திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:35, 1 மே 2013 இல் நிலவும் திருத்தம்

"அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். 'ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்' என்று பாடினார்கள்." (திருவெளிப்பாடு 7:11-12)


அதிகாரம் 7

புதிய இஸ்ரயேல்


1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன்.
உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு
காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன்.
வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது.
நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும்
அவர் உரத்த குரலில் அழைத்து,
3 "எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில்
நாங்கள் முத்திரையிடும்வரை
நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்"
என்று அவர்களிடம் கூறினார்.
4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைப்பற்றிச் சொல்லக் கேட்டேன்.
இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள்
ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.


5 யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம்,


ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
6 ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
7 சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,


பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.


9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன்.
அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்;
வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க்
கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
10 அவர்கள்,


"அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும்


ஆட்டுக் குட்டியிடமிருந்துமே


மீட்பு வருகிறது"


என்று உரத்த குரலில் பாடினார்கள்.


11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும்
அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும்
சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்;
பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.


12 "ஆமென், புகழ்ச்சியும் பெருமையும்


ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும்


எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்"


என்று பாடினார்கள்.


13 மூப்பர்களுள் ஒருவர்,
"வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்?
எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.
14 நான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது:
"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்;
தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து
வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.


15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு


அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்;
அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா;
கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.
17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்;
வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.


கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்."


அதிகாரம் 8

ஏழாவது முத்திரை


1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது
விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.

4. ஏழு எக்காளங்கள்


2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன்.
அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப்
பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார்.
அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது
இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு
அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து
வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து,
பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி,
மண்ணுலகின்மீது வீசியெறிந்தார்.
உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.

முதல் நான்கு எக்காளங்கள்


6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும்
அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.
7 முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும்
நிலத்தின்மீது வந்து விழுந்தன.
நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது;
மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது;
பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது.


8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று
கடலுக்குள் எறியப்பட்டது.
இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.
9 கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது;
கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.


10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று
வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள்
மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.
11 அந்த விண்மீனுக்கு 'எட்டி' என்பது பெயர்.
ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது.
இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர்.


12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும்
நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும்
விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன.
இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது;
பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது.
இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று.


13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில்,
"மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள்.
அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!" என்று கத்தக் கேட்டேன்.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை