திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

16:44, 1 மே 2013 இல் நிலவும் திருத்தம்

"பின்பு ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார்...மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார்...வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது." (திருவெளிப்பாடு 14:14-20)


அதிகாரம் 13

கடலிலிருந்து வெளியே வந்த விலங்கு


1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன்.
அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன.
அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும்
தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன. [1]
2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது.
அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும்
வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன.
அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும்
பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது. [2]
3 அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று
உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப்
படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது;
ஆனால் அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது.
மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.
4 அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை அளித்திருந்ததால்,
மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்;
"விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்?" என்று கூறி
அவ்விலங்கையும் வணங்கினார்கள்.


5 ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும்
அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது;
நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது;
6 கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும்
விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது. [3]
7 இறைமக்களோடு போர்தொடுக்கவும்
அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது;
குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர்,
நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. [4]
8 மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர்.
இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும்
வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர். [5]


9 கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்;

10 "சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்;
வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர்."
ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை. [6]

மண்ணிலிருந்து வெளியே வந்த விலங்கு


11 பின்னர் மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன்.
ஆட்டுக்கடாவின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன.
ஆனால் அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.
12 அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும்
அதன் முன்னிலையில் செயல்படுத்தியது.
உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று
குணம் பெற்றிருந்த முதல் விலங்கை
மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.
13 அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது;
மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.
14 இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில்
அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த
அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது;
வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச்
சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.
15 அச்சிலையைப் பேசவைக்கவும்
அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும்
அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.
16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர்,
உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும்
அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது
குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.
17 இவ்வாறு அந்த விலங்கின் பெயரையோ
அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும்
விற்கவோ வாங்கவோ முடியவில்லை.


18 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை.
புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர்
அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும்.
அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.


குறிப்புகள்

[1] 13:1 = தானி 7:3; திவெ 17:3,7-12.
[2] 13:2 = தானி 7:4-6.
[3] 13:5,6 = தானி 7:8,25; 11:36.
[4] 13:7 = தானி 7:21.
[5] 13:8 = திபா 69:28.
[6] 13:10 = எரே 15:2; 43:11.


அதிகாரம் 14

6. காட்சிகள்

ஆட்டுக்குட்டியின் தோழர்


1 மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன்.
அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும்
தங்களது நெற்றியில் பொறித்திருந்த
ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர். [1]
2 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்.
அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும்
பேரிடி முழக்கம்போலும்
யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் ஒலித்தது.
3 அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும்
அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப்
புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர
வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.
4 அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல்
கற்பைக் காத்துக்கொண்டவர்கள்;
ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்;
கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக
மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்.
5 அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை;
ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள். [2]

மூன்று வானதூதர் விடுத்த செய்தி


6 பின்பு வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன்.
அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம்,
மொழி, மக்களினம் ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு
எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை வைத்திருந்தார்.
7 "கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள்.
ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது.
மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குங்கள்"
என்று அவர் உரத்த குரலில் கூறினார்.


8 மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார்.
இந்த இரண்டாம் தூதர்,
"வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா நாட்டினரும்
குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!" என்றார். [3]
9 வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார்.
அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது:
"விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி,
தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும்
10 கடவுளின் சீற்றம் என்னும் மதுவை -
அவர்தம் சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை -
குடித்தே தீர வேண்டும்.
அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும்
ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும்
நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள். [4]
11 அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை
என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது.
அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும்
அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும்
அல்லும் பகலும் ஓய்வே இராது. [5]


12 ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து,
இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை."


13 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்:
"'இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்' என எழுது"
என்று அது ஒலித்தது.
அதற்குத் தூய ஆவியார், "ஆம்,
அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்;
ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று கூறினார்.

நாடுகள் ஒன்றுதிரட்டப்படல்


14 பின்பு ஒரு வெண் மேகத்தைக் கண்டேன்.
அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார்.
அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன. [6]
15 மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து,
மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி,
"உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்;
ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது;
மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது"
என்று உரத்த குரலில் கத்தினார். [7]
16 உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர
மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
17 மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார்.
அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.


18 நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர்
பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார்.
அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம்,
"உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின்
திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்;
ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று உரத்த குரலில் கூறினார்.
19 ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி
மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்;
கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார்.
20 நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்ட்டன.
அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், [8]
முந்நூறு கிலோ மீட்டர் [9] தொலைக்குப் பாய்ந்தோடியது.


குறிப்புகள்

[1] 14:1 = எசே 9:4; திவெ 7:3.
[2] 14:5 = செப் 3:13.
[3] 14:8 = எசா 21:9; எரே 51:8; திவெ 18:2.
[4] 14:10 = எசா 51:17; தொநூ 18:24; எசா 38:22.
[5] 14:11 = எசா 34:10.
[6] 14:14 = தானி 7:13.
[7] 14:15 = யோவே 3:13.
[8] 14:20 - "குதிரையின் கடிவாள அளவு" என்பது கிரேக்க பாடம்.
[9] 14:20 - "ஆயிரத்து அறுநூறு ஸ்தாதியம்" என்பது கிரேக்க பாடம்.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை