தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007
காஞ்சிக் கடிதம்: 17
இதயம் வென்றிட...3
- தருமபுரித் தோல்வி நம்பிக்கை கொண்டோர்க்கு நம்ப முடியாச் சேதி
- மக்களின் பரிவு கழகத்திடம்
- ஆபிரகாம் லிங்கனுடைய தோல்வி—வெற்றிப் பட்டியல்
- அமைச்சர்கள் தருமபுரி தலைநகர் என்றதால், கழகத்துக்குக் கிடைத்த வாக்குக் குறைவு.
தம்பி,
மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருக்கக் காணும் போது எவருக்கும் அடடா! ஒடிந்து விட்டதே! கொடியே இதனாலே கெட்டுப்போய்விடுமோ, காய்ந்து போய் விடுமோ, இனி இந்தக் கொடியிலே அழகிய மலர்கள் பூத்திடாதோ! மணம் பரப்பிடாதோ! என்றெல்லாம் கூறிடத்தோன்றும், கவலை உண்டாகும்.
எருக்கஞ் செடி எருமையின் காலிலே சிக்கிக் கூழாகிப் போயினும், யார் அதைக்கண்டு கவலைகொள்வார்கள்!!
ஊருக்கே எழிலளித்து வரும் மணிமாடத்தின் சுவரிலே ஒரு சிறு வெடிப்பு ஏற்பட்டால் காண்பவரெல்லாம் கவலை கொள்வார்கள்; இந்த வெடிப்பினாலே கட்டடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்வதால்; கலனாகிப்போய் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பாழுங்கிணற்றிலே மேலும் சிறிது கலன் காணப்பட்டால் கவலைகொள்வார் உண்டோ?
பட்டுச் சட்டையிலே ஒரு பொட்டு மசி வீழ்ந்தாலும், எல்லோர் கண்களிலும் படுகிறது, என்ன இது! என்ன இது! என்று கேட்கிறார்கள்; குடுகுடுப்பாண்டியின் உடையிலே காணப்படும் கறைபற்றிக் கவலைப்படுவார் உண்டோ?
வீரனுடைய கரத்திலே வீழ்ந்துவிட்ட ‘வெட்டு’ எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்; உடற்கட்டைப்பார், இரும்புபோல! என்று கூறினாலும், வீணனுடைய உடலமைப்பிலே எவரும் கவனம் செலுத்தமாட்டார்கள்.
திருக்குறள் ஏட்டின் பேரிலே மைக்கூடு கை தவறிக் கவிழ்ந்துவிட்டால், பதறிப்போவோம்; பழைய பஞ்சாங்கத்திலே கறையான் குடியேறினால்கூட கவலை கொண்டிடத் தோன்றுமா?
நாம் நல்லது என்று எண்ணி மதிப்பளித்திடும் எந்தப் பொருளுக்கேனும், ஏதோ காரணத்தால் ஏதாகிலும் ஒரு சிறு கெடுதல் ஏற்பட்டுவிட்டாலும், பதறிப்போகிறோம். அது அந்தப் பொருளிடம் நமக்கு இருக்கும் பற்று எந்த அளவு இருக்கிறது என்பதற்குச் சான்று!
தம்பி! மகிழ மரத்தடியிலே உதிர்ந்து கிடக்கும் பூக்களை, ஒவ்வொன்றாகப் பக்குவமாகப் பொறுக்கி எடுத்து மகிழ்ந்திடுவர் சிற்றிடையார்!! தேங்காய் ஓட்டுத் துண்டுகளை அல்ல!!
கழுத்தளவு தண்ணீரில் இறங்கிப் பறிக்கிறான் ஓர் காளை, அழகோவியமாகத் திகழ்ந்திடும் செந்தாமரையை—அவன் காலைச் சுற்றிக்கொள்ளும் பாசியைத் தூக்கி வீசிவிடுகிறான் மற்றோர் பக்கம்.
தத்தமது கருத்துக்கு எவை எவை விரும்பத்தக்கன, மகிழ்ச்சி தரத்தக்கன என்று தோன்றுகின்றனவோ, அந்தப் பொருளினைப் பெற அவர்கள் முனைவதும், அந்த முயற்சியிலே வெற்றி கிடைத்திடும்போது மகிழ்ச்சி கொள்வதும் இயற்கை.
பொழுது சாயும் நேரம், உச்சிப்போது முதல் தேடித் தேடிக் கண்டிட முடியாது கவலை மிகுந்திருந்தவனுக்கு, அவன் தேடிவந்த மூலிகை, ஒருசிறு குன்றின்மீது இருப்பதாகச் ‘சேதி’ கிடைக்கிறது; கிடைத்ததும், இன்றைக்கு இதுபோதும், நாளைய தினம் பார்த்துக் கொள்ளலாம் என்றா இருந்துவிடுவான்? ஒருக்காலும் இல்லை; அலுப்பினை மறந்திடுவான்; அகமகிழ்ச்சியுடன், குன்று நோக்கி நடந்திடுவான்.
தாம் விரும்பும் பொருளைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவோருக்கும், இன்னலையே கன்னலாக்கிக் கொள்ளும் இயல்பு ஏற்பட்டுவிடும்.
ஆனால், அத்தனை கஷ்டப்பட்டு அவன் கொண்டு வந்த மூலிகை, கடுங்காற்றொன்று வீசியதால், கரம் விட்டுக் கிளம்பி, காட்டிலே ஓர்புறத்திலே, கள்ளி காளான் மிகுந்த பகுதியிலே பறந்து சென்றுவிட்டால், அவன் எவ்வளவு பதறிப் போவான்!
வெறுங்கையுடன் வீடு திரும்புகிறான்; எடுத்த காரியந்தனை முடித்திடும் ஆற்றல் மிக்கவன் இவன் என்பதால், இல்லத்துள்ளோர், மூலிகை கொண்டு வருகிறான் என்று எண்ணிப் புன்னகை காட்டுகிறார்கள்; பெருமூச்செறிந்த படி அவன், பட்டபாடு வீணாயிற்று! கரத்திலே சிக்கிற்று, கடுங்காற்று பறித்துக் கொண்டது! என்று கூறுகிறான்; கேட்போர் உள்ளம் என்னென்ன எண்ணும்!
தாம் விரும்பும் பொருள், மதித்திடும் பொருள், பெற்றிட வேண்டி, ஆற்றல் மிக்கவனை அதற்காக அனுப்பிவைத்திட, அவன் ஆயிரத்தெட்டு இன்னலைத் தாங்கிக்கொண்டு, பொருளைக் கண்டெடுத்து வருகிற வழியில், அவனையும் மீறியதோர் வலிவினால் பறிக்கப்பட்டுப் போய்விடின், பொருளைப் பெறத் துடித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் என்ன பாடுபடும்!!
பெற்றிட வேண்டியதாக ஒரு பொருள் இருந்து, அதைப் பெற்றளிக்கும் ஆற்றல் மிக்கவன் அதைப் பெற முனைந்து, பெற்றிடுவான் என்ற நம்பிக்கை பெரும் அளவுக்கு எழுந்திட்ட நிலையில், பெற்றிட இயலவில்லை என்றோ, பெற்றிட முனைந்தேன், வேறொருவன் அதனைத் தட்டிப் பறித்துக்கொண்டு சென்றான் என்றோ அப்பொருளைப் பெற்றளிக்கச் சென்றவன் வந்து கூறிடும்போது, பொருளைப் பெற்று மகிழ்ந்திட எண்ணி ஆவலுடன் காத்துக் கிடந்தவர்களின் உள்ளம், உலைக்கூடம் ஆகிவிடும்.
பொருளின் அருமை, அதனிடம் ஏற்பட்ட விருப்பம், பொருளைப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை, அவனைப் பெறச் சென்றவனின் ஆற்றலிலே வைத்துள்ள நம்பிக்கை, இவற்றின் தன்மையைப் பொறுத்திருக்கிறது, பொருள் பெறாததால் ஏற்படும் ஏமாற்றம், எரிச்சல், கவலை, வேதனை.
பஞ்சவர்ணக் கிளியைப் பக்குவமாகப் பிடித்திடச் சென்று, பாதிமரம் ஏறுகையில், அது பறந்து போய்விட்டது என்றொருவன் கூறும்போது, கேட்பவர்கள், அடடா! அப்படியா! என்று பேசுவர், பரிவுகாட்டி!
ஒரு மணி நேரமாகக் காத்திருத்தேன் கிடைக்கவில்லை என்றொருவன் கூற, எதற்குக் காத்திருந்தாய் ஒரு மணி நேரம் என்று மற்றவன் கேட்க, ஓணானுக்கு என்று முன்னவன் சொன்னால், மற்றவன், பேதையே! பேதையே! இதற்கா இத்தனைக் கவலை கொள்கிறாய்! ஒரு ஓணான் கிடைக்காததற்காகவா!! என்று கூறிக்கை கொட்டிச் சிரிப்பான்.
தர்மபுரியில், தம்பி! நாம் கட்டாயம் வெற்றி பெற்றுத்தருவோம் என்று, வெற்றி பெற்றாக வேண்டும் என்று மெத்தவும் விரும்பி, வெற்றி பெற்றளித்திடுவோம் என்று அழுத்தமாக நம்பிக் கொண்டிருந்தவர்கள் தமிழகத்திலே மிகப் பலர்-கழகத்துக்கு வெளியே கூட. தர்மபுரி வெற்றி இந்த நேரத்தில் மிகவும் விரும்பத்தக்கது என்பதிலேயும், அந்த வெற்றியைக் கழகம் பெற்றளிக்கும் ஆற்றல் உள்ளது என்பதிலேயும், அவர்கள் அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார்கள்! அதனால்தான், தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற ‘சேதி’ வந்ததும், அவர்களால் நம்பமுடியவில்லை, கவலை அவர்களை அலைக்கழித்திருக்கிறது.
தர்மபுரியில் தோற்றுப் போனதால், எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் கவலையும் வேதனையும் ஏற்பட்டது என்றாலும், அந்தக் கவலையும் இடையில்,
- மக்கள் கழக வெற்றியை எவ்வளவு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்,
- கழக வெற்றி நிச்சயம் என்று மக்கள் எத்துணை நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்,
- வெற்றி பெற்றிடத்தக்க ஆற்றல் கொண்டது கழகம் என்ற எண்ணம் எவ்வளவு அழுத்தமாக இருந்திருக்கிறது,
என்பவைகளை அறிந்துகொள்ள முடிகிறது; கவலையையும் கலைத்துவிட்டு ஓர் இன்பப் புன்னகை எழுகிறது.
- கழகமாவது, வெற்றி பெறுவதாவது!
- கழகத்துக்கு ஏது அந்த வலிவு!
- கழகம் வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன!
என்ற இந்த முறையிலே, பற்றற்று, மக்கள் இருந்துவிடவில்லை; உலகிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. இப்போது கழகம் தர்மபுரியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதிலா கவனம் செலுத்தவேண்டும்! என்று கூறி அலட்சியய் போக்கிலே இருந்துவிடவில்லை. கழகம் வெற்றி பெறவேண்டும், கழகம் வெற்றி பெறும், அந்தச் சேதி காதில் விழும், களிப்புக் கிடைத்திடும் என்று மக்கள் மிக்க ஆவலுடன் இருந்திருக்கிறார்கள். ஆகவே தான், கழகம் தர்மபுரியில் தோற்றுவிட்டது என்றதும், அவர்கள் திடுக்கிட்டுப் போயினர், துயர் கப்பிக்கொண்டது.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கழகம் ஒரு தேர்தலிலே ஈடுபடும்போது, வெற்றி யாருக்கு என்பது பற்றி, மக்கள் இந்த அளவு அக்கறை காட்டினதில்லை.
வெற்றி பெற்றால்கூட, கழகமா? வெற்றியா? சரி, அதனால் என்ன? கழகம் வெற்றிபெற்றுவிட்டதால்! காய் கனியாகிவிடப்போகிறதா, காகம் கானம்பாடப் போகிறதா! ஏனப்பா, கடுகை மலையாக்கிக் காட்டுகிறாய்!! என்று பேசிடுபவரின் தொகைதான் மிகுதி.
இன்று நிலைமை அவ்விதம் இல்லை; கழகம் தேர்தலிலே ஈடுபடுகிறது என்றால், கட்டாயம் வெற்றிதானே! இதிலென்ன அய்யப்பாடு எழமுடியும்!! என்று மக்களில் பெரும் அளவினர் பேசிக்கொளக் கூடிய கட்டம் தோன்றிவிட்டது.கழகம், மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது; கழகம் வெற்றிபெறத்தக்க ஆற்றலுடன் இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் மிகுந்திருக்கிறது; கழகம் வெற்றிபெறவில்லை என்றால், மக்களுக்குத் திகைப்பு ஏற்படுகிறது, எனும் இவை பொருள் மிக்கன. நாம், மக்களின் பார்வையிலே இருக்கிறோம், மக்களின் பரிவு நம்மிடம் உறவுகொண்டிருக்கிறது என்பது பொருள்.
ஆகவேதான் தம்பி! தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற உடன், மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருப்பதைக் காணும்போது, மணிமாடச் சுவரிலே வெடிப்பு ஏற்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, பட்டுச் சட்டையிலே ஒரு சொட்டு மசி விழுந்திருப்பது காணும் போது, வீரன் கரத்திலே ஒரு வெட்டு வீழ்ந்திருப்பது தெரியும்போது, திருக்குறள் ஏட்டிலே மசிக்கூடு கவிழ்ந்தது காணும்போது, எப்படிப் பதறுவார்களோ, கவலைகொள்வார்களோ. அப்படிக் கவலை கொள்கிறார்கள், கழகத்தின் தோல்வியைக்கேட்டு.
செல்லாத நாணயத்தைத் தந்திரமாக, நல்ல நாணயம் என்று கடைக்காரனை நம்பச்செய்து தந்துவிட்டு, பொருள் பெற்றுக்கொண்டுவந்து விடுபவன் அடையும் மகிழ்ச்சி காங்கிரஸ்காரர்களைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது, இப்போது!!
அதிலும், பலநாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு ஒரு நாள் விருந்து கிடைத்துவிட்டால், தின்னமுடியாத அளவுக்குத் தின்றுவிட்டுத் திணறுவார்களே, அந்த நிலைக்குச் சென்றுவிட்டார் முதல் அமைச்சர் பக்தவத்சலனார்!
பல நாட்களாக, கொளுத்தினார்கள் இடித்தார்கள், சுட்டார்கள் செத்தார்கள், ஓடினார்கள் துரத்தினார்கள், பிடித்தார்கள் அடைத்தார்கள், என்ற விதமான ‘சுபசேதி’களையே கேட்டுக்கேட்டு, இடிந்து போயிருந்தவரல்லவா, இப்போது வெற்றி என்றதும், தெருக்கூத்திலே காண்போமே, கலர்க்கண்ணாடித்துண்டுகள் பதித்த கிரீடமும், காக்காப் பொன்முலாம் பூசப்பட்ட கட்கமும், ஐந்தாறுவிதமான வர்ணத்துணிகளைச் சுற்றி விடப்பட்ட ஆடை அலங்காரமும், பிசின்போட்டு ஒட்டப்பட்ட மீசை கிருதாவும்கொண்ட ‘ராஜா’ குதித்துக் கூவுவாரே, ராஜாதி ராஜன் வந்தேனே! மகா ராஜாதி ராஜன் வந்தேனே!! என்று அதுபோலாகிவிட்டார்!
வெற்றி! வெற்றி! வேட்டுச்சத்தம் கேட்ட நாட்டில், வெற்றி! வெற்றி! சுட்டுத்தள்ளிய சூரர்கட்கே வெற்றி! வெற்றி! என்று பாடுகிறார். பல நாள், பதைபதைத்துக் கிடந்தவர், இந்தப் பாயசம் பருகட்டும் பாவம்! வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், இப்படித்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்பே தமக்குத்தெரியும் என்று பேசுகிறாரே, அது தவறு, தேவையற்றது, பொருளற்றது!
ஆனால், வெற்றிக்களிப்பிலே பொருள் பொருத்தம் பார்க்கவா தோன்றும்; ராமன் பிறவாததற்கு முன்னாலேயே இராமாயணம் எழுதினாராமே வால்மீகி, அதுபோலத் தம்மை எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, அத்தனை பாராட்டத்தக்கதாகக் கொண்டாடத்தக்கதாக ஏன்தோன்றுகிறது? துளியும் எதிர்பார்த்திராததால்!!
தாளம் துளிகூடத் தவறவில்லை என்று பாராட்டுக் கிடைத்ததும், யாருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிளம்பும்? இசை மன்னன் சித்தூர் சுப்பிரமணியத்துக்கா!! இன்றைக்கு வரவேண்டிய வித்துவான் வராததாலே, இலுப்பையூர் கருப்பையா பாடுவார்!! என்ற அறிவிப்புடன் பாடத்தொடங்கியவர், ஆனந்தத் தாண்டவம் ஆடுவார், தாளம் தவறாமல் பாடியதாகப் பாராட்டப்பட்டால்.
பொதுத் தேர்தலுக்குப்பிறகு கழகம், காங்கிரசைச் சந்தித்த, தேர்தல் களம்,
- திருச்செங்கோடு
- திருவண்ணாமலை
- சென்னை மாநகர்
- தர்மபுரி
தாளம் தவறவில்லை என்று தட்டிக்கொடுப்பது போன்ற பாராட்டுதலுக்கு மட்டுந்தான் காங்கிரஸ் உரிமை கொண்டாடமுடியும். அதற்குமேலே கொண்டாடுவது, உப்பை அதிகமாக்குவதாகும்; மணம் நெடியாகிவிடும் நிலைமை!! ஆனால், அதைத்தான் முதல் அமைச்சர் செய்துவருகிறார் — மும்முரமாக!! நெடுநாளைக்குப்பிறகு புதிதாக வளையல்களைக் நிறையப் போட்டுக்கொண்டவள், குலுக்கி நடைநடைந்து கலகல ஒலி எழுப்பிக் காட்டுவதுபோல,
மூன்று முறை கழகம் வெற்றிபெற்றபோது, இந்த ‘முன்கூட்டியே’ இன்னதுதான் நடக்கும் என்று கணித்திடும் வால்மீகி எங்கே போயிருந்தாரோ!!
இத்தனை பிணங்கள் வீழாதிருந்தபோது, மூன்று முறை காங்கிரசைத் தோற்கடித்த பொதுமக்கள், தர்மபுரியில் வெற்றிகொடுத்தார்கள் என்றால், காங்கிரசின் அடக்கு முறையைப் பாராட்டியா! மக்கள் என்ன இதயமற்றவர்களா!! அல்லவே!!
அடக்குமுறைப் பிரச்சினையைக்கூட மறைத்துவிடத்தக்க வேறு ஏதோ நிலைமைகள் உருவாக்கப் பட்டதாலன்றோ மக்கள் காங்கிரசுக்கு வெற்றி தந்தனர். இதனைப் புரிந்துகொள்ள, சராசரி அறிவே போதுமே!
மக்கள் விரும்பவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை; காங்கிரசின் பெருந்தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை; ஆனால், தொகுதியில் வேலை பார்த்துவந்த காங்கிரஸ் தலைவர்கள், தமது வேலை முறைகளைக் கணக்கெடுத்து வெற்றி கிடைத்திடும் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும்; அவர்கள் கூறியிருப்பார்கள் முதல் அமைச்சருக்கு; அப்போது அவரே அதை நம்பியிருந்திருக்கமாட்டார். நடந்துவிட்ட பிறகு பேசுகிறார், நமக்கு முன்பே தெரியும்!! என்று.
தம்பி! அவர்கள் அவ்விதம் பேசுவதாலே நமக்கு நட்டமில்லை; சொல்லப்போனால் நமக்கு ஒருவிதத்தில் அந்தவிதமான பேச்சு நல்லதுகூட.
நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்; நாடே எதிர்பார்த்தது நாம் வெற்றி பெறுவோம் என்று, ஆனால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.இதனை நாம் மறத்தலாகாது, நினைவினிற் கொள்ள வேண்டும்; எதற்கு? மக்களின் இதயம் நமது பக்கம் என்று அறிந்து அகமகிழ்ந்து நம்பிக்கை கொண்டு விடுவது மட்டும் போதாது; வெற்றிக்கான முறைகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சியைப் பெறுவதற்காக.
தேர்தலிலே மட்டுமல்ல, எடுத்த காரியம் எதிலும் தொட்டது அத்தனையும் பலித்துவிடும் என்று நிலைமை இருந்துவிடுவதில்லை. ஏமாற்றங்களும், இடையூறுகளும் எவருடைய பாதையிலும் ஓரோர் வேளை குறுக்கிடத்தான் செய்யும். தோல்விகளையும் சந்தித்திட வேண்டும்; துணிவுடன். ஒரு பட்டியல் தருகிறேன், பார் தம்பி!
- 1831—வியாபாரத்தில் தோல்வி.
- 1832—சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
- 1833—மீண்டும் வியாபாரத்தில் தோல்வி.
- 1834—சட்டசபையில் பதவி.
- 1835—க தலியின் மரணம்.
- 1836—நரம்புக் கோளாறு நோய்.
- 1838—சட்டசபைத் தலைவர் தேர்தலில் தோல்வி.
- 1840—எலக்டர் தேர்தலில் தோல்வி.
- 1843—பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
- 1846—பெருமன்றத் தேர்தலில் வெற்றி.
- 1848—பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
- 1855—செனட் தேர்தலில் தோல்வி.
- 1856—உதவி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி.
- 1858—செனட தேர்தலில் தோல்வி.
- 1860—ஜனாதிபதி தேர்தலில் வெற்றி.
இந்தத் தோல்வி—வெற்றி பற்றிய பட்டியல் எவருடையது தெரியுமா தம்பி! இறவாப் புகழ் பெற்றுவிட்ட ஆபிரகாம் லிங்கனுடையது!
ஆமாம்! தம்பி! அத்தனை தோல்விகளைக் கண்டிருக்கிறார் ஆபிரகாம்லிங்கன். எத்துணை உள்ள உரம்! அந்தத் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்திடாமல், முயற்சியிலே மேலும் மும்முரம் காட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி இறவாப் புகழ்பெற்றுக் காட்டினார். ஒவ்வொரு முறை அவர் தோற்றபோதும் அந்த நாட்டுப் பக்தவத்சலங்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் தொலைந்தான்! தொலைத்துவிட்டோம்!! என்று எத்தனைபேர் முழக்கம் எழுப்பியிருப்பர்? ஆபிரகாம் லிங்கனுடைய நண்பர்களேகூட, இந்தத் தோல்விகளைக் கண்டபோது, இவ்வளவு தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்காத இந்த மக்களை என்ன சொல்வது! இப்படிப்பட்ட மக்களை நம்பி யார் தான் எந்த நல்ல காரியத்தைத் தான் செய்ய முற்பட முடியும்! என்றெல்லாம் பேசியிருந்திருப்பார்கள். ஆயினும், ஆபிரகாம்லிங்கன், இந்தத் தோல்விகளைக் கண்டு, துயர்துளைக்கும் மனத்தினராகிவிடவில்லை, மக்களின் நல்லாதரவு கிடைக்கும் வரையில், அதற்காகப் பாடுபடுவது தமது கடமை என்ற உணர்வுடன் பணியாற்றினார்; திராவிட முன்னேற்றக் கழகம், பொதுமக்களின் நல்லாதரவைக் கேட்டிடும் பணியினை ஓர் கடமை எனக்கொள்ள வேண்டும். மக்கள் தமது நல்லாதரவை நமக்குத் தராமலும் இல்லை. தர்மபுரியில் நமக்கு அந்த நல்லாதரவு கிடைக்காமற் போனதற்கான காரணத்தை, கழகத் தோழர்கள் கண்டறிய வேண்டும்; நமது வேலை முறைகளிலே இருந்திடக்கூடிய குறைபாடுகளைக் களைந்திடுவதிலே கவனம் செலுத்த வேண்டும். நமது தோல்வி, நமக்கு மட்டுமன்றி, நமது கழகத்திற்கு வெளியே உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கெல்லாம், எவ்வளவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறியும்போது, கவலையைவிட, ஒரு புதுவித நம்பிக்கையே நமக்குத் தோன்றும். அத்துணை மக்கள் நமது வெற்றியை எதிர்பார்த்தபடி உள்ளனர் என்பது புரிவதால்.
பொது உண்மையை அனைவரும் அறிவர்; ஆளுங்கட்சிக்குக் கிடைக்கக்கூடிய சில வசதிகளும், வாய்ப்புகளும், எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்காது. ஆம் எனில் அதற்கு என்ன பரிகாரம்? அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு ஆளும்கட்சி சாதித்துக்கொள்வதை நாம் நமது பரிவினைக்காட்டி, தோழமையைக் காட்டி. தூய்மையைக் காட்டி, முயற்சியின் மூலம், பெற்றிட வேண்டும்; பெற்றிட முடியும்; பெற்றிருக்கிறோம்; தரும புரியில் பெறத் தவறிவிட்டோம்.
ஆளுங்கட்சி அதிகார பலத்தைக் காட்டி ஏழை எளியவர்களை மட்டுமல்ல. வணிகர்களை, அலுவலகப் பணியாளர்களை, மயக்கவும், மிரட்டவும் முடிகிறது. அதனால்தான், அமைச்சர்களாக இருந்துகொண்டே பொதுத்தேர்தலை நடத்துவதைக் கண்டித்தோம்; தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகிலும், மந்திரி பதவிகளை ராஜிநாமாச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். காங்கிரஸ் அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இடைத் தேர்தலின்போது, நாம் அந்த யோசனையைக்கூட கூறமுடியாது; பொருளில்லை.
இடைத் தேர்தலிலே பெரும்பாலும் ஆளுங்கட்சி வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ளும் வாய்ப்புப் பெறுகிறது. வருபவர் யார்? மந்திரி! கேட்பது என்ன? ஓட்டு! கொடுக்காவிட்டால்? கோபம்! கோபம் வந்தால்? என்னென்ன செய்வாரோ? நமக்கேன் அவர்களின் பொல்லாப்பு!!—இது பொதுவாக மக்களின் மனப்போக்கு. இதை மீறித்தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிட வேண்டும்.
எதிர்கட்சிக்குத் தருகிற ‘ஓட்டு’ உடனடியான பலனை எதிர்பார்த்து அல்ல!
ஆளுங்கட்சினர் ‘ஓட்டு’ கேட்கும்போதோ, உடனடியாகப் பலன் தருவதாகக் சொல்லுகிறார்கள்; மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.
- “பெண்கள் கல்லூரி வேண்டும், வேண்டும் என்று பல வருஷங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் எற்பாடாகவில்லை”
என்று தர்மபுரிப் பிரமுகர்கள், கழகத் தோழர்களிடம் கூறும்போது, கழகத் தோழர்கள் என்ன சொல்லுவார்கள்.
- சட்டசபையில் இதைப்பற்றிக் கட்டாயம் பேசுகிறேன். கல்லூரி அமைக்காதிருக்கும் போக்கைக் கண்டிக்கிறேன். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டினால், காங்கிரஸ் மந்திரிகளுக்குப் பயம் ஏற்படும்; அப்போது கல்லூரிக்கு வழி பிறக்கும்.”
இதைத்தான் சொல்லுவார்கள்; முறை அமைச்சர் ராமய்யாவிடம் அதே தருமபுரிப் பிரமுகர்கள் அதே கல்லூரி விஷயமாகக் கேட்டால், அவரால் என்னென்ன சொல்ல முடியும் என்பதை எண்ணிப்பாரேன், தம்பி!
- “கல்லூரியா! பெண்கள் கல்லூரியா! ஏற்படுத்தலாமே! அதிலென்ன கஷ்டம்! எத்தனையோ கல்லூரிகள் ஏற்படுத்தி இருக்கிறோமே. இங்கே எந்த இடம் நல்ல இடம், கல்லூரிக்கு?
இவ்விதம் பேசமுடியும்; பேசுகிறார்கள். உள்ளம் பூரிக்கிறது பிரமுகருக்கு.
- இருக்கிறது நல்ல இடம்; ஊருக்கு மையமாக; ஒரே சதுரம்; அறுபது ஏக்கர்.
என்கிறார் என்று வைத்துக் கொள்ளேன், உடனே மந்திரியின் மோட்டார் கிளம்புகிறது; ஜீப் முன்னாலே பறக்கிறது; பக்கத்தில் பிரமுகர் ; இடத்தைப் பார்வையிடச் செல்கிறார்கள்.
- “உங்க பேட்டை ஓட்டு எப்படி?”
என்று அந்தச் சமயத்தில் மந்திரி கேட்டால் என்ன பதில் வரும்?
- “எல்லாம் ‘ஐயா’ சொல்கிறபடிதான்! காங்கிரசுக்குத்தான்”
இடத்தைப் பார்வையிடுகிறார்கள்; தரமான இடம் என்கிறார் மந்திரி; ஆமாம்! என்கிறார் அதிகாரி! அகமகிழ்ச்சி பிரமுகருக்கு; கல்லூரி வந்துவிடும் என்பதனாலே மட்டுமல்ல; நெடுநாளாக விலை போகாதிருந்து வந்த அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட முடியும் என்பதால்; நிலம் பிரமுகருடையது; இந்த விவரம் விளக்கப்பட்ட பிறகு அந்தப் பிரமுகர், ஐம்பது பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்களே அந்தக் கொடுமையையா எண்ணிக் கொண்டிருப்பார்; ஏகர் ஐயாயிரம், அறுபது ஏகர்! மொத்தத்தில் 3 இலட்சம்!! இந்தக் கணக்கிலே அல்லவா அவர் உலவிக் கொண்டிருப்பார். மகனை இழந்த மாதா கதறுவதா காதில் கேட்கும் புதுப்புது நோட்டுகளை எண்ணும்போது எழுகிறதே இன்பநாதம், அது!!
தம்பி! நாம், மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலிலே வெற்றி நமது மக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, காங்கிரசாட்சியின் கொடுமைகளை எடுத்துப் பொதுமக்களிடம் விளக்கிக்கொண்டு இருக்கும்போது, இந்தக் கல்லூரிப் பிரச்சினை படை எடுத்து, நமக்கு வரவேண்டிய ஓட்டுகளை விழுங்கிய கொண்டிருக்கிறது.
பண்புள்ள ஜனநாயக நாடுகளில், அமைச்சர்கள் தேர்தலின்போது—அதிலும் இடைத் தேர்தலின்போது—அதைச் செய்து தருகிறோம், இதை நிறைவேற்றிக் கொடுக்கிறோம் என்று வாக்களிக்கமாட்டார்கள். முறையல்ல என்பதால்.
