திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/125.நெஞ்சொடுகிளத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது ஆற்றாமை மீதூரத் தனக்கோர் பற்றுக்கோடு காணாத தலைமகள், தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல். இஃது, உறுப்புக்கள் தம் நலன் அழிந்தவழி நிகழ்வதாகலின் உறுப்புநலனழிதலின் பின்வைக்கப்பட்டது.

குறள் 1241 ( நினைத்தொன்று) தொகு

(தன் ஆற்றாமை தீரும் திறன் ஆடியது. )

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று ( ) நினைத்து ஒன்றும் சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

மெவ்வநோய் தீர்க்கு மருந்து. (01) எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

[தொடரமைப்பு: நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று, எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ.]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே;
எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று= இவ் எவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவது ஒன்றனை;
எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய்= யான் அறியும் ஆ்றறல் இலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல், எ-று.
உரைவிளக்கம்
எவவம்- ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினைவிட்டுச் செய்வது யாது ஒன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.

குறள் 1242 ( காதலவரில) தொகு

(தலைமகனைக் காண்டற்கண் வேட்கைமிகுதியாற் சொல்லியது. )

காத லவரில ராகநீ நோவது ( ) காதல் அவர் இலராக நீ நோவது

பேதைமை வாழியென் னெஞ்சு. (02) பேதைமை வாழி என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை. ]

இதன்பொருள்
என் நெஞ்சு வாழி= என் நெஞ்சே வாழ்வாயாக;
அவர் காதல் இலராக நீ நோவது= அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது;
பேதைமை= நின் பேதைமையே பிறிதில்லை, எ-று.
உரை விளக்கம்
நம்மை நினையாமையின் நம்கண் காதல் இலர் என்பதறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பாற்செல்லக் கருