தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005
காஞ்சிக் கடிதம்: 15
இதயம் வென்றிட...1
காந்தியார் காங்கிரசும் ஆளுங்கட்சிக் காங்கிரசும்
இழந்தது சரிகைத் தொப்பி; பெற்றதோ மந்திரி வேலை!
மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை மட்டும்
போதாது கழகத்துக்கு!
தம்பி,
இரத்த ஆறு ஓடும்-பிணமலை குவியும்-வீடுகள் தீக்கிரையாகும்-வயல்கள் கருகும்-எங்கும் அல்லோலகல்லோலம்-அமளி-அழிவு,
காட்டுத்தீப் போல, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம் போல, நெருப்பைக்கக்கும் எரிமலையின் குமுறல்போல, செங்கிஸ்கான், தைமூர், அட்டில்லா போன்ற வெறிபிடித்தலைந்தவர்கள் அவனியில் நடமாடி அழிவை ஏவியபோது, நிலைமை இருந்தது.
அவர்களின் படைகள் பாய்ந்து வருகின்றன என்றால் ஒரே பீதி! எதிர்த்து நிற்க முடிவதில்லை; தடுத்திட முடிவதில்லை! அழிவு! அழிவு! பெரும் அழிவு! எதிர்ப்பட்டதெல்லாம் அழிக்கப்படும்! வாள்! வேல்! ஈட்டி! இவைமட்டுமல்ல, நெருப்பு, விஷம், சித்திரவதைக் கருவிகள் இவைகளையும் கொண்டுதான் அந்த வெறியர் போர் நடத்தினர்.போர்முறை, அதிலே ஒரு நெறி; ஆயுதமற்றவர்களைத் தாக்காதிருக்கும் பண்பு; பெண்டிரிடமும் குழந்தைகளிடமும் பச்சாத்தாபம் காட்டும் உணர்வு; சொத்துக்களை நாசமாக்காதிருக்கும் முறை எனும் எதற்கும் அவர்கள் கட்டுப்படுவதில்லை. எதையும் நாசம் செய்வது, வதைப்பது, வாட்டி எடுப்பது, அதிலே மக்கள் துடிதுடிப்பது கண்டு மகிழ்வது, இப்படி அவர்கள்.
அவர்களின் வெறித்தனத்தை இன்று கண்டிக்கிறோம்; வரலாற்றுச் சுவடிகள் அவர்களை நடமாடிய நாசம் என்று குறிக்கின்றன. ஆனால், அவர்கள் படைபலமும் போர்வெறியும் காட்டி நாடு நகரங்களை அழித்தும், மக்களைக் கொன்று குவித்தும் நாசத்தை மூட்டிவிட்ட போது அவர்களின் செயலைக் கண்டிக்க முடியவில்லை. கண்டிப்பவனின் நாக்கு துண்டாடப்பட்டுவிடும்.
அவர்களைக் கண்டிக்காதது மட்டுமல்ல, அவர்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டாட விழாக்கள்! கோலாகலப் பவனிகள் நடைபெற்றன!
ஒருபுறத்தில் அக்கொடியவர்கள் வெட்டி வீழ்த்திய உடலங்கள் குவியல் குவியலாக; மற்றோர்புறத்திலே அந்த மாபாவிகளின் கொலு!
அது மட்டுமல்ல! அந்த அக்கிரமக்காரர்களின் வெறித்தனத்தை வீரம் என்றும், படுகொலைகளை வெற்றிகளென்றும் கூறிட வேண்டிய கொடுமைக்கும் சிலர் ஆளாக்கப்பட்டனர். கவிதைகளை இயற்றித்தந்தனர் சிலர்! அவர்களின் கொடுஞ்செயல்களைக் காவியமாக்கித் தந்தனராம் சிலர்! அதற்காகவே சிலர், அந்த வெறியர்களால் அமர்த்தப்பட்டிருந்தனராம்.
அவர்களின் ‘காலம்’ முடிந்த பிறகே, அவர்களின் செயல் எத்துணைக் கொடுமை நிரம்பியது என்பதனைக் கூறிட முடிந்தது. அவர்களின் ஆதிக்கம் இருந்து வந்த போது, புகழாரம் சூட்டிடவும் வேண்டி நேரிட்டது, புண்பட்ட நெஞ்சினரால்! தமது புலமையை அந்தக் கொடியவர்களுக்குப் பலி கொடுத்திட வேண்டியும் நேரிட்டதாம்!
கொடுமைகளை எதிர்த்து ஒழித்திட முடியாத நிலையில் பலர் அதற்கு இரையாகிவிடுவதுடன், சிலர் அந்தக் கொடுமையைக் கொடுமை என்று கூறிடவும் முடியாத நிலையினராகிக் குமுறிக் கிடந்திடுவதுண்டு.வெற்றி வெறி தலைக்கேறிய அந்தத் தருக்கர்களும், தம்மை எதிர்த்து நிற்பார் இல்லை என்பதைக் களம் பலவற்றில் கண்டு கண்டு இறுமாந்து, தமக்கு இந்த ஆற்றலை ஆண்டவன் அளித்திருப்பது, அதனைக் கொண்டு இந்த அவனியை அஞ்சிட வைத்திடவும். அடக்கி ஆண்டிடவுமே என்றுகூடக் கருதினர்,
ஆண்டவனே அனுப்பிவைத்த அழிவாயுதம் என்று தமக்குத் தாமே விருதும் சூட்டிக்கொண்டனர் அந்தக் கொடியவர்கள்,
இப்போதுதான் எடுத்துக் காட்டப்படுகிறது: அவர்களிடம் இருந்து வந்த படைகளின் தன்மையும், அவர்கள் கையாண்ட போர்முறையும், அவர்கள் காட்டிய வேகமும் துணிவுமே அவர்களைக் கண்டோர் மருண்டிடத்தக்க, கேட்டோர் கிலிகொள்ளத்தக்க வெற்றிகளைப் பெற்றிடச் செய்தது என்பதனை.
நெடுங்காலத்துக்குப் பிறகுதான், எவ்வளவோ நாசத்துக்குப் பிறகுதான், அவ்விதமான அழிவுச் சக்தியை எப்படித் தடுத்து நிறுத்துவது, எப்படி எதிர்த்து ஒழிப்பது என்ற போர் முறையை வகுத்திடவும், வெற்றி காணவும் முடிந்தது. அந்தக் கட்டம் பிறந்திடும் வரையில் அந்தக் கொடியவர்கள், எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத மாவீரர்கள் என்று கூறிக்கொள்ள முடிந்தது.
உலகை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டானல்லவா இட்லர்! சென்ற இடமெங்கும் வெற்றி என்றனர்! சேதி சொல்லி அனுப்பினால்போதும், சரண் அடைய நாடுகள் காத்திருந்தனவே.
அவனை வெல்வார் இல்லை! என்று உலகே பேசிற்று. எதுவரையில்? அவனை வீழ்த்துவதற்கான முறை செம்மைப் படுத்தப்படும் வரையில்,
கொன்று குவித்திடும் கொடுமை நிரம்பிய களம் நின்றவர்களின் இறுதியே, தோல்வி என்றாகிவிட்டது என்கிறபோது, ஆயிரத்தெட்டுத் தந்திரங்களின் துணை கொண்டு, அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுவிடும் ஒரு கட்சி, என்றென்றும் வல்லமைமிக்கது, வீழ்த்தப்பட முடியாதது என்ற நிலையில் இருந்துவிடும் என்று பேதையும் கூறிடான். கொடுமைகளைத் தாங்கித் தத்தளித்த உலகு இறுதியில் அந்தக் கொடுமையினை ஒழித்துக் கட்டியது என்பதனைக் காட்டிடுவது வரலாற்றுச் சுவடி. இதனை மறந்து தேர்தல் களத்திலே பெற்றுவிட்ட ஒரு வெற்றியைக் கண்டு காங்கிரசின் தலைவர்கள் எமக்கு இனி எவரே இணை! எவர் இனி எம்மை என்ன செய்திட முடியும்! என்றெல்லாம் இறுமாந்து பேசுகின்றனர்.
அதுகேட்டு நமது தோழர்கள் கோபித்து ஆகப் போவது ஒன்றுமில்லை.
வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சி பேசுவதில், ஆணவம் நெளிகிறது; உண்மை. ஆனால், அந்தப் பேச்சைக் கேட்டுக்கொள்வது, கழகத்துக்கு நன்மையே செய்திடும் என்று நான் நம்புகிறேன். எனவே, வெற்றிவெறியிலே அவர்கள் பேசுவதை வரவேற்கிறேன்,
தோல்வியால் துயரமும், வெற்றி வெறியாளரின் பேச்சால் கோபம் கலந்த வேதனையும் கழகத் தோழர்களிடம் மூண்டிட மூண்டிட, அவர்கள் தமது முறைகளைக் செம்மைப்படுத்திக்கொள்ள முனைவர் என்பது என் எண்ணம். நான் கடிந்துரைப்பதன் மூலம் நடைபெறக்கூடியதைக் காங்கிரசின் வெற்றி வெறிப் பேச்சினர், நடத்திக் கொடுக்கிறார்கள். கடிந்துரைத்திடும் இயல்பும் எனக்கு இல்லை.
தேர்தல் களத்திலே ஏற்பட்டுவிடும் ஒரு தோல்வி நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடாது என்பதனை நான் அறிவேன், நானே தேர்தலிலே தோற்கடிக்கப்பட்டவன்.
தோல்வி, துடைக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி விடும் என்று கவலை கொள்பவனுமல்ல; வெற்றி அதனைப் பெற்றவர்களுக்கு, என்றென்றும் ஒளிவீசும் புகழாரம் சூட்டிவிடாது என்பதனையும் அறிந்திருக்கிறேன்.
போட்ட புள்ளிகள் பொய்த்துப்போவதும், தீட்டிய முறைகள் கெட்டுப்போவதும், எதிர்பார்த்தவைகள் நடைபெறாமல் போய்விடுவதும், நாம் இதற்கு முன்பு காணாததுமல்ல; ஒவ்வொரு தனி மனிதரும் சரி; கட்சியும் சரி, இத்தகைய நிலையினைக் கண்டதுண்டு; அறிவோம்.
மோப்பம் பிடிப்பதிலும், பதுங்கிப் பாய்வதிலும், பாய்ந்து பற்றுவதிலும், பற்றுவதைப் பிய்த்து எறிவதிலும் காட்டிலே புலிக்கு உள்ள திறமை, நாட்டிலே தேர்தல் களத்திலே காமராஜருக்கு உண்டு என்று பேசாதார் இல்லை, புகழாதார் இல்லை.
எனினும். திருவண்ணாமலையிலும் திருச்செங்கோட்டிலும், மாநகராட்சி மன்றத் தேர்தலிலும், கேரளத்திலும் காமராஜரின் கணக்குச் சரியில்லை, வாக்குப் பலிக்கவில்லை, முயற்சி வெற்றி பெறவில்லை; அதனால் அவருடைய மூக்கு அறுபடவில்லை, முகாம் கலைக்கப்படவில்லை, முடுக்குக்கூடக் குறையவில்லை!
ஐயாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிக்கொடி நாட்டுவோம் என்று பிரகடனம் செய்தவர்தான் காமராஜர் திருவண்ணாமலைத் தேர்தலின் போது!!
மாநகராட்சி மன்றத் தேர்தலை முடித்துக்கொண்டு டில்லி புறப்பட்ட காமராஜர், ஹைதராபாத்திலே, நிருபர்களிடம், தொலைந்தது கழகம்! வென்றது காங்கிரஸ்! கார்ப்பரேஷனைக் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது! என்று அறிவித்தார்.
நினைத்தது நடக்கவில்லை; நடந்துவிட்டது கண்டு அவருடைய நினைப்புத் தளரவில்லை, நிலை தடுமாறவில்லை; பேச்சிலேகூட ஒரு அச்சம், ஆயாசம் எழவில்லை.
அதனை நான் எடுத்துக்காட்டுவது அவரைக் கேலி செய்ய அல்ல,
வெற்றியை எதிர்பார்த்து, அதற்காகப் பாடுபட்டு, நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பி, தோல்வியைக் கண்டால், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான கருத்தினைக் கழகத் தோழர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறினேன்.
சில காலமாக நமக்கு ஓர் எண்ணம் வளர்ந்துவிட்டிருக்கிறது; நம்முடைய முயற்சி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற எண்ணம்,
காரணமற்றதுமல்ல அந்த நம்பிக்கை.
நாம் மேற்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதால், அந்த முயற்சி வெல்லும் என்று கருதுவதும்,நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் நிரம்பத் தெரிவதால், வெற்றி கிடைத்திடும் என்று கருதுவதும் தவறு அல்ல.
ஆனால், நம்முடைய முயற்சி நியாயமானது என்பதை எடுத்து விளக்கும் செயலிலும்,
நம்முடைய முயற்சிக்குப் பேராதரவு அளித்திடும் விருப்பம் கொண்டுள்ள மக்கள் முழுத்திறமையுடன் நமக்குத் துணை நின்றிடச் செய்திடும் செயலிலும், நாம் பெறவேண்டிய வெற்றியைப் பெற்றோமில்லை.
மற்றொன்று, நாம் காங்கிரசுக்கு உள்ள ‘தேர்தல் யந்திரத்தின்’ அளவு, தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இவைப் பற்றிய கணக்கிலேயும் தவறு செய்கிறோம்.
காங்கிரஸ், தனது தூய காந்தீயக் கொள்கையை இழந்துவிட்டது; ஆகவே, அதற்குக் காந்தியார் காலத்தில் இருந்துவந்த மதிப்பு இப்போது மங்கிவிட்டது.
ஆகவே, காங்கிரசின் செல்வாக்குச் சிதைந்துவிட்டது என்பது நமது கருத்து.
இந்தக் கருத்தினைக் கொண்டோர், வேறு பலரும் உளர். இந்தக் கருத்து தவறானதுமல்ல; உண்மை; மறுக்க முடியாதது.
கொள்கைக் கூடமாகக் காங்கிரஸ் இல்லை, கொள்கையாளர் அதிகம்பேர் அங்கு இல்லை என்பது உண்மை. அதனால் மதிப்பு மங்கிவிட்டது என்பது உண்மை; ஆனால், ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால், தம்பி! கொள்கையை இழந்துவிட்ட பிறகு காங்கிரசுக்குத் தூய்மையான அமைப்பு என்ற செல்வாக்கு இல்லை என்றாலும், தேர்தலில் ஈடுபட்டு வெற்றி ஈட்டத்தக்க கட்சி என்ற வலிவு வளர்ந்திருக்கிறது.
கொள்கையை இழந்துவிட்டது காங்கிரஸ், எனவே, அதனுடைய வீழ்ச்சி நிச்சயம் என்பது பொதுவான உண்மை என்றபோதிலும், கொள்கைச் சிறப்புடன் காங்கிரஸ் இருந்தவந்தபோது, அதனுடன் நெருங்க முடியாத நிலையினில் இருந்துவந்த பலர், கொள்கையைக் காங்கிரஸ் இழந்துவிட்ட பிறகு, அச்சமற்று அதிலே சேர்ந்துகொள்ள முன்வந்தனர்.அவர்கள், ஓட்டு வேட்டையாடும் வலிவினைக் காங்கிரசுக்குப் புதிதாகச் சேர்த்துக் கொடுத்துள்ளனர்.
மகாத்மாவின் காலத்தில் அதன் தூய்மை காரணமாகக் காங்கிரசிடம் மக்கள் ‘பக்தி’ செலுத்தினர். காங்கிரசின் வலிவு மிகுந்திருந்தது.
காங்கிரசின் கொள்கை புதையுண்ட பிறகு, அதிலே புகுந்துகொண்ட புதியவர்கள், இலாப நோக்கத்துடன், திட்டமிட்டு, காங்கிரசுக்கு வலிவு ஊட்டியுள்ளனர்.
காந்தியார் காலத்துக் காங்கிரஸ், மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு கொண்டிருந்தது.
கொள்கையை இழந்துவிட்ட காரணத்தால் காங்கிரசுக்கு, முன்பு இருந்த வலிவு இல்லை என்று நாம் கூறும்போது, தம்பி! மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு இல்லை என்பதைத்தான் எண்ணிச் சொல்கிறோம்.
கொள்கை இழந்த பிறகு காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள், மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் பெறும்படி செய்யவில்லை; அவர்களால் முடியாது; ஆனால், அவர்கள் மக்களின் ‘ஓட்டுகளை’த் தட்டிப் பறித்திடும் வலிவினைக் காங்கிரசுக்குத் தேடிக் கொடுத்துள்ளனர்.
பத்தினி கெட்டால் பளபளப்பு அதிகமாகும், துவக்கத்தில்! இறுதியில் இழிவு நாசம்! ஆனால், இடையிலே ஒரு புது மினுமினுப்பு, குலுக்கு, தளுக்கு ஏற்படும்.
காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள் அதனுடைய பழைய புனிதத்தன்மையை மாய்த்து விட்டனர்; ஆனால் ஒரு புதிய பளபளப்பைத் தந்துள்ளனர்.
அந்தப் பளபளப்பு விவரமறியாதாரை மயக்கவல்லது என்பதனை மறந்துவிடக் கூடாது.
தனிப்பட்ட முறையில் தாக்கும் நொக்குடன் அல்ல, நிலைமையை விளக்குவதற்காகக் கூறுகிறேன்; காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்தபோது, பழைய கோட்டைப் பட்டக்காரரும், சங்கரண்டாம் பாளையத்தாரும், பூண்டி வாண்டையாரும், மூப்பனாரும் மற்றவர்களும் அதிலே இல்லை. அது, சிறை செல்ல, சொத்து இழந்திட, தடியடி பட, துப்பாக்கிக் குண்டடி ஏற்க அழைத்த காங்கிரஸ்.
எங்குச் செல்கிறோம் என்றும் தெரியாது, என்னென்ன இடர்ப்பாடுகள் என்பதும் புரியாது. எத்தனை நீண்ட பயணம் என்ற கணக்கும் அறியாது என்ன கிடைக்கும் என்று நினைக்கவும் முடியாது, ஒரு தூய தொண்டாற்றுகிறோம், இதயம் கூறுகிறது, அதன்படி நடக்கிறோம் என்று மட்டுமே உணர்ந்து பலர் காங்கிரசில் ஈடுபட்ட காலத்தைக் குறிப்பிடுகிறேன்.
அப்போது, வ. உ. சிதம்பரனாரும், திருப்பூர்க் குமரனும், சர்தார் வேதரத்தினமும் தேவைப்பட்டனர்; கிடைத்தனர்.
அவர்கள் காலத்துத் தூய்மை மங்கிற்று; மடிந்தது; காங்கிரஸ் ஒரு கட்சியாக வடிவமெடுத்தது; அரசியல் ஆதாயம் தரத்தக்க அமைப்பு ஆயிற்று; வாண்டையாரும் பட்டக்காரரும் நெடும்பலத்தாரும் சேதுபதியாரும் காங்கிரசிலே சேரமுடிந்தது.
அவர்கள் சேர்ந்ததரால் மக்களின் இதயத்தை வெல்லும் சக்தியைக் காங்கிரஸ் இழந்தது; ஆனால், மக்களிடம் உள்ள ‘ஓட்டுகளை’ மயக்கியோ மிரட்டியோ பெற்றிடும் வலிவினை அந்த வித்தையில் மெத்தத் தேர்ந்தவர்களான அவர்கள் காங்கிரசுக்குக் கொடுத்துள்ளனர்.
இந்தக் கணக்கினை நாம் கவனிக்காமலிருப்பது தவறு; மிகமிகத் தவறு.
பழையகோட்டைப் பட்டக்காரரால், உப்புக்காய்ச்ச முடியவில்லை, சட்டம் மீறமுடியவில்லை, கைராட்டை சுற்ற முடியவில்லை, வரிகொடா இயக்கம் நடத்த முடியவில்லை; ஆனால், அவரால் இன்று, தம்மைப் பெரிய புள்ளி என்றும் பட்டக்காரர் என்றும் விளக்கிக்கொள்வதன் மூலம் ஏற்படும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓட்டுகளைப் பெற்றுத்தந்திட முடிகிறது.
இத்தகையவர்கள் நிரம்ப உளர், இன்றைய காங்கிரசில்; அதன் காரணமாக, இதயத்தைப் பெறமுடியாத நிலையைப் பெற்ற காங்கிரசினால், ஏழையின் ஒட்டு களைத் தட்டிப் பறித்துக்கொள்ளும் புதிய வலிவினைப் பெறமுடிந்திருக்கிறது.
இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல, மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை கழகத்திடம் வளர்ந்து கொண்டு வருகிறது.
மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையையோ காங்கிரஸ் இழந்துவிட்டது; மக்களின் இதயத்தை வென்றிடும் நிலையோ கழகத்துக்கு இருக்கிறது, இந்நிலையில் காங்கிரசால் கழகத்தைத் தோற்கடிக்க முடியுமா என்ற எண்ணம் நமக்கு.
இந்த வாதத்தில் தவறு இல்லை; பொருள் இல்லாமற்போகவில்லை, தவறு எங்கே இருக்கிறது என்றால், தேர்தல் களம் என்பது, முழுக்க முழுக்க இதயத்தை வென்றிடும் இடம் என்று நினைத்துக்கொள்வதுதான்.
★
“சரியல்ல என்று தெரிகிறது என்றாலும் செய்ய வேண்டி இருக்கிறதே”
“நான் என்ன செய்ய! என் நிலைமை அவ்விதம் ஆகிவிட்டது”
“விருப்பத்தோடா நான் ஆதரவு கொடுத்தேன்!”
இவ்விதமான பேச்சைத் தேர்தல் சமயத்திலே கேள்விப் படலாம்,
★
“அந்தக் கட்சிக்காக அல்ல, நிற்கிறாரே அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்.”
“நிற்கிற ஆள் எனக்குத் தெரியாது, ஆனால், கம்பெனி முதலாளி அவர் பக்கம்; நான் வேறு பக்கம் இருக்க முடியுமா?”“என்ன செய்வது, கடன் கொடுத்தவன், கழுத்தின் மீது கத்தியை நீட்டுகிறான்; இந்தத் தேர்தலில் அவன் பக்கம் நான் இருந்தால் தான், தலை தப்ப முடியும்,”
“என்னவோ என் கஷ்டம் போக ஏதாவது வழி கிடைக்காதா என்று பார்க்கிறேன். கொள்கை கோட்பாடு என்று பேசிக் கொண்டிருந்தால், என் குடும்பத்தைக் கவனிக்க வேண்டுமே! பெரிய மனிதர் வாக்குக் கொடுத்திருக்கிறார், உதவி செய்வதாக. அதனால்தான் அந்தப் பக்கம் இருக்கிறேன்.”
“நம்ம சம்பந்திக்கு வேண்டியவராம். நான் அவர் பேச்சைத்தட்டி நடக்க முடியுமா?”,
“என் மானம் சொத்து எல்லாம் இந்த வழக்கிலே நான் வெற்றி பெறுவதைப் பொறுத்து இருக்கிறது. இதற்கு முக்கியமான சாட்சி ஒருவர். அவர் வந்து சொல்கிறார்.
இன்னாருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று. எப்படி நான் மீற முடியும்.
இவ்விதம் பேசுபவர்களையும், தம்பி! தேர்தலின்போது காணலாம்.
★
தேர்தலின் போது அனைவருமே இதயத்தின் கட்டளைப்படி நடந்து கொள்வார்கள் என்று எண்ணி விட முடியாது. கட்டளை, கனிவுரை, எச்சரிக்கை, வரம், வாக்குறுதி, மிரட்டல் எனும் பல்வேறு வகையின கிளம்பும், பல்வேறு முனைகளிலிருந்து.
★
“பார்ப்போமே, பயல் என்னை மீறி நடக்கிறானா என்பதை”
“கண்டிப்பாகச் சொல்லிவிடு! இதிலே என் சொல்லை மீறி அவன் நடந்தால், பிறகு எவ்விதமான பந்தமும் பாசமும் எனக்குக் கிடையாது என்பதை.”
“என்ன ஏகப்பட்ட ஆட்டம் போடுகிறானாமே! கேட்டு விட்டுவா, சொத்தை ஏலத்துக்குக் கொண்டுவரவா என்பதை.”
என்று இவ்விதமாக மிரட்டித் திரியும் பேர்களைக் காணலாம் தேர்தல் காலத்தில்.
★
மற்றச் சமயத்தில் இதயம் பேசும்-தேர்தல் சமயத்தில் இதயம் தூங்கிவிடும் அளவுக்கு மயக்க மூட்டும் காரியம் நடைபெறும். அதைச் செய்திட வல்லவர்கள் இருக்கிறார்கள்.
மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலில் வெற்றி நமது பக்கந்தான் என்று எண்ணுவது இயற்கை; வாதம் நியாயமானது. ஆனால், தேர்தல் நேரத்தில் நீதியைக்கூடச் சாய்த்துவிடத்தக்க வல்லவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.
கட்சியின் சிறப்பு, கொள்கையின் தூய்மை, வேட்பாளரின் திறமை என்பவைகளைக் காட்டி ஆதரவு திரட்டுவது மேடைகளில், நம்முடைய முறை.
வீட்டுக்குள்ளே உட்கார்ந்து முன்பின் தொடர்பு பற்றிப் பேசி, இன்னாருக்கு இன்னார் வேண்டியவர். இதைச் செய்தால் இது கிடைக்கும் என்பதுபற்றி விளக்கி,
எனக்காக இதைச் செய்யவேண்டும். இதைச் செய்தால் இன்ன பயன் உண்டு, இதைச் செய்யச் சொல்லி ‘இவர்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்.
எப்படியும் என் பேச்சை நீங்கள் தட்டி நடக்கமாட்டீர்கள் என்று கூறிவிட்டு வந்திருக்கிறேன். என் மதிப்பு உங்கள் கையிலேதான் இருக்கிறது.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், மறந்துவிடாதீர்! இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்.
என்று இச்சகம் பேசியும் நச்சரித்தும், ஏற்கனவே கொண்டுள்ள நினைப்பை மாற்றிக்கொள்ளச் செய்வதிலே தனித் திறமை பெற்றவர்கள், தேர்தல் சமயத்திலே சுறுசுறுப்படைகிறார்கள்.
★
யார் வெற்றி பெற்றால் எங்களுக்கு என்ன? எந்தக் கட்சியினால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு வேண்டியது மூவாயிரம், கோயில் கோபுரம் கட்டி முடித்தாக வேண்டும். அந்தத் தொகை கொடுப்பவருக்கு இந்தக் கிராமத்து ஓட்டு முழுவதும்
என்று பேரம் பேசிடும் பெரியவர்களைப் பார்க்கலாம் தேர்தல் காலத்தில்,
★
இப்பத்தானய்யா, நம்ம கிராமத்துக்கு நல்ல காலம் பிறக்கப்போவுது. ஏரி மதகு புதிதாக வேணும் என்று இந்தப் பத்து வருஷமாக முயற்சி செய்கிறோம் அல்லவா! நேற்றுத்தான் அதற்கு வழி பிறந்தது. தாசில்தார் ஒத்துக்கொண்டு விட்டார். நாளைக்கு வருகிறார்கள் அளவு எடுக்க! நம்ம கஷ்டம் தீர்ந்தது.
பரவாயில்லயே, புதுத் தாசில்தார் நல்லவர் போலிருக்கிறது. நம்ம நியாயம் அவருக்குப் புரிந்திருக்குது.
புரியும்படி செய்தாரு கதம்பத்தூராரு...
கதம்பத்தூராருக்கு நம்ம ஏரிமதகுபற்றி என்ன அக்கறை?
அவருக்கு எதுக்காக அக்கறை ஏற்படும்? நான் ஏற்படுத்திவைத்தேன் அந்த அக்கறையை.
அது எப்படி? உன்னோடு பேச்சுக்கு அவர் கட்டுப் படுவானேன்?
அவரோட பேச்சுக்கு நாம கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டதாலேதான்...
அது என்ன ஏற்பாடு? விளங்கச் சொல்லேன்!
நம்ம கிராமத்து ஓட்டு அவ்வளவும், அவர் கட்சிக்கு நாம போடணும்; ஒத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
இவ்விதமாகக் கிராமத்துப் பெரியதனக்காரர் ஊர் கூட்டிப் பேசிவிடுவதும் உண்டு, பல இடங்களில்.
★
“உன்னோட கட்சி கொள்கை கொடி எல்லாத்தையும் நீ அடுத்த தடவைக்குப் பார்த்துக்கொள்ளு. இந்தத் தடவை நான் சொல்றபடி செய்துவிடு! காரணம் இருக்குது”
என்று பேசி, தன் மகனை மடக்கிப் போட்டுவிடும் தகப்பனாரைக் காணலாம் தேர்தல் நேரத்தில்.
★
தர்மபுரித் தேர்தலின்போது ஒரு கிராமம்—நமக்கு ஆதரவான இடம்—அங்கு ஒரு இளைஞர், கழகத்தவர்-நமக்காகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஒருநாள், சேலம் மாவட்டத்துக் காங்கிரஸ் தலைவர்களிலே ஒருவர் அவரைச் சந்தித்தார்; கூட்டுறவுத் துறையிலே அவர் பெரியவர்; கழக இளைஞர் கூட்டுறவுத் துறையில் தொடர்புள்ளவர். அந்தத் தொடர்பையே காரணமாகக் காட்டி, அந்தக் காங்கிரஸ் தலைவர், கழக இளைஞரைத் தன் பக்கம் இழுக்கும் தந்திரத்தில் ஈடுபட்டார்,
“என்னப்பா! நாம இருவரும், கூட்டுறவுத் துறையிலே உள்ளவர்கள். நமக்குள்ளே எந்த விதத்திலும் சச்சரவு, பேதம் வரக் கூடாது. கூடிப்பழகி வருபவர்கள்,”
“கூடிப் பழகுவதற்கும் கட்சிக்காக ஓட்டுக் கேட்பதற்கும் என்னங்க சம்பந்தம்? நான் என் கட்சிக்கு வேலை செய்வதும், நீங்க உங்க கட்சிக்கு வேலை செய்வதும், நம்ம இருவருடைய சினேகிதத்தையும் எப்படிங்க பாதிக்கும்.”
“நாம இரண்டுபேரும், வேறு வேறு கட்சி அல்ல. இருவரும் ஒரே கட்சி, கூட்டுறவுக் கட்சி; தெரிகிறதா!”
“கூட்டுறவு ஒரு கட்சியாகுங்களா! எந்தக் கட்சிக்காரரும் அதிலே இருக்கலாமே...”
“இருக்கலாம்; ஒப்புக்கொள்கிறேன்; ஆனா, நாம இருவரும் தேர்தலிலே வேறு வேறு கட்சிக்கு வேலை செய்தா எப்படியும் நமக்குள்ளே பகை
உண்டாகிவிடும், அது நம்ம கூட்டுறவுத் தொடர்பையே கெடுத்து விடுமே...”
“எனக்கு என்று ஒரு கட்சி இருக்குதுங்களே.”
“கழகம்! தெரியும்! இப்ப நடக்கப்போற தேர்தலில் கழகமே ஜெயித்தாலும், சர்க்காரா மாறப் போகுது? பொதுத் தேர்தலின் போது எந்தக் கட்சி மெஜாரட்டியாக வருதோ அது சர்க்காரை அமைக்கும். பொதுத் தேர்தலின் போது நீ உன்னுடைய கழகத்துக்கு வேலை செய்து, வெற்றி தேடிக் கொடுத்து, சர்க்கார் அமைத்துக்கொள்; நான் தடுக்கவில்லை; வேண்டாமென்று சொல்லவில்லை. இப்ப நடப்பது இடைத் தேர்தல். இதிலே, எனக்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுத்தா, என்ன கெட்டுவிடும், யோசனை செய்துபாரு! இந்தத் தேர்தலில் என் கட்சி ஜெயித்தால் எனக்கு மதிப்பு—எனக்கு மதிப்பு என்றால், நாம நம்முடைய கூட்டுறவுத் துறையை நம்ம மாவட்டத்திலே மேலும் வளரச் செய்ய முடியும், எவ்வளவோ செய்ய வேண்டி இருக்குது. செய்ய வேண்டுமானால் என் வார்த்தைக்கு மதிப்பு உயர வேண்டும். அது உயர, என்ன வழி? இந்தத் தேர்தலிலே நான் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அதனாலேதான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன், இந்தமுறை கட்சிக்காகப் பிடிவாதம் பிடிக்காதே.”
“எப்படிங்க முடியும். நாலுபேர் என்ன சொல்லுவாங்க.”
“சரி, நீ காங்கிரசுக்கும் வேலை செய்யாதே, கழகத்துக்கும் வேலை செய்யாதே. ஒதுங்கி இருந்து விடு.”
இவ்விதம் மேடையில் பேசமுடியுமா! பேசவேண்டிய இடத்தில் பேசினார் அந்தக் காங்கிரஸ் தலைவர்; கழக இளைஞரும் ஒதுங்கிக் கொண்டதாகக் கேள்வி.
★
மக்களின் இதயம் நம்மிடம் என்ற எண்ணத்தை மட்டுமே நாம்கொண்டிருந்தால் போதாது; அதனைக் கெடுத்திடத்தக்கன தேர்தல் நேரத்தில் என்னென்ன கிளம்பக்கூடும் என்பதனைக் கண்டறியவும், தடுத்திடவும், அவைகளை மீறி, வெற்றி கிடைத்திடவுமான முறையில் பணியாற்ற வேண்டும்,
★
காங்கிரஸ், ஆளுங்கட்சியாகிவிட்ட பிறகு, ஆதாயம் தேடுவோர், தாமாக அதிலே நுழைந்துகொள்ளவும், நட்புத் தேடவும் முற்பட்டுவிட்டனர்.
காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் மட்டுமே, தமது நிலைமை பாதுகாக்கப்படும் என்று உணர்ந்த செல்வவான்கள், தேர்தலின் போது, காங்கிரசின் பக்கம் திரண்டு நிற்கிறார்கள்.
மகாத்மாவின் காங்கிரஸ் தனது தூய்மையைக் காட்டி மக்களின் இதயத்தை வென்றது என்றால், ஆளுங்கட்சியாகிவிட்ட காங்கிரஸ், தன்னிடம் உள்ள சலுகை தரும் சக்தியைக்காட்டி ஆசை ஊட்டவும் கெடுத்துவிடும் வலிவைக்காட்டி மிரட்சியை மூட்டிவிடவும் செய்கிறது.
காந்தியாரின் காங்கிரசைக் கண்ட பொதுமக்களின் கண்களில் நீர் துளிர்த்தது—பக்தியால், பாசத்தால்.
இன்றைய காங்கிரசைக் காணும் பொது மக்களின் கண்களில், மிரட்சி தெரிகிறது, எதிர்த்தால் என்னகெடுதல் வந்துவிடுமோ என்ற எண்ணத்தால். இந்த நிலையை மீறி, இதயம் பேசவேண்டும்; எளிதானது அல்ல!!
தம்பி! நான் குறிப்பிட்டுக் காட்டினேனே, பட்டக்காரர், வாண்டையார், நெடும்பலத்தார் என்றெல்லாம்; அவர்களின் ‘ரகம்’ ஒவ்வொரு வட்டத்திலும் உண்டு. அவர்களில் பெரும்பாலோர் முன்பு காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள், தங்கள் நிலைமைகளை, சொத்து சுகத்தை, அதிகாரம் அந்தஸ்துகளைக் காப்பாற்றிக்கொள்ள. அதனாலே மிகுந்த கஷ்ட நஷ்டத்துக்கு ஆளானவர்கள்.
அவர்களைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது, தன் தூய்மையை இழந்ததால்.காங்கிரசில் தங்களுக்கு இடம் கிடைத்ததும் அதனை எதிர்த்து எதிர்த்து எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டவர்கள், இது பொன்னான சந்தர்ப்பம் என்று கண்டு கொண்டனர்; எதை எதை, காங்கிரசை எதிர்த்தபோது பெறமுடியாமல் தவித்தார்களோ, அதனையும், அதனைவிட மேலானவற்றையும் காங்கிரசில் இருந்து கொண்டு அவர்களாலே பெறமுடிகிறது என்றால், அவர்களுக்கு காங்கிரஸ் கசக்குமா! அந்தக் காங்கிரசை வலிவுபடுத்துவதும் அவர்களுக்கு நஷ்டமா!
காமராஜர் நல்லவர், பச்சைத் தமிழர். ஆகவே நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்று பெரியார் சொன்னாலும், அவர் காங்கிரசை ஆதரிப்பதற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியும்!! எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும்!!!
யாராருக்காகப் பெரியார், வாதாடி, அவர்களின் நிலைமைகளைக் காப்பாற்றக் காங்கிரசுடன் போராடிப் போராடிவந்தாரோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரசிலே சேர்ந்து எல்லா வாய்ப்புகளையும் பெற்று, நிம்மதியாக, நிலை உயர்ந்து இருக்கக் காண்கிறார். அவர்களுக்கு இந்த இடம் கொடுத்திருப்பதால், காங்கிரசை ஆதரிக்கிறார். வேறு காரணம் யாவும், திறமையான வாதம்! வேறில்லை!
