திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யாக்கோபு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 4 முதல் 5 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
"{{தலை | தலைப்பு = திருவிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

23:44, 28 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

"இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்" எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், "ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்; இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே முறை." (யாக்கோபு 4:13-15)

அதிகாரம் 4

உலகத்தோடு நட்பு


1 உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன?
உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா?
2 நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்;
போராசை கொள்கிறீர்கள்;
அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள்.
அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை.
3 நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை?
ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்;
சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
4 விபசாரர் போல செயல்படுவோரே,
உலகத்தோடு நட்புக்கொள்வது கடவுளைப் பகைப்பது
என்பது உங்களுக்குத் தெரியாதா?
உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார்.
5-6 அல்லது "மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார்.
அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது என
மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா?
ஆகவே,


"செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார்.
தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்"


என்று மறைநூல் உரைக்கிறது.


7 எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்;
அலகையை எதிர்த்து நில்லுங்கள்.
அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.
8 கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார்.
பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்.
இரு மனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.
9 உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள்.
உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும்.
10 ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

பிறரிடம் குற்றம் காண்போருக்கு எச்சரிக்கை


11 சகோதர சகோதரிகளே,
உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம்.
தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர்
அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர்
திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்;
அச்சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கின்றனர்.
சட்டத்துக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு அளிக்கும்போது
நீங்கள் அதைக் கடைப்பிடிப்பவராக அல்ல,
மாறாக அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கும் நடுவர்களாக ஆகிவருகிறீர்கள்.
12 திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பு அளிப்பவரும் ஒருவரே.
அவரே மீட்கவும் அழிக்கவும் வல்லவர்.
அவ்வாறிருக்க உங்களை அடுத்திருப்பவருக்குத் தீர்ப்பளிக்க நீங்கள் யார்?

வீம்பு பேசுவோருக்கு எச்சரிக்கை


13 "இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய்
அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்;
பணம் ஈட்டுவோம்" எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள்.
14 நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே!
நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்.
15 ஆகவே அவ்வாறு சொல்லாமல்,
"ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்;
இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே முறை.
16 இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள்.
இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது.
17 நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும்
அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.


அதிகாரம் 5

செல்வர்களுக்கு எச்சரிக்கை


1 செல்வர்களே, சற்றுக் கேளுங்கள்.
உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்.
2 உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.
உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.
3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன.
அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்;
அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும்.
இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!
4 உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய
கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது.
அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
5 இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள்.
கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.
6 நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள்.
ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

பொறுமையும் வேண்டுதலும்


7 ஆகவே, சகோதர சகோதரிகளே,
ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள்.
பயிரிடுபவரைப் பாருங்கள்.
அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து
முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.
8 நீங்களும் பொறுமையோடிருங்கள்.
உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்.
ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.


9 சகோதர சகோதரிகளே,
நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு,
ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்.
இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.
10 அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும்
பொறுமையைக் கடைபிடிப்பதிலும்
ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை
உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
11 தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம்.
யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
இறுதியில் ஆண்டவர் என்ன செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.


12 எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதர சகோதரிகளே,
நீங்கள் ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள்.
நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள்.
அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.


13 உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்;
மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.
14 உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால்,
திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள்.
அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி
இறைவனிடம் வேண்டுவார்கள்.
15 நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்.
ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார்.
அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.
16 ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள்.
ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
அப்பொழுது குணமடைவீர்கள்.
நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.
17 எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம்.
அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்;
மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று.
18 மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்;
வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.


19-20 என் சகோதர சகோதரிகளே,
உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறிதவறி அலையும்போது,
வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால்,
தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும்
திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


(தொடர்ச்சி): பேதுரு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 3 வரை