தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!

கடிதம் 78

எரிகிற தழலில்...!

தேர்தலுக்கு நேரு வருகை—அரியலூர் விபத்து—பெரியாரும் காமராஜரும்.

தம்பி!

நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார்.

“கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக்கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!” என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!!

எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான்—அதற்குக் காரணம் இரண்டு.

சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர் இரயில் விபத்து நேரிட்டது—சர்க்கார் கணக்களித்துள்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று—மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக் கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் ‘கனம்’கள்.

அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!!—என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப்போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும்—இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர்.

நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும் துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை.

அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்!

வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்!—என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக்காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று, அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; “மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள்—அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை ‘ஓட்டு’ நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள்—எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள்—இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன்—இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி, மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள்”—என்று கூடப் பேசுவார்.

தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவிலிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்.

ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை.

தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்!

தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார்—ஆனந்தத்தோடு வருகிறார்!

சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்!

கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட்டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்!

தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!—என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்!

எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார்—விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால், வருவது இல்லை. வரவேண்டும்—ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான்.

நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது—அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது—விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது—அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது.

வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ் காரரும் சொல்லிவிட முடியாது. :கோசி நதியால் வெள்ள விபத்து

கட்சு பூகம்ப விபத்து
அசாமில் வெள்ள விபத்து
உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து

இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும்.

அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரிகோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள்—வடக்கு வேறுதான்—தெற்கு வேறுதான்!!

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே—அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை.

ஆனந்த விகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெற மறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது.

“நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன்கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்ட போதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்,உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று”

இவ்விதம் ஆனந்த விகடனே எழுத நேரிடுகிறது.

அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது.

அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்!—என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேருபண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது.

தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளிகளையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார்—அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக்களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டு கூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள்—காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே!—என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்!

இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!!

சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேருபண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள்—எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத் தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்!

பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார்—செய்யட்டும்—ஆனால் அது போதாது—காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும்—அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது!! இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம்.

பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும்போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோஷியலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப்போகிறார்கள்!

“நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்” என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும்—தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மன வேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்து விடமாட்டேன். நான், என் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.

எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய—அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின்போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்க வைக்கட்டும்—தம்பி—எனக்கு அது பற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப் படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது!

ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம்—ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள்—ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை—மாற்றாந்தாய் மனப்பான்மையை—மாற்றிடப் பொதுவான, பலமான, முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த் தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார்.

இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன்.

தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.

தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேருபண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர, வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும். ஆனால் இரண்டு என்ன—எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள்.

தேவிகுளம்
பீர்மேடு
நெய்யாற்றங்கரை
கொச்சின்—சித்தூர்
பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி

தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது—ஐயனே!—மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று ‘இருந்து முகந்திருத்திக்’ கூறினர்; “என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!” என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். “எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக்கொள்க!”—என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டார நாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒருதுளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை—சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக்கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில் பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப்படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப்படுகிறார்களே—இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா?—பாதகம் விளைவிக்கும் பண்டார் நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்!

ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை; ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணாச்சியையும், தமிழரின் நியாயமான ‘கோரிக்கைகளை’க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக்கொண்டேதான் வருகிறது.

சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர்.

நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார்.

நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார்.

அப்படிப்பட்ட ‘வீரதீரமிக்கவர்’ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின்தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400-கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்; கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், ‘கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!’ என்று கெஞ்சுவார்களே—அதுபோலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400-கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும், இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேருபண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ—அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில், இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு “ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;”—என்று பாராட்டுகிறார்கள்.

கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது. நேருபண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன் பனிபோலாகும் என்று காமராஜர் கருதுகிறார்—பலமுறை அதுபோலாகி இருக்கிறது—இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும்—இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன.

பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டி கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது.

இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள்.

எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன்போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள்கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்லி பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது—அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ்காரர்களை. “என்ன தோழரே! செய்வது?” என்று பரிதாபத்தோடு சிலரும், “இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல” என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர்—ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை, நேருவின் விஜயம் மாற்றி விடாது.

நேருபண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை.

காமராஜர் கருதுவதுபோல் நேருபண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேருபண்டிதருக்குப் ‘பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட, தனக்கும் பிறநாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது!’ மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி,

அடுத்துக் கெடுப்பவர்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்
ஊர் சுற்றிகள்

என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேருபண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை.

காரணம் எதுவாயினும், தம்பி, நேரு பண்டிதரின் ‘விஜயம்’, இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே மூழ்கி வதைபட்டபோது வராத நேரு, அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள்.

“தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக் கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிறநாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா, புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை ‘தமிழ்நாடு’—நேருபண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் — வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு—எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப்போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.”

அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது—எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!

‘தனி நாடு’ என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கினரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில்—மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த நிலைமை மாற்றப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

மாகாணங்களுக்கு—மாநிலங்களுக்கு—இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றி வைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.

வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது.

இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது.

எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் ‘சுருதி பேதம்’ இருப்பது தெரிகிறது.

அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு-தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது ‘காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை.’

ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம்.

வடக்கு—தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் “நகாசு” வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை ஏன் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!

லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால்—அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்!

இங்கும் அதுபோல, நேருபண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள்.

இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன?

“இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே.
தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.”

தம்பி! ‘குமுதம்’ இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது!

தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது

என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன?

இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை—இயற்கையாக எழுவதில்லை!

தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு ‘குமுதம்’ என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது.

தமிழன் என்றோர் இனம் உண்டு
தனியே அவர்க்கோர் பண்பு உண்டு

அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா?

“தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.”
என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும்.

நமது அமைச்சரவை!

தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!!

நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு
நல்லவரை
திறமைசாலியை
அனுபவமிக்கவரை

கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழ்க் கவர்னரை

நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்!

தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.

மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.

மத்திய அரசாங்கம்

என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது.

பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசீய முகாமின் தீப்பொறி கிளம்புமே...என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி, நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!!

தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது.

நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது.

உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார்.

மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது!

என்று கூறுகிறார்!

ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது—என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள ‘ரசம்’ இதிலே இருக்கிறதல்லவா? ஆம், அண்ணா என்பாய், தம்பி. இதனினும் மேலான ‘ரசமும்’ இருக்கிறது, கேள்.

அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது—என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா ‘குமுதம்’ ஆசிரியர், அவரைப் பார்த்து,

தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!—

என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!!

ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும், ஆச்சரியப்படுவானேன்!

பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும், உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், ‘உள்ளதும்’ போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால், ‘மத்திய அரசாங்க’ப்பிடி, இரும்புப்பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் ‘திக் விஜயத்தி’னால், தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக்கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேருபண்டிதரின் பவனி!!


16—12—1956

அன்பன்,
அண்ணாதுரை