ஒரு உதாரணம் பாரேன்! தஞ்சைத் தரணியில் நெடும் பலம் சாமியப்பாவின் நிலை காப்பாற்றப்பட, அவரை எதிர்த்துவந்த காங்கிரசைப் பெரியார் மிகப் பலமாகத் தாக்கிவந்தார். இப்போது நெடும்பலத்தாரின் திருக்குமாரன் காங்கிரசில் புகுந்து, தந்தை பெற முடியாதனவற்றைக்கூடப் பெற்று ஒளியுடன் விளங்குகிறார். இந்த ஒளி மங்கிவிடக்கூடாது என்பதற்காகப் பெரியார், இப்போது இந்த ஒளியைத் தந்துதவும் காங்கிரசை ஆதரிக்கிறார். எட்டும் எட்டும் பதினாறுதான், பத்தும் ஆறும் பதினாறுதான்; கணக்குவகைதான் வேறு, முடிவு ஒன்று தான்.
பெரிய புள்ளிகளின் கணக்கு எப்போதும் இந்தவிதமாகத்தான். சோடையாக இருப்பதில்லை. காங்கிரசை எதிர்த்தனர், சுவையும் பயனும் கிடைக்கும் காலம் வரையில்—வெள்ளைக்காரன் துணை இருக்கும் வரையில், பிறகு, காங்கிரசை ஆதரித்து, சுவையும் பயனும் பெறுகின்றனர்.
அவர்கள் இதைப் பெற இழந்தது என்ன? கிளாஸ்கோ மல்லும் சரிகைத் தொப்பியும்! பெற்றது என்ன? மந்திரி வேலை வரையில்! விவரம் தெரியாதவர்களா! அவர்களுக்கே உரிய கணக்குத் திறமையுடன் காரியமாற்றுபவர்கள் இந்தக் கனதனவான்கள்-நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது.
ஒரு நண்பர்—குறிப்பிடத்தக்க புள்ளி—பஸ் முதலாளி—பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கிளாஸ்கோ மல் வேட்டி உடுத்திக்கொண்டு பாப்ளின் சட்டை போட்டுக் கொண்டு பட்டைக்கரை சரிகை அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு, வந்தார். என்னைக்காண! தெருத்திண்ணையில் உட்கார்ந்தோம் பேச.
முனிசிபாலிடி, பஞ்சாயத்து இவற்றின் உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேல் அவைக்குச் செல்லும் தேர்தலில் தாம் நிற்க விரும்புவதாகச் சொன்னார்; என் உதவி கேட்டார்.
எனக்கு வேண்டியவர்கள் அந்த அமைப்புகளிலே அதிகம் கிடையாது. அவருக்கும் தெரியும். ஆனாலும், தேர்தல் என்றால் எல்லோரையும் பார்க்கவேண்டுமே! அந்த முறைப்படிப் பார்த்தார் என்று எண்ணுகிறேன்.
நான் சொன்னேன் இந்தவிதமான தேர்தலிலே நிறையச் செலவாகிறதாமே என்று.
அவர் பச்சையாகவே பேச ஆரம்பித்தார்.
எனக்கு ஓட்டுப் போடுபவர்கள், கேட்டால் பணம் கூடத்தர நான் தயார் என்றார்.
எவ்வளவு என்று கொடுக்க முடியும். நிறையச் செலவாகுமே என்றேன்.
உடனே அவர், மளமள வென்று கணக்குப் போட்டுக் காட்டினார்.
இருபதனாயிரம் செலவாகிறது என்றே ஒரு கணக்குக்கு வைத்துக் கொள்ளுவோம். என்ன நஷ்டம் அதனாலே—ஐந்து வருடம் மேல் அவை உறுப்பினராக இருந்தால்; மாதம் 150, வருடத்துக்கு 1800. ஐந்து வருடத்துக்கு 9000! இதன்றிப் படி வேறு இருக்கிறது. இந்த ஐந்து வருஷத்தில் ஒரு பஸ் ரூட்டாவது கிடைக்காதா! எத்தனை மந்திரிகள், அதிகாரிகள் தொடர்பு ஏற்படும்! போதுமே! முன்னாலே போட்டுப் பின்னாலே எடுக்க வேண்டியதுதானே என்றார். தம்பி! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்கு மட்டுமா, இப்போது உனக்குத் தூக்கிவாரிப் போடப் போகிறது பாரேன்! சொன்னபடியே செய்து காட்டினார் அந்தப் புள்ளி!!
சொன்னதற்கு மேலும் செய்து காட்டிவிட்டார்! காங்கிரசில் சேர்ந்து தலைவராகிவிட்டார்!
இப்போது அவர் மகாநாட்டுத் திறப்பாளர், அமைச்சர், பேச்சாளர்! அவர் அழைக்கிறார், அமைச்சர் செல்கிறார்; அவர் கேட்கிறார், அமைச்சர் அக்கறை காட்டுகிறார்! பெரிய காங்கிரஸ் தலைவராகிவிட்டார். முடிந்தது பாரேன்! இவ்வளவு எளிதாக எப்படி ஏற்படமுடிகிறது இந்த உறவு? இதயம் இருக்கட்டும் ஒருபக்கம் என்று இருசாராரும் இருந்து கொள்வதால்.
இப்படிப் பட்டவர்களின் முகாம், இன்றைய காங்கிரஸ். இவர்களின் துணையுடன் நடத்தப்படும் தேர்தலின் போது, மக்களின் இதயம் நமது பக்கம். ஆகவே வெற்றி நமக்குத் தான் என்று எண்ணி ஏமாறக்கூடாது. விழிப்புடனிருந்து, தேர்தலின்போது சுறுசுறுப்பாகப் பணியாற்றும் விந்தை மாந்தர்களைக் கவனித்தாக வேண்டும். அவர்களில் சிலரை, அடுத்த கிழமை காட்டுகிறேன்.
25-4-1965
அண்ணன்,
அண்ணாதுரை