கு நலமெனத் தோன்றின வகையில்
சிறிது காலம் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்.
ஆனால் கடவுள், நமது நலனுக்காக,
நாமும் அவருடைய தூய்மையில் பங்குகொள்ள வேண்டுமென்பதற்காகவே
நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.
11 இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல்,
துயரத்துக்குரியதாகவே தோன்றும்.
ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள்
அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
12 எனவே,


"தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்,
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்." [2]


13 "நீங்கள் நேர்மையான பாதையில்
நடந்து செல்லுங்கள்."


அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

கடவுளின் அருளைப் புறக்கணித்து விடாதபடி எச்சரிக்கை


14 அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்;
தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்.
15 உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள்.
கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும்
அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
16 உங்களுள் யாரும் காமுகராயும்
ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள்.
இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத்
தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார். [3]
17 பின்னர் அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும்
அது அவருக்குக் கிடைக்கவில்லை;
கண்ணீர் சிந்தி அதை நாடியும் அந்நிலையை மாற்ற வாய்ப்பு ஏதும் கிட்டவில்லை.
இது உங்களுக்குத் தெரியும் அல்லவா! [4]


18 நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய,
தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான,
சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.
19 அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது.
அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது
ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். [5]
20 ஏனெனில்,


"இம்மலையைக்


கால்நடை தொட்டால்கூட


அதைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்"


என்று அக் குரல் கொடுத்த கட்டளையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. [6]
21 "நான் அஞ்சி நடுங்குகிறேன்" என்று மோசேயே சொல்லுமளவுக்கு
அக்காட்சி அச்சம் விளைவித்தது. [7]


22 ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை
வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம்.
அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23 விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை
விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது.
நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து,
அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய
இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.
ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச்
சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள். [8]


25 எனவே, கடவுளின் வார்த்தைக்குச் செவி சாய்க்க
மறுத்து விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வுலகில் அவரது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்தவர்கள்
தண்டனைக்குத் தப்பவில்லை.
அவ்வாறெனில் விண்ணுலகிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால்,
நாம் எவ்வாறு தப்பித்துக் கொள்ள முடியும்? [9]
26 அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது.
இப்பொழுது அவர்,


"இன்னும் ஒரு முறை மண்ணுலகை மட்டும் அல்ல,
விண்ணுலகையும் நடுக்கமுறச் செய்வேன்"


என்று உறுதியாக வாக்களித்துள்ளார். [10]
27 "இன்னும் ஒரு முறை" என்பது,
அதிர்பவை யாவும் படைக்கப்பட்டவை என்னும் முறையில் அகற்றப்படும்
என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அப்போது அசையாதவையே நிலைத்து நிற்கும்.


28 ஆதலின், அசைக்கமுடியாத அரசைப் பெற்றுக்கொண்ட நாம்,
நன்றியுள்ளவர்களாய் இருப்போம்.
நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும்,
அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம்.
29 ஏனெனில்,


"நம் ஆண்டவர் அழிக்கும் நெருப்பு போன்றவர்." [11]


குறிப்புகள்

[1] 12:5,6 = யோபு 5:17; நீமொ 3:11,12.
[2] 12:12 = எசா 35:3.
[3] 12:16 = தொநூ 25:29-34.
[4] 12:17 = தொநூ 27:30,40.
[5] 12:18,19 = விப 19:16-22; 20:18-21; இச 4:11,12; 5:22-27.
[6] 12:20 = விப 19:12,13.
[7] 12:21 = இச 9:19.
[8] 12:24 = தொநூ 4:10.
[9] 12:25 = விப 20:22.
[10] 12:26 = ஆகா 2:6.
[11] 12:29 = இச 4:24.


அதிகாரம் 13

8. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை


1 சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
2 அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள்.
இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர்
தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. [1]
3 சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி
அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால்,
துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.
4 திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்.
மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்.
காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.


5 பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்.
ஏனெனில்,


"நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்!
உன்னை விட்டு விலகமாட்டேன்"


என்று கடவுளே கூறியிருக்கிறார். [2]
6 இதனால், நாம் துணிவோடு,


"ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்;
மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?"


என்று கூறலாம். [3]


7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன
உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள்.
அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து,
நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.
8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
9 பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள்.
உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல,
அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது.
உணவு விதிகளைக் கடைப்பிடித்தவர்கள் எப்பயனும் அடைந்ததில்லை.


10 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு.
அதில் படைக்கப்பட்டவற்றை உண்பதற்குக்
கூடாரத்தில் திருப்பணி செய்கிறவர்களுக்கு உரிமையில்லை.
11 விலங்குகளின் இரத்தத்தைப் பாவம் போக்குவதற்கென
தலைமைக் குரு தூயகத்திற்குள் எடுத்துச் செல்கிறார்.
ஆனால், அந்த விலங்குகளின் உடல்கள் பாளையத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன. [4]
12 இதனால்தான், இயேசுவும்,
தம் சொந்த இரத்தத்தால் மக்களைத் தூயவராக்க நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார்.
13 ஆகவே, நாமும் அவருக்கு ஏற்பட்ட இகழ்ச்சியில் பங்கு கொண்டு,
பாளையத்தை விட்டு வெளியேறி அவரிடம் செல்வோம்.
14 ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை;
வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்.
15 ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம்
கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக.
அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக
நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.
16 நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள்.
இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.


17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள்.
அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால்
உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள்.
இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள்.
அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள்.
அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.
18 எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
நாங்கள் நல்ல மனச்சான்று கொண்டுள்ளோம் என உறுதியாக நம்புகிறோம்.
அனைத்திலும் நன்னடத்தை உடையவர்களாய் இருக்கவே விரும்புகிறோம்.
19 உங்களிடம் நான் மீண்டும் விரைவில் வந்து சேரும்படி
நீங்கள் இறைவனை வேண்ட உங்களை வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்.

9. இறுதி வாழ்த்துரை


20 என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால்,
ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை
இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.
21 அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி,
எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி
இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!
இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

9. முடிவுரை


22 சகோதர சகோதரிகளே,
நான் உங்களுக்குக் கூறும் இந்த அறிவுரையைப்
பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
23 நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்.
அவர் விரைவில் வந்து சேர்ந்துவிட்டால்
அவரோடு நான் உங்களை வந்து பார்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


24 உங்கள் தலைவர்கள் அனைவருக்கும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
இத்தாலியா நாட்டிலிருந்து இங்கே வந்திருப்போர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.


25 இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!


குறிப்புகள்

[1] 13:2 = தொநூ 18:1-8; 19:1-3.
[2] 13:5 = இச 31:6,8; யோசு 1:5.
[3] 13:6 = திபா 118:6.
[4] 13:11 = லேவி 16:27.


(எபிரேயர் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): புதிய ஏற்பாடு - பொதுத் திருமுகங்கள்: முன்னுரை