திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
 
(வேறுபாடு ஏதுமில்லை)

23:22, 1 மே 2013 இல் கடைசித் திருத்தம்

"இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்: 'வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள். அவ்விலைமகளின் காமவெறி என்னும் மதுவை எல்லா நாட்டினரும் குடித்தனர்; மண்ணுலக அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்; உலகின் வணிகர்கள் அவளுடைய வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்.' பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்; அது சொன்னது: என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வெளியே போய்விடுங்கள்...'" (திருவெளிப்பாடு 18:1-4)


அதிகாரம் 17 தொகு

8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் தொகு

பேர்போன விலைமகளும் கருஞ்சிவப்பு விலங்கும் தொகு


1 ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள்
ஒருவர் வந்து என்னோடு பேசி,
"வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு
வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். [1]
2 மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.
மண்ணுலகில் வாழ்வோழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால்
வெறிகொண்டிருக்கிறார்கள்" என்றார். [2]


3 அப்பொழுது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பெற்ற என்னை
அந்த வானதூதர் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றார்.
அங்கே கருஞ்சிவப்பு விலங்கின்மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன்.
அவ்விலங்கின் உடல் முழுதும் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் நிறைந்திருந்தன.
அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. [3]
4 அப்பெண் செந்நிற கருஞ்சிவப்பு ஆடைகளை அணிந்திருந்தாள்;
பொன், விலையுயர்ந்த கல், முத்து ஆகியவற்றால் அணி செய்யப்பட்டிருந்தாள்.
அவளது பரத்தைமையின் அருவருப்பும் அழுக்கும் நிறைந்த பொன் கிண்ணம்
அவளது கையில் இருந்தது.
5 மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதப்பட்டிருந்தது;
"பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும்
மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே தாய்" என்பதே அதன் பொருள்.
6அ அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும்
இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து
வெறி கொண்டிருக்கக் கண்டேன்.


6ஆ நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன்.
7 அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது:
"நீ வியப்பு அடைவது ஏன்?
அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும்,
ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய்
அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.
8 நீ கண்ட விலங்கு முன்பு உயிரோடு இருந்தது; இப்போது இல்லை.
படுகுழியிலிருந்து அது ஏறிவரவிருக்கிறது; ஆனால் அழிந்துவிடும்.
உலகம் தோன்றியதுமுதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத
மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும்
அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள்;
ஏனெனில் அது முன்பு உயிரோடு இருந்தது, இப்பொழுது இல்லை.
ஆனால், மீண்டும் உயிர் பெற்று வரும். [4]


9 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது;
அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்;
ஏழு அரசர்களையும் குறிக்கும்.
10 இந்த அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர்.
இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார்.
இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை.
அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய முடியும்.
11 முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த விலங்கு
எட்டாவது அரசரைக் குறிக்கும்.
அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும் அழிந்துவிடுவார்.
12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும்.
அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை.
ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு
அரசாள அதிகாரம் பெறுவார்கள். [5]
13 அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும்
அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள்.
14 அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள்.
ஆனால், அது அவர்களை வென்றுவிடும்;
கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று
உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்;
ஏனெனில் ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்."


15 வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது:
"அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய்.
அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர்,
நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.


16 நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும்
அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு,
அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு,
அவளைப் பிறந்தமேனி ஆக்கும்;
அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
17 ஏனெனில் கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே
அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார்.
அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த்
தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.


18 நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்.


குறிப்புகள்

[1] 17:1 = எரே 51:13.
[2] 17:2 = எசா 23:17; எரே 51:7.
[3] 17:3 = திவெ 13:1.
[4] 17:8 = தானி 7:17; திபா 69:28.
[5] 17:12 = தானி 7:24.


அதிகாரம் 18 தொகு

பாபிலோனின் வீழ்ச்சி தொகு


1 இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்.
மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது.
2 அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்:


"வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!


அவள் பேய்களின் உறைவிடமாக,
அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக,
தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக,
தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள். [1]
3 அவ்விலைமகளின் காமவெறி என்னும் மதுவை
எல்லா நாட்டினரும் குடித்தனர்;
மண்ணுலக அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்;


உலகின் வணிகர்கள் அவளுடைய வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்." [2]


4 பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்;
அது சொன்னது:


என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள்,


அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும்
அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும்
வெளியே போய்விடுங்கள். [3]
5 அவளின் பாவங்கள் வானைத் தொடும் அளவுக்குக் குவிந்துள்ளன;
கடவுள் அவளின் குற்றங்களை நினைவில் கொண்டுள்ளார். [4]
6 அவள் உங்களை நடத்தியவாறே நீங்களும் அவளை நடத்துங்கள்;
அவளுடைய செயல்களுக்கு ஏற்ப இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்;
அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த மதுவுக்குப் பதிலாக
இரு மடங்கு கொடுங்கள். [5]
7 அவள் தன்னையே பெருமைப்படுத்தி
இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப
அவள் வேதனையுற்றுத் துயரடையச் செய்யுங்கள்.
ஏனெனில், 'நான் அரசியாக வீற்றிருக்கிறேன்;
நான் கைம்பெண் அல்ல; நான் ஒருபோதும் துயருறேன்'
என்று அவள் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாள்.
8 இதன்பொருட்டுச் சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகள்
ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்;
நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும்;
ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பு வழங்கும்


ஆண்டவராகிய கடவுள் வலிமை வாய்ந்தவர்." [6]

பாபிலோனின்மீது புலம்பல் தொகு


9 அந்நகரோடு பரத்தைமையில் ஈடுபட்டு
இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள்
அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்து
அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.
10 அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித்
தொலையில் நின்று கொண்டு,


"ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே!


அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு வந்ததே!


ஒரே மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே."


என்பார்கள். [7]
11 மண்ணக வணிகர்களும் அவளை நினைத்து அழுது புலம்புவார்கள்.
ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை இனி வாங்குவார் எவரும் இலர். [8]
12 பொன், வெள்ளி, விலையுயர்ந்த கல்,
முத்துகள், விலையுயர்ந்த மெல்லிய ஆடை,
கருஞ்சிவப்பு ஆடை, பட்டாடை, செந்நிற ஆடை,
பலவகை மணம் வீசும் மரக்கட்டைகள்,
தந்தத்தினாலான பலவகைப் பொருள்கள்,
விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு,
சலவைக்கல் ஆகியவற்றாலான பொருள்கள்,
13 இலவங்கம், நறுமணப் பொருள்கள், தூப வகைகள்,
நறுமணத் தைலம், சாம்பிராணி, திராட்சை மது,
எண்ணெய், உயர்ரக மாவு, கோதுமை,
ஆடுமாடுகள், குதிரைகள், தேர்கள்,
அடிமைகள் ஆகிய மனித உயிர்கள்
ஆகியவற்றையெல்லாம் வாங்க எவரும் இலர். [9]


14 "நீ விரும்பிய கனிகள் உன்னைவிட்டு அகன்றுபோயின;


உன் மினுக்கு, பகட்டு எல்லாம் ஒழிந்துபோயின;


இனி யாரும் அவற்றைக் காணப் போவதில்லை"


என்பார்கள்.
15 இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து
செல்வம் திரட்டியவர்கள்
அவளது வேதனையைக் கண்டு அஞ்சி,
தொலையிலேயே நின்ற வண்ணம் அழுது புலம்புவார்கள். [10]


16 "ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!


விலையுயர்ந்த மெல்லிய ஆடையும்
செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து,
பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால் அணிசெய்து கொண்டவளே!
அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!


17அ இவ்வளவு செல்வமும் ஒரே மணி நேரத்தில் பாழாய்ப் போய்விட்டதே"


என்பார்கள்.
17ஆ கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள்,
கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள். [11]
18 அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து
"இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!" என்று கதறினார்கள். [12]
19 அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு
அழுது புலம்பினார்கள்;


"ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!


கடலில் கப்பலோட்டிய அனைவரையும்
தன் செல்வச் செழிப்பால் செல்வராக்கிய நீ


ஒரே மணிநேரத்தில் பாழடைந்து விட்டாயே!"


என்று கதறினார்கள். [13]


20 "விண்ணகமே, இறைமக்களே,


திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே,
அவளைமுன்னிட்டு மகிழ்ந்து கொண்டாடுங்கள்;


கடவுள் உங்கள் சார்பாக அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிவிட்டார்." [14]


21 பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர்
பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக்
கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:


"பாபிலோன் மாநகரே,


நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்;
நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய். [15]
22 யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர்,
எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை
இனி உன் நடுவே எழவே எழாது;
தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும்
இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்;
எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. [16]
23 விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது;
மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது;
ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில்
பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்;
உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது. [17]
24 இறைவாக்கினர்கள், இறைமக்களின் இரத்தக்கறையும்,
ஏன், மண்ணுலகில் கொல்லப்பட்ட இரத்தக்கறையுமே


அவளிடம் காணப்பட்டது." [18]


குறிப்புகள்

[1] 18:2 = எசா 21:9; எரே 51:8; திவெ 14:8.
[2] 18:3 = எசா 23:17; எரே 51:7.
[3] 18:4 = எசா 48:20; எரே 50:8,45.
[4] 18:5 = விப 18:20,21; எரே 51:9.
[5] 18:6 = திபா 137:8; எரே 50:29.
[6] 18:7,8 = எசா 47:7-9.
[7] 18:9,10 = எசே 26:16,17.
[8] 18:11 = எசே 27:31,36.
[9] 18:12,13 = எசே 27:12,13,22.
[10] 18:15 = எசே 27:31,36.
[11] 18:17 = எசா 23:14; எசே 27:26-30.
[12] 18:18 = எசே 27:32.
[13] 18:19 = எசே 27:30-34.
[14] 18:20 = இச 32:43; எரே 51:48.
[15] 18:21 = எரே 51:63,64; எசே 26:21.
[16] 18:22 = எசே 26:13; எசா 24:8.
[17] 18:22,23 = எரே 7:34; 25:10.
[18] 18:24 = எரே 31:49.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை