தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்!
கடிதம்: 75
மிரட்டல்! விரட்டல்!
டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும்—
டில்லியின் ஓரவஞ்சனை—கல்வி, கலை, அரசியலில்.
தம்பி!
தக்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா—கோபமில்லையே என்மீது அதற்காக!!
மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார்—அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல—ஆசிரியத் தொழிலில் இருப்பவர்—அமைதியில் ஆனந்தம் காண்பவர்—அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூடமாட்டார் — இவ்வளவு போதும் — கோடிட்டுக் காட்டினாலும் போதும்—இப்போதைக்கு இவ்வளவுபோதும்—என்று அவ்வப்போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர்—என் நண்பர்—தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர்—பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர். மு. வரதராசன்.
பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர், திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகிறோம்.
இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, “பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!” என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, “ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை” என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர்.
அதிலும், தமிழாசிரியர்கள்—அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்—ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது.
அவர்களை, ‘நாத்திகர்’ என்று நிந்திக்கவும், ஆட்சியாளர்கள் துடித்தெழுகின்றனர்.
எனவே, டாக்டர். மு. வ. வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்று நான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை—அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம்.
அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர்.
பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசுமபோது, ஆம் என்று தான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின் கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச் சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன்—கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடுகளையும் கலைத்தொழித்துக்கூட ‘உலகு ஒன்று’ என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை.
ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடந்திடும்போது மனம் வெதும்புகிறது—இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல்வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர்.
விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார்—சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான், இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார்.
தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத்துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்லி துரைத்தனம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது, பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக் கொண்டு விடுகின்றனர்.
டாக்டர் மு. வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர்; அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில், டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும்போது, டாக்டர் மு. வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்பட வழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, ‘டில்லி—சென்னை தொடர்பினை’ எடுத்துக்காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை—நாட்டு மக்கள் கவனிக்கவேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது.
கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்குவந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம்—கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது.
கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல்—விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக்கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல்—விரட்டல்!!
தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக்கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேருபண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும் இந்த விழாவிற்குப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை.பாட்டும், கூத்தும், கேளிக்கையும் நிறைந்த விழா—ஒவ்வோர் பல்கலைக்கழகமும் தத்தமது கோட்டத்தில் வளர்ந்துள்ள கலைத்திறனைக் காட்டிடும் வாய்ப்பு—இதிலே சென்னைப் பல்கலைக்கழகம் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன?
இந்தியப் பேரரசு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டோம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் கூறிவிட்டது.
இந்த விழா, ஆண்டுதோறும் டில்லியிலேயே நடத்துகிறீர்கள்—இது சரியல்ல—ஒவ்வோர் ஆண்டு ஒவ்வோர் ‘ராஜ்ய’த்தில் நடத்துவதுதான் நல்லது என்று சென்னைப் பல்கலைக்கழகம் கூறிற்று. இந்தச் சாதாரணமான நியாயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள டில்லிக்கு விருப்பம் இல்லை.
டில்லி ஒரு திட்டம் வகுப்பது, அதை முறையில்லை, சரியில்லை என்று கூறி, சென்னை மறுப்பதா!
நந்தா! உனக்கேன் இந்தப் புத்தி!டில்லியின் போக்கு இதுபோலிருந்திருக்கவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் யோசனையைப் புறக்கணித்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல பாடங்கள் போதிக்கப்படுகின்றன, ஆனால் திராவிட நாடு திராவிடருக்கே என்பது பாடமாக்கப்பட்டதில்லை! சென்னைப் பல்கலைக்கழகம் கேட்டதெல்லாம் ‘விநயமான கோரிக்கை’—அதற்கே டில்லி இணங்கவில்லை.
சென்னைப் பல்கலைக்கழகம் என்ன செய்யும்? என்ன செய்தார் டாக்டர் மு. வ! கலைத்தூதுக்குழு சம்பந்தமாக டில்லி காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி—மிரட்டல்—விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக்கழகம், விழாவில் கலந்துகொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!!
ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக்காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை.
எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று, இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கேளா, தெரியவில்லை.
தம்பி, ஒன்று புரிகிறது. இன்று எனக்கு வந்த தபாலில், டில்லியிலிருந்து வெளியாகும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு துணுக்கு வெட்டி அனுப்பி வைத்திருந்தார் ஒரு நண்பர். இந்த இதழ் மகாத்மாவின் புத்ரரும் ஆச்சாரியாரின் மருகருமான தேவதாஸ் காந்தியை ஆசிரியராகக் கொண்டது.
இடியும் கடியும் பொறுத்துக் கொண்டு, வலியையும் வெளியே தெரியவிடுவது நாகரிகமல்லவென்று கருதிக்கொண்டு, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி, கண்ணீர் பொழிந்து கனிவு பெறலாம் என்று காத்து நிற்போர் மட்டுமல்ல, தமிழகத்தில் விளைவு விபரீதமாகுமோ, அடக்குமுறை அவிழ்த்துவிடப்படுமோ என்பது பற்றிய அச்சமற்று, வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஓர் கழகம் இருக்கிறது, அது, தி. மு. க. என்பதை, டில்லி வட்டாரத்து ஏடு புரிந்துகொண்டிருப்பது, நன்றாகத் தெரிகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், தி. மு. க. தேர்தலில் ஈடுபட இருப்பது பற்றிய குறிப்புரை வெளிவந்திருக்கிறது.
வழக்கமான வசையும்—சாபமும் காண்கிறேன், குறிப்புரையில்.
கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு காமராஜர் கிளம்பிவிட்டார், எனவே இந்த தி. மு. க.தோற்று அழிந்துபோகும் என்று அந்த இதழ் ‘ஜோதிடம்’ கூறுகிறது.
பிறகோ, அந்த ஜோகிடத்தில் அதற்கு நம்பிக்கையில்லாமல், இந்த தி. மு. க. திராவிட நாடு, தனி நாடு என்றெல்லாம் பேசுகிறது—இப்படிப்பட்ட பேச்சுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எடுத்துக்காட்டி, வக்கீலாகிறது; வழக்கறிஞர் வேலையில் மற்றவர்களும் ஈடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றால் என்ன, ஐயா! அதற்கு இடம் இருக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி, மக்களிடம் பேசலாமல்லவா, என்று வாதாடக்கூடுமே என்ற அச்சம் பிறக்கிறது. உடனே, வழக்கறிஞர் வேலையை விட்டுத் தொலைத்து, போலீஸ் வேலையை இந்த இதழ் மேற்கொண்டு, தி. மு. கழகத்தை இனியும் சும்மாவிட்டு வைக்கக்கூடாது! இராஜத்துரோகக் குற்றம் செய்கிறது இந்தக் கழகம்! உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து, தி. மு. கழகத்தை ஒடுக்கித் தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது.
ஜோதிடர் வேடம் கண்டு சிரிப்பு வருகிறது, வழக்கறிஞர் கோலம் காணும்போது பரிதாபமாக இருக்கிறது, போலீஸ் குரலில் பேசக் கேட்கும்போதோ, இந்த இதழிடம் எனக்கு அனுதாபம்கூட ஏற்படுகிறது. எவ்வளவு கிலி, பாபம், இந்த இதழுக்கு.
இந்துவும் மித்திரனும் இடம் அளிப்பதில்லை, கல்கியும் விகடனும் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதில்லை, காட்டுக் கூச்சல், கவைக்கு உதவாப் பேச்சு என்று காமராஜர்கள் கூறிவிடுகின்றனர். இந்த நிலையிலேயே, டில்லியில் உள்ள ஏடு, தீபட்டது போலத் ‘தகதக’வென ஆடி, தடி எடு! தடைபோடு! தடைபோடு! என்று கொக்கரிக்கிறது. தம்பி! நீயும் நானும் விரும்புகிறபடியும் நாட்டில் நல்லோர் பலரும் எதிர்பார்க்கிறபடியும், பொதுத் தேர்தலிலே நமக்குச் சிறப்பான வெற்றி கிடைத்து, நாம் ஆட்சி மன்றத்திலேயும் அமர்ந்து, நமது உரிமை முழக்கத்தை நடத்தினால் ஏ! அப்பா! இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஏடுகள் என்ன பாடுபடுமோ என்று எண்ணும்போதே எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்த அரியவாய்ப்புக்காக நாம் அரும்பாடுபடும்போது, 150 ரூபாய்க்காக இதுகள் ஆலாய்ப் பறக்கின்றன, என்று நம்மவர்களிலேயே சிலர் கூறுவது கேட்கும்போது, நெடுந்தொலைவிலிருக்கிற இந்துஸ்தான் டைம்சுக்கும் புரிகிறதே, இவர்களுக்கு ஏனோ வயிறு எரிகிறது என்றெண்ணி ஆயாசமடைகிறேன்.
நாங்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு, சில வேளைகளில் கனிவு காட்டி மகிழச்செய்கிறோம், மற்றும் சில வேளைகளில் உருட்டுவழி காட்டி மருளச் செய்கிறோம், எனினும் எல்லாம் எதன் பொருட்டு? நாம் ஒன்றாக வாழலாம், ஒரே நாடாக இருக்கலாம், ஓரரசுக்குள் இருந்திடலாம், தனித்தனி நாடுகள் தனித்தனி அரசுகள், வேண்டாம், கவி பாடியும் கதை கூறியும் நாங்கள் இதனைத்தானே எடுத்துக் கூறுகிறோம் ஒற்றுமைக்காக ஓயாது உழைக்கிறோம், ஏன் உமக்கு மட்டும் இந்த உயர்ந்த நோக்கம் ஏற்படவில்லை, எதனாலே உமக்குமட்டும், பேதபுத்தி, பிளவு மனப்பான்மை ஏற்படுகிறது, கங்கைக் கரைக்கும் காவிரிக் கரைக்கும் பேதம் ஏன் காணவேண்டும்? காசி காஞ்சி என்று ஏன் பிரித்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்? எல்லாம் பாரதநாடு என்று பரிவுடன் எண்ணிடலாகாதா? என்று தலைவர்கள் பேசத்தான் செய்கிறார்கள்—கேட்கும்போது சிற்சில வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன. “ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன்—இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக் கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது! உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ? அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடையவேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர்—உன் தாய் சிலவேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள்—எனினும் ‘தாய் அன்பு’ என்பது தனியானதல்லவா—பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியிடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள்—அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள்—உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன்போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன், எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகிவிடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா, பாலகனே! என்னைப்பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?...என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் ‘தத்து’ போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பார்த்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானாலும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம்வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதியதாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதைமகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு - தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன—ஊட்டப்பெறுகின்றன? மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக்கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும் அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும்விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே, தாய் உள்ளத்தைத் தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!” என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவைதமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!!
தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்குராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப்பொம்மன் என்றதும் இங்கு தோள் பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங் குறிச்சியின் வீரக் காதையைக் கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டேனென்கிறதே, என்ன செய்வேன்!
நம் நாடு—நம் இனம்—நம் நாட்டு இயல்பு—நமது வரலாறு—நம் நாட்டு வீரக் காதைகள்—நம்நாட்டு எழில்—நம்நாட்டு முறைகள்—என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக்காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது!
சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்துவிட்டது—அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக் காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த ‘பாசம்’ ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்வது!
நம் நடிகமணி டி. வி. நாராயணசாமி, 108-நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார்—பித்தளைப் பாம்புகள், கிரீடம்—ஏகப்பட்ட ‘பாரம்’— அந்தப் பழக்கத்தில், காலைவேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில், ‘பாரம்’ சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல—அதுதான் தேசியம்—பாரம்பரியம் என்கிறார்களே அது. அதனை விலங்குகளும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான்—நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும்—அமைச்சர்கள், அதனை இழந்தால் தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும்—தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்!தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது!
சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய்விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம்—கதைகளில்! தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும், காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும், கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளையாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்துவிடுவதாமே! இப்படியொரு ‘உற்பாதம்’ நேரிட விடலாகுமா!
எனவேதான் தம்பி, பாரத நாடு—இந்தியா—இந்தியர்—என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும் வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு—தாய்நாட்டுப்பற்று தேசீயம்—நம்மிடம் குருதியிற் கலந்திருக்கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றிநிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பு! எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர்—ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம்—பற்று—தேசியம்—இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில். வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும்—எனினும் அதிலே செல்லும் எவரும்—இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயிலிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது!
இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக்காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம்பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது.
இதுபோல, எங்கும் நமது கழகநிலை தெரிந்திட வேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக்கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S S. P. லிங்கம் அவர்களைக்கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார்—ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே! எப்படி இதனையும் கவனித்துக்கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு — நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன்.
நான் இதுபோலக்கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது.
மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது.
என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன், நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்!உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால்.
இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை.
டாக்டர். மு. வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர்களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்டவேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு—கிழமை இதழாவது வேண்டும் அல்லவா!
இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.
கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம்—இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன்.
25—11—1956
அன்பன்,
அண்ணாதுரை