தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006
காஞ்சிக் கடிதம் : 6
என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து!
இரட்சா பந்தன நாளில் இலால்பகதூரிடம் தாய்க்குலம் விடுத்த வேண்டுகோள்.
செஸ்டர் பவுல் கூற்றின் பொருள்.
ஐந்தாண்டுத் திட்டங்கள் பயன் தாராமைக்குக் காரணங்கள்
விஷச் சக்கரச் சுழற்சி.
தம்பி,
தாய்க்குலத்தின் தனித்திறமையிலே எனக்கு எப்போதுமே தளராத நம்பிக்கை உண்டு; அந்த நம்பிக்கை மேலும் வளரத்தக்க விதத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது; மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தத்தக்க நிகழ்ச்சி அது.
இந்தக் கிழமை, வடக்கே உள்ளவர்கள் ஒரு நோன்பு கொண்டாடுகின்றனர்; அதனை ரட்சாபந்தன தினம் என்கிறார்கள் — நோன்பிருந்து கங்கணம் கட்டிக்கொள்வது.
இந்தத் திருநாளைக் கொண்டாடும் தாய்மார்கள், டில்லிப் பட்டணத்தில் லால் பகதூர் அவர்களைக் கண்டு தமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கூறிவிட்டு, அங்கு உள்ள முறைப்படி ஒரு ரட்சையை—நோன்புக் கயிறு—அவருடைய கரத்தில் கட்டினார்கள்,
மரியாதை செலுத்தவும் அன்பு தெரிவிக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியை, தாய்மார்கள் மெத்த அறிவுக் கூர்மையுடன், இன்று நாட்டின் நாயகர் எதனை மேற்கொள்ள வேண்டும் உடனடியாக என்பதனைச் சுட்டிக்காட்டிட ஒரு நல்வாய்ப்பாக்கிக் கொண்டு, “அண்ணா! இந்தத் திருநாளில் எமக்கொரு பரிசு தர வேண்டும்” என்று கேட்டனராம்; “என்ன வேண்டுமம்மா?” என்று கேட்ட லால்பகதூரிடம் அந்தத் தாய்மார்கள், எமது குடும்பங்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செவ்வனே செய்து கொடுக்க, உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெற்று வாழ்வினை நடாத்த, தாங்கள் உடனடியாக ஒன்று செய்ய வேண்டும்; என்னவெனில்,
பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கள்ளச் சந்தையை ஒடுக்கவேண்டும்.
கலப்படத்தைப் போக்க வேண்டும்
என்று கூறினராம்!
குற்றுயிராகக் கிடக்கும் கணவன் பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக, கசியும் கண்களுடன் மருத்துவரின் தாள் தொட்டுக் கும்பிட்டபடிக் கேட்பதுண்டல்லவா, “எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்” என்று, அது போலவும், பெற்றெடுத்த குழந்தைக்குப் பேராபத்து ஏற்பட்டது கண்டு, மருத்துவரிடம் சென்று, “என் குலவிளக்கு அணையாதிருக்க வழி கூறுங்கள்”. “என் குலக்கொடி பட்டுப் போகாதிருக்க ஒரு மார்க்கம் காட்டுங்கள்” என்று கெஞ்சி நின்றிடும் முறையிலும், இந்தத் தாய்மார்கள், எமது குடும்பம் சிதையாதிருக்க, எமக்கு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்திடச் செய்யுங்கள் என்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள லால்பகதூரிடம் கேட்டு நின்றனர்.
லால்பகதூர் ஏழைக் குடியில் பிறந்தவர். வாழ்க்கை இன்னல்களை நன்கு உணர்ந்தவர். வாழ்க்கை இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் துணிவற்று, குடும்பம் என்பதே பெரியதோர் சுமை, இதனைத் தாங்கிட நம்மால் ஆகாது என்று ஒதுங்கி விடாமல், ஒண்டிக்கட்டையுமாகி விடாமல் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடலு அதனை நடத்தி வருபவர். எனவே, அவருக்கு, ஏழை, நடுத்தரவகுப்பினர் ஆகியோரின் இன்னல்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. எனவே, “அண்ணா! எமக்கு உணவு, உடை இவைகளேனும் கிடைத்திடச் செய்திடுவீர்! என்று அந்தத் தாய்மார்கள் கேட்டு நின்றது கண்ட போது அவருடைய கண்களில் நீர் துளித்திருக்கும்,
மாடுமனை கேட்கவில்லை.
ஆடை அணி கேட்கவில்லை.
ஆடம்பரப் பொருள் கேட்கவில்லை.
உணவு—உடை—குடும்பம் நடாத்திச் செல்ல வழி, இவைகளையே கேட்டனர் அந்த மாதர்கள்.
அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில்—நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—இருபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள் சர்க்கார்—நாட்டை வளப்படுத்த. செல்வம் கொழித்திடும் நிலை காண! தெரியுமா, தம்பி ! 22,000 கோடி ரூபாய.
இந்த நிலையின்போ அந்தத் தாய்மார்கள் கேட்டிருப்பது, உணவு, உடை இவையே, என்ன அதன் பொருள்? ஆண்டு பதினேழு ஆகியும், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைக் காட்டிய பிறகும், எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது, உடை இருக்கிறது, உறையுள் இருக்கிறது என்று கூறிடத்தக்க நிலை, நாட்டிலே இல்லை. இதனை மறந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவர் அரசோச்சும் நிலைபெற்றும் இருக்கிறார், அவரிடம் சென்று முறையிடுவோம் என்று தோன்றிற்று அந்தத் தாய்மார்களுக்கு என்பதன்றோ பொருள்.
பாலுந்தேனும் கலந்தோடும்! சுயராஜ்யம் சுகராஜ்யமாக இருக்கும்! தனியொருவனுக்கு உணவில்லை எனும் முறை ஒழிந்திடும்! என்றெல்லாம் காங்கிரசார் எழுப்பிய முழக்கமதைச் செவிமடுத்திருப்பாரன்றோ, இந்தத் தாய்மார்கள். அஃதேபோல் நடந்திடும், நாடு சீர்படும், வாழ்வு வளம்பெறும், என்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அவசரப்படேல்! என்றனர், ஆமென்றனர் தாய்மார்கள். வித்திடுகிறோம் என்றனர் ஆட்சியினர், முளை காணத்துடித்தனர் தாய்மார்கள்; கதிர் ஒருமுழம் காணீர்! என்றனர் நாட்டின் காவலர், களிநடமிடுவோம் என்றனர் மாதர்கள்; பசிப்பிணி ஒழிந்திடும், வறுமை ஒழிந்திடும் என்று கருதினர். ஆனால், மேலும் மேலும் அறுவடை நடந்தது; நிரம்பி நிரம்பி வழிந்தது களஞ்சியம், ஏழை எளியோர் குடிலில் அல்ல, எத்தர்கள் கட்டிய சூதுக்கோட்டைகளில். வயலின் பசுமை, தொழிலின் மாண்பு என்பவை பொன்னாகிப் பொருளாகிப் பருகுவனவாகிப் பூசுவனவாகி உடுப்பனவாகி உல்லாசமுமாகி, உப்பரிகை வாழ்வோரிடம் சென்று சிறைப் பட்டிடவே, ஏழையர் வறியராயினர், ஏக்கமே அவர்கள் கண்டு பெற்றது. இந்நிலை இவராட்சியின்போது ஏற்பட்டுவிட்டதனை எத்தனை பக்குவமாகச் சுட்டிக்காட்டுகின்றனர் தாய்மார்கள், எமக்கொரு வரம்தாரும்! உயிர் இருந்திட வழி கூறும்!! என்று.
எவரும் மலைத்து நிற்பர் இந்நாட்டில் இந்தப் பதினேழு ஆண்டுகளாக கொட்டப்பட்ட பணத்தின் அளவினை அறிந்திடும்போது — எனினும், அத்தனையும் தமக்குப் பயன்படாமல் எங்கெங்கோ சென்றுவிட்டதை உணரும்போது, உள்ளம் நொந்திடத்தானே செய்யும்? அந்நிலை பெற்றவரெனின் அரிவையர், இடித்துரைப்போர் பலர் உளர், நாம் இவர் இதயம் தொட்டிடும் இனிய முறையில் நாடு உள்ள நிலையைக் கூறுவோம் என்று கருதி—மெல்லியலாரன்றோ மாதர் – நோன்புக் கயிறு கட்டிவிட்டு, லால்பகதூரிடம் கேட்டிருக்கிறார்கள்,
விலைகளைக் கட்டுப்படுத்துக
கள்ளச் சந்தையை ஒழித்திடுக
கலப்படத்தை ஒழித்திடுக!
பக்ராநங்கல் பாரீர்! தாமோதர் திட்டம் காணீர்! சித்தரஞ்சனின் சிறப்பறிவீர்! பிலாய் ரூர்கேலா பெருமை காணீர்!! என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பதினேழாண்டுகள் ஓட்டியாகிவிட்டது, இனியும் ஒட்டிய வயிற்றினருக்கு இந்தப்பட்டியல் அளித்திடுதல் புண்ணிலே புளித்ததைத் தெளித்திடுவது போன்ற செயலாகும். எமக்கு வாழவழி செய்து காட்டுங்கள்! இந்த நன்னாளில் எமது வேண்டுகோள் இதுவே! உணவு! உடை! பிள்ளை குட்டிகள் பிழைத்திருந்து படித்திட வசதி! இவைபோதும், இவற்றினை எமக்கு அளித்திடுக!—என்று கேட்டுள்ளனர். இம்மட்டோடு விட்டார்களில்லை மாதர்கள்.
லால்பகதூரின் கரத்திலே அவர்கள், உடன்பிறப்பாளர் எனும் பரிவுணர்ச்சியுடன் கட்டிய ‘ரட்சை’ இருக்கிறதே, அது புதுவிதமானதாம்! அந்த ரட்சையில் ஒரு குழந்தையின் படம் பொறிக்கப்பட்டிருக்கிறதாம்! அந்தப் படத்திலே
என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து
என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள தாம்!
நிச்சயமாக லால்பகதூரின் நெஞ்சம் நெகிழ்ந்துதான் இருக்கும். படிப்போருக்கே நெகிழ்கிறதே.
முதலாளிகள் கேட்கிறார்கள் லால்பகதூரை; புதிய புதிய யந்திரங்கள் வாங்கிட அன்னியச் செலாவணி உரிமை கொடுங்கள் என்று.
தொழிலதிபர்கள் கேட்கின்றனர், எமக்குக் கடன் கொடுங்கள், வட்டியின்றி அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் என்று.
குழந்தை கேட்கிறது, என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து!! என்று.
புதிய மாளிகை கட்ட இரும்புக் கம்பங்களும் ‘டன் டன்னாக’ச் சிமிட்டியும் தருக, உடனே—என்று கேட்டிடும் பணம் படைத்தான்கள் உளர்—லால் பகதூர் கண்டதுண்டு,
சென்ற ஆண்டு கிடைத்ததைவிட இவ்வாண்டு கிடைத்த இலாபம் குறைவாக இருக்கிறது; இந்த நஷ்டத்தால மெத்தக் கஷ்டப்படும் எமக்கு, வரியில் சலுகை செய்தளியுங்கள்; நாங்கள் செல்வத்தைப் பெருக்கிடும் சேவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் என்று கேட்டிடும் சீமான்கள் உள்ளனர்; லால்பகதூர் பார்த்திருக்கிறார்.
ஒரு பச்சிளங் குழந்தை என்னை வாழவிடு! விலையைக் கட்டுப்படுத்து!! என்று கேட்டிடும் காட்சியை அவர் கண்டதில்லை; காண்கிறார்; காணச் செய்தனர் தாய்மார்கள்.
எத்தனை உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர், காணக் கூசிடத்தக்கதோர் நிலை நாட்டிலே நெளிகிறது என்பதைக் காட்டிடவன்றோ, குழந்தையின் படம் பதித்த ‘ரட்சை’யைக் கட்டினார்கள் தாய்மார்கள்.
விலைவாசி விஷமென ஏறியபடி இருப்பது, எத்தகைய விபரீ தமானது, என்னென்ன கொடுமைக மகளுக்கு வழி செய்திடக் கூடியது என்பதனை விளக்கிட, அஃது எதிர்காலத்தையே ஆபத்தானதாக்கத்தக்கது என்பதனை எடுத்துக்காட்ட, ஒரு குழந்தை, நான் வாழ வேண்டும், நான் வாழவேண்டுமானால் என்னை வளரச் செய்திட என் குடும்பம் வழி பெறவேண்டும், அந்த வழி கிடைக்க வேண்டுமானால், விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறிடுவது போல,
என்னை வாழவிடு
விலைகளைக் கட்டுப்படுத்து
என்று கேட்டுக் கொள்வதாக வாசகத்தைப் பொறித்தளித்துள்ளனர்.
கட்டி முடித்த தொழிற்கூடங்கள், அமைத்தாகிவிட்ட தேக்கங்கள், உருண்டு ஒலி கிளப்பும் யந்திரச் சாலைகள் எனும் இவைகளைப் படம் போட்டுக் காட்டித்தான் எனன பலன், இந்தக் குழந்தையின் படம் கண் வழிச் செல்லாமலேயே எவர் நெஞ்சிலும் சென்று பதிந்து விடுகிறதே! உள்ளத்தை உருக்கிவிடுகிறதே!!
தாயைத்தான் தேடுகிறேன் என்று புலம்பிடும் குழவியைக் காட்டிலும், உள்ளத்தை உருகச் செய்திடக்கூடிய காட்சி இருந்திட முடியாது என்று இது நாள்வரை நான் எண்ணிக் கொண்டிருந்தேன், தம்பி! இந்தக் காட்சி இருக்கிறதே—படமாக மட்டுமே உளது எனினும்—அதனையும் மிஞ்சுவதாக உளது. நான் பிழைப்பதும் மடிவதும், ஆட்சிப்பொறுப்பின் முதல்வரே! உமது கரத்தில் இருக்கிறது. என்ன செய்து என்னை வாழ வைத்திடுவது. என்று எண்ணி வாட்டம் கொள்ளவேண்டாம், நானே சொல்கிறேன் தக்க வழிதனை; விலைகளைக் கட்டுப் படுத்துங்கள், நான் பிழைத்துக் கொள்வேன் என்றன்றோ குழந்தை கூறுவதாகத் தெரிகிறது ‘ரட்சை’யில் பொறித்துள்ள வாசகத்தைப் பொருள் பிரித்துப் பார்த்திடும்போது.
எந்த ஒரு ஆட்சியும் இந்த நிலை வந்துளது என்பதனைக் கண்டு கண் கசியாதிருந்திட முடியாது. அதிலும் குடும்பம் நடாத்தி, ஆங்குக் குமுறலும் கொதிப்பும், பசித்தீயினால் பதைப்பும், பிணிக் கொடுமையால் வேதனையும் கிளம்பிடுவதைக் கண்டு மனக் கலக்கம் கொண்டு பழக்கம் பெற்றுள்ள எவருக்கும் கண் கசிந்திடாதிருந்திட முடியாது.
இல்லை! இல்லை! மிகைப்படுத்திக் கூறுகிறார்கள்; உணவு நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை, விலைகள் ஓரளவு ஏறி இருக்கிறது என்றாலும், பெரிய நெருக்கடி ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்று இங்கு நாட்டின் நாயகர்கள் பேசுகின்றனர்—எதிர்ப்புக் குரலையும் ஏக்கப் பேச்சினையும் மறுத்திடவும் மறைத்திடவும்.
இலண்டனில் உள்ள இதழ்—இந்திய சர்க்காரிடம் ஆதரவு காட்டும் இதழ்—எழுதுகிறது.
என்று. இதனையும் லால்பகதூரின் அரசு மறுத்திடும்; ஆனால், வார்த்தைகள் மறுப்புரைக்குமே தவிர, இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதனைக் காட்டுகின்றன? நெருக்கடி நிலை இல்லாமலா,
கோதுமை! கோதுமை! மேலும் மேலும் கோதுமை!
அரிசி! அரிசி! மேலும் சிறிதளவு அரிசி!என்ற ‘கோஷமிட்டபடி’ இந்தியத் தூதரக அலுவலர்களும் துரைத்தன மேலதிகாரிகளும் பல்வேறு நாடுகள் சென்றபடி உள்ளனர்.
கேட்டோம், தருகிறார்கள்!
வருகிறது உணவுப் பண்டம் கப்பல் கப்பலாக!
என்று துரைத்தனம் அறிவிப்பது எதற்காக? அச்சம் கொள்ளாதீர், கவலை காட்டாதீர் என்று கேட்டுக் கொள்ளவன்றோ.
உணவு உற்பத்தி பெருகிவருகிறது! விளைச்சலின் தரம் மிகுந்திருக்கிறது என்று முன்பு பேசிய பேச்செல்லாம் பொய்த்துப் போச்சே.
எத்தனை காலத்துக்கு உணவுப் பொருளுக்காக வெளிநாட்டை நம்பிக்கிடப்பது—வேதனையாக இருக்கிறது—வெட்கமாகக்கூட இருக்கிறது—இனி அந்தப் பழக்கத்தை விட்டொழிக்கத் திட்டமிட்டுவிட்டோம்—வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை வாங்கமாட்டோம் என்று முழக்கிய உறுதிமொழிகள் உயிரற்றனவாகிவிட்டனவே.
இப்போது அமெரிக்கா அனுப்புகிறது; பாகிஸ்தான் விற்றிருக்கிறது; தாய்லாந்துக்கு ஆட்கள் போகிறார்கள் அரிசி வாங்க என்று செய்திகளைச் சர்க்காரே தந்தபடி உள்ளனர்.
ஒரு பெரிய பஞ்சம், பெருவெள்ளம், அல்லது மழையே பெய்யாத நிலை, நிலநடுக்கம் எனும் ஏதேனும் ஓர் இயற்கைக் கோளாறு ஏற்பட்டு, ஒரு நாடு சோற்றுக்குத் திண்டாடும்போதும் பெரும்போரிலே சிக்கி வயல்களின் பசுமை காய்ந்து போய்விடும் போதும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைக் கேட்டுப் பெறுவது முறை, நியாயம். ஆனால், அவ்விதமான இயற்கைக் கேடுகளோ, மூட்டிவிடப்பட்ட போரோ ஏதுமின்றியே, நாம், உணவுப் பொருளுக்காக, அமெரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து எனும் பல நாடுகளிடம் தஞ்சம் அடைகிற போது, உதவி பெறுகிறபோது, இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்த அரசிடம் மதிப்பா பிறந்திடும்? அனுப்புகிறார்கள் உணவுப்பொருள்...ஆனால், அவைகளை அனுப்பும்போது எத்தகைய கேலிப் புன்னகை எழுந்ததோ யார் கண்டார்கள்!அமெரிக்கத் தூதுவர் செஸ்டர்பவுல்ஸ் கூறுகிறார்,
இப்போது நாங்கள் அனுப்பத் திட்டமிட்டிருப்பது நாற்பது இலட்சம் டன் கோதுமை, 300,000 டன் அரிசி. இதுவரை நாங்கள் அனுப்பியிருப்பது 230 இலட்சம் டன் உணவுப்பொருள்” என்கிறார்.
படிக்கும்போது இந்தச் செய்தி பாகெனவா இனிக்கும்?
இன்று நேற்றல்ல, நெடுநாட்களாக உங்களுக்கு நாங்கள் உணவுப் பொருளை அனுப்பியபடி இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டுவது—குத்தலுக்காக அல்ல என்றே வைத்துக்கொள்வோம்—பொருளற்றதா?
இப்படி உணவுப்பண்டத்துக்கே திண்டாடுகிறீர்களே! இத்தனைக்கும் விவசாய நாடு என்கிறீர்கள், கிராமங்களே முதுகெலும்பு என்கிறீர்கள், புதிய தேக்கங்கள் கட்டியிருக்கிறீர்கள், அணைகள் பலபல என்று பட்டியல் காட்டுகிறீர்கள். நவீன விஞ்ஞான முறை எனப் பேசுகிறீர்கள், ஜப்பானிய முறை என்கிறீர்கள், சத்து உரம் என்கிறீர்கள் மின்சார இறைப்பு என்கிறீர்கள். சமுதாயநலத் திட்டமென்கிறீர்கள், கூட்டுறவு என்கிறீர்கள், நிலச்சீர்திருத்தச் சட்டம் என்கிறீர்கள், பொறுக்கு விதை, பொலிகாளை, எருக்குழி, மண் அரிப்புத் தடுப்பு என்று பலப்பல பேசுகிறீர்கள், என்றாலும் இந்த ஆண்டுகளில் நாங்கள் டன்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோமே, என்ன ஆயிற்று உங்கள் திட்டங்கள்? என்ன கதியாகிவிட்டது கொட்டிய ஆயிரமாயிரம் கோடிகள்—என்றெல்லாம் செஸ்டர் பவுல்ஸ் கேட்கிறார் என்றல்லவா பொருள்! சுதந்திர தினவிழாவன்று கிடைத்திடும் பொற்பதக்கமா இது? பொறுப்பிலுள்ளவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும், போய்ச் சேர்ந்ததுகள் அல்ல!
தம்பி! அமெரிக்கத் தூதர் சொல்கிறார், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் உணவுப் பொருள், எம்மிடம் தயாராக இருக்கிறது. ஏற்றிச் செல்லும் கப்பல்களும் உள்ளன, தேவைக்கு அதிகமாகவே. ஆனால் நாங்கள் ஏற்றி அனுப்பும் பொருளை இறக்கி எடுத்திட முடியவில்லையே இந்திய சர்க்காரால், நாங்கள் என்ன செய்ய என்று கேட்கிறார். ஆமாம் என்கிறார்கள் லால்பகதூர்கள்; அப்படியானால்... என்று கேட்கிறார் செஸ்டர்பவுல்ஸ். துறைமுகத்தில் பண்டங்களை இறக்க.......என்று இழுத்துப் பேசுகிறது இந்தியப் பேரரசு. அதற்கான வழிமுறை கூற, உடனிருந்து உதவ நிபுணர்களையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கிறேன் என்று கூறுகிறார் செஸ்டர்பவுல்ஸ்.
தம்பி! ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்—அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இங்கு வருவதை நான் குறை கூறவில்லை—அதுவும் இல்லையென்றால் உணவு நெருக்கடி பேராபத்தை மூட்டிவிடும். இந்நிலையில், உணவுப் பொருளை இனாமாகவோ கடனுக்கோ, பண்ட மாற்றுக்கோ பணம் பெற்றுக் கொண்டோ கொடுத்துதவுவோர் பலப் பல இலட்சக்கணக்கானவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறவர்கள் ஆகிறார்கள்—அனைவரின் நன்றிக்கும் உரித்தானவர்களாகிறார்கள்; இதனை நான் மறந்திடவுமில்லை, மறுத்திடவுமில்லை; ஆனால், 17 ஆண்டு ஆட்சி நடாத்திய பிறகு. இந்த நிலையைத்தானா நாடு பெறவேண்டும், காங்கிரசின் மூலம் என்று கேட்கிறேன்.
தம்பி! ரேவுத் துறையிலே மூட்டைகளை எப்படி, விரைவாக, இலகுவாக இறக்குவது என்பதற்கு அமெரிக்க நிபுணர்கள் வருகிறார்கள் என்று கூறினேனல்லவா! வருகிற நிபுணர்கள் இந்தத் துறைக்காக மட்டுமல்ல, என்னென்ன துறைகளுக்கு, நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபடி இருக்கிறார்கள், சொல்லவா! கேலிக்காக அல்ல, நாடும், அதற்கு அமைந்துள்ள ஆட்சி முறையும் இருக்கிற இலட்சணத்தைத் தெரிந்து கொள்ளச் செய்வதற்காக.
விவசாயிகளுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையைக் கண்டறிந்து நிர்ணயம் செய்ய அமெரிக்காவிலிருந்து ஒரு நிபுணர் குழு வருகிறது; தாங்களாக அல்ல; சர்க்காரின் விசேஷ அழைப்பின் பேரில்.
மண் வளம் பெருக்க, பாசன முறையைத் தரமானதாக்க, வடிகால் பிரச்சினையை விளக்கிட, ஒரு நிபுணர் குழு—அமெரிக்காவிலிருந்து; பயிர் கெடுக்கும் பூச்சிகளை அழித்திட, பூச்சி மருந்தை விமான மூலம் தெளித்திட, முறைகூற, உடனிருந்து உதவி செய்ய ஒரு அமெரிக்க நிபுணர் குழு வருகிறது.புதிய பண்ணைகள் அமைத்திடத் திட்டம் தயாரிக்க ஒரு குழு.
இங்கு நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டத்தின் பலன்களைக் கண்டறிய ஒரு குழு.தம்பி! எனக்கே சலிப்பாக இருக்கிறது, முழுப் பட்டியலைக் கூற. ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன்—பொருளும் திட்டமும், நிபுணர்களும் மட்டும் அல்ல, ஆயிரம் பொலி காளைகள் கூட வருகின்றன அமெரிக்காவிலிருந்து.
உணவு முனையில் இதுவரை துரைத்தனம் மேற்கொண்ட முறைகளும் திட்டங்களும் எந்த அளவு பலனற்று, பாழ்பட்டுப் போயிருந்தால், இந்த அளவுக்கு அமெரிக்க உதவி நமக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதை மட்டும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் கொள்பவர்களை விட்டு விட்டு,
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
என்ற பண்பறிந்தவர்களிடம் மட்டுமாவது கேட்டுப்பார்.
திட்டமிடுகிறார்கள், தெளிவில்லை.ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி வீசுகிறார்கள், ஓரவஞ்சனை நடக்கிறது, ஒழுங்கீனம் இருக்கிறது, ஊழல் மலிந்திருக்கிறது என்று நம்மைப் போன்றவர்கள் கூறியபோதெல்லாம், காங்கிரஸ் துரைமார்கள், கனைத்தனர், கண் சிமிட்டினர், காகிதத்தில் எழுதப்பட்டிருந்த புள்ளி விவரங்களைப் படித்துக்காட்டினர், நமக்குப் பொருளாதார அறிவு போதுமான அளவுக்கு இல்லை என்று நையாண்டி செய்தனர்—நினைவிலிருக்கிறதல்லவா? இப்போது காங்கிரஸ் அரசில், மேல் மட்டத்திலேயே ஆராய்ச்சி நடத்துகிறார்கள்,
காங்கிரஸ் தலைவர்களிலே சிலர், திட்டம் தீட்டியதிலே தவறு இல்லை, அதை நிறைவேற்றிய முறையிலே தான் கோளாறு வந்துவிட்டது என்கின்றனர்.
திட்டக் குழுவின் துணைத் தலைவரான அசோக்மேத்தாவோ, இல்லை! இல்லை! நிறைவேற்றிய முறைகளிலே மட்டுமல்ல, திட்டங்களிலேயே கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார்.
தொழில் மந்திரியாக உள்ள சஞ்சீவய்யா, “திட்டங்களினால் ஏன் தக்க பலன் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறியவேண்டும். நாம் இதுவரை, திட்டங்கள் வெற்றிபெற, பணம் வேண்டும், மூலப்பொருள் வேண்டும் என்பது பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்துவிட்டோம்; ஏமாந்துவிட்டோம்; திட்டங்கள் வெற்றிபெற மக்களிடம் இலட்சிய ஆர்வம் எழவேண்டும்—வயலில் உழைப்பவன், தொழிற்சாலையில் வேலை செய்பவன் எனும் எவருக்கும் திட்டம் வெற்றிபெற நான் பாடுபடுவேன், திட்டத்துக்காக நான் உழைத்தால், எனக்கு இன்னின்னது கிடைத்தாலும் என் வாழ்க்கை வளமாகும் என்ற நம்பிக்கை எழவேண்டும், அவ்விதமான ஆர்வம் வேண்டும். அவ்விதமான ஆர்வம் எழத்தக்க விதமாகத் திட்டங்களின் விளைவுகள் இருந்திடவேண்டும். அது இல்லாததால்தான், திட்டங்கள் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கவில்லை” என்று பேசுகிறார்.
திட்ட அமைச்சராக இருந்த நந்தா அவர்களோ, திட்டத்திலே தவறு இல்லை. முறைகளிலே குறை இல்லை, சத்தியம் கெட்டுவிட்டது. இதோ அழைக்கிறேன் சாதுக்களை, அவர்கள் அதர்மத்தை அழித்தொழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவர் என்று உபதேசிக்கிறார்.
லால்பகதூர், நிலைமைகளைக் கவனித்த பிறகு, சரி சரி, பெரிய பெரிய தொழில்களிலே போய்ச் சிக்கிக்கொள்ள வேண்டாம்; இனி, திட்டத்தில் உடனடியான பலன் தரத்தக்க, மக்களின அன்றாடத் தேவைப் பொருள்களைப் பெற்றுத் தரத்தக்கவைகளிலேயே கவனம் செலுத்த வேண்டும் எனறு கூறுகிறார்.
திட்டத்துக்காகவோ பெரும் பொருள் செலவாகிவிட்டது; வெளிநாடுகளில் பெரிய அளவு கடன் வாங்கியாகிவிட்டது; மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை ஏற்றியாகவிட்டது விளம்பரமோ அமோமாகச் செய்தாகி விட்டது; விழாக்களோ ஆடம்பரமாக! கடைசியில் உட்கார்ந்து பேசுகிறார்கள் ஒவ்வொருவராக, முடிவிலே நாட்டுக்குத் தெரிவிக்கிறார்கள்.திட்டம் போதுமான, எதிர்பார்த்த பலன் தரவில்லை.
எனவே, இனித் திட்டமிடுவதிலும், திட்டத்தை நிறைவேற்றுவதிலும் ஒரு மாற்றம் செய்யப்போகிறோம்என்று,
திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காது போன நிலையில் வெறும் பணம் மட்டும் தண்ணீர் பட்ட பாடு என்பார்களே, அதுபோலப் புரள ஆரம்பித்ததால், விலைகள் ஏறின. விசாரம் வளர்ந்தது; விலைகள் ஏறவே கூலி உயர்ந்தது; கூலி உயரக் கண்டதும் விலையை மீண்டும் ஏற்றினர்; விலை மேலும் ஏறவே கூலி உயர்வு மீண்டும் தேவைப்பட்டது; இவ்விதம் ஒரு விஷச்சக்கரம் சுழல்கிறது. அதன் கொடிய பற்களிலே நாடு சிக்கிச் சங்கடப்படுகிறது.
பணப் புழக்கம் அதிகமாகி உள்ள அளவுக்குப் பண்டங்களின் உற்பத்தி அளவும் வளர்ந்தால் நிலைமையில் நெருக்கடி ஏற்படாது; பசு தின்னும் தீனி அளவுக்காவது பால் கிடைக்க வேண்டுமே! அவ்விதமின்றி தீனிக்குப் பசுவாக இருந்து. பாலுக்காகச் செல்லும்போது, பசு காளையாகி விட்டால் நிலைமை எப்படி இருக்கும்! அந்த நிலை இப்போது. தம்பி! திட்டங்களுக்காகக் கொட்டிக் கொடுத்தாயிற்று; அதற்காக அவிழ்த்துக் கொட்டப்பட்ட பணம் ஊரெங்கும் உருள்கிறது. ஆனால், அந்த அளவுக்கு பண்டங்கள் பெருகவில்லை திட்டத்தின்படி. எனவே பணவீக்கம்; பண வீக்கத்தால் விலை ஏற்றம்; விலை ஏற்றத்தால் பணத்தின் மதிப்பு சரிந்து விட்டது!
திட்டக் கமிஷனில் உள்ள பொருளாதார நிபுணர் அகர்வால்,
‘ரூபாயின் மதிப்பு கட்டுப்படியாகவில்லை’ என்கிறார்.
‘ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டது என்றால், என்ன பொருள்? விலைவாசி ஆறு மடங்கு அதிகமாகி விட்டது என்று பொருள். இந்த ஏற்றம் மக்கள் தாங்கக் கூடியதல்ல.’இதனையும் பொருளாதார நிபுணர் அகர்வால் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், தம்பி! தாய்மார்கள், லால்பகதூரிடம் வேண்டுகோள் விடுத்ததிலே தவறென்ன இருக்க முடியும்?
வாழவிடு
விலையைக் குறை!
என்பதுதான் இன்று நாடெங்கும் எழுந்துள்ள முழக்கம்.
ஆனால், எல்லா முழக்கங்களையும்விட, லால்பகதூரின் உள்ளத்தைத் தைக்கத்தக்கதாக, எவர் நெஞ்சையும் நெகிழ்ந்திடச் செய்யத்தக்கதாக அமைந்துவிட்டது, தாய்மார்கள், லால்பகதூருக்குத் தந்த ‘ரட்சை’யில் குழந்தையின் உருவத்தைப் பொறித்து, அதிலேயே,
"என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து!!
என்றும் பொறித்திருப்பது.
பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஆளவந்தார்க்கு, இத்தகைய ஒரு வேண்டுகோள் தரப்படுகிறது. அந்த நிலைக்கு ஆட்சியிலுள்ளோர், நாட்டினைக் கொண்டுவந்து விட்டனர். ஆனால், காமராஜர் கூறுகிறார், ‘எம்மையன்றி எவருளார் ஆள!’ என்று!! என்ன செய்வது, தம்பி! சிரிப்பதா அழுவதா! தெரியவில்லையே!
30-8-1964
அண்ணன்,
அண்ணாதுரை