தர்மபுரியில் நடந்தது என்ன?
சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, புதிய மாவட்டத்துக்கு எது தலைநகர், கிருஷ்ணகிரியா? தருமபுரியா? என்கிற பிரச்சினை அங்கு ஓட்டுக் கேட்க வந்த அமைச்சர்கள்,
- தருமபுரியைத் தலைநகர் ஆக்கித் தருகிறோம்.
என்று, அங்கேயே அறிவித்திருக்கிறார்கள். தருமபுரியில் பிரமுகர்களும், வணிகர்களும், எப்படி அதிலே மயங்காதிருக்க முடியும்!
முழுக்கணக்கு எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தருமபுரியைத் தலைநகர் ஆக்குகிறோம் என்று தேர்தல் நேரத்தில் காங்கிரசார் வாக்களித்த காரணத்தால், தருமபுரி வட்ட ஓட்டுகள் நமக்குக் கிடைத்திருக்க வேண்டியவை, காங்கிரசுக்கு விழுந்துள்ளன என்பது தெரிகிறது.
தம்பி! தருமபுரி தொகுதி மூன்று பிரிவுகள் கொண்டது; ஒன்று காரிமங்கலம் வட்டம்; இரண்டாவது தருமபுரி வட்டம்; மூன்றாவது நல்லம்பள்ளி வட்டம்.
கடந்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக நின்றவர் நல்லம்பள்ளி வட்டம் பாளையம் புதூர் கந்தசாமி கவுண்டர். கழக வேட்பாளர், தருமபுரி வட்டம். வெற்றிபெற்ற சுயேச்சையாளர் வீரப்ப செட்டியார் காரிமங்கலம் வட்டம்.
ஆகவே காரிமங்கலம் வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை, வீரப்பசெட்டியாருக்கு, நல்லம்பள்ளி வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை காங்கிரஸ் வேட்பாளர் பாளையம் புதூராருக்கு, கழக வேட்பாளரான சுப்பிரமணியம் அவர்களுக்கு, தருமபுரி வட்ட ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை விழுந்தன.
கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்ததைவிட இம்முறை காரிமங்கலம் வட்டத்திலும், நல்லம்பள்ளி வட்டத்திலும் (நான் அறிந்தவரையில்) கழகத்துக்குக் கிடைத்திருக்கிறது; ஆனால், தருமபுரி வட்டத்துக்கள் ஓட்டுகள் கழகத்துக்குக் குறைந்துவிட்டன.
காரணம் என்ன இருக்க முடியும்? தலைநகர்!!
இந்த ஆராய்ச்சி செய்துகாட்டி தோல்வியை மறைத்திட ஒரு திரை நெய்துகொண்டிருக்கிறேன் என்று எவரும் எண்ணிக்கொள்ளவேண்டாம். இந்த விவரம் கூறுவதற்குக் காரணம், தேர்தலின் போது, நாம் துளியும் எதிர்பாராத, புதிய நிலைமைகள் வடிவமெடுத்து, எதிர்பாராத, விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதை விளக்குவதற்காகவே.
ரஷியாவிலே, நெப்போலியன் படுதோல்வி அடைந்த தற்கான பல காரணங்களிலே ஒன்று என்று இன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நெப்போலியன் ரஷியா மீது படை எடுத்துச் சென்ற சமயத்தில், வழக்கமாக ஆரம்பமாகிற பனிக்காலம் பத்துநாள் முன்னதாகவும், வழக்கத்தைவிடக் கடுமையாகவும் ஆரம்பித்தது ஆபத்தாக முடிந்தது என்கிறார்கள்.
களத்திலே ஏற்பட்டுவிடும் தோல்விகள், படை பலத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, முறைகளையும் செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடம் தருவன. அந்த முறையில், தருமபுரித் தோல்வியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மக்களின் இதயம் வென்றிட நாம் எடுத்துக் கொண்ட முயற்சி நாம் பெருமிதம் கொள்ளத்தக்க வெற்றியைக் கொடுக்கிறது. நமக்குக் கிடைத்துள்ள இந்த வலிவினைச் சிதைத்திட, ஆளுங்கட்சியான காங்கிரஸ் என்னென்ன நிலைமைகளை உருவாக்கும், என்னென்ன முறைகளை மேற்கொள்ளும் என்பன பற்றி விழிப்புடனிருந்து கண்டறிந்து அவைகளையும் முறியடிக்கத்தக்க விதமாக நமது முறைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காகவே இத்தனை கூறினேன்.
9-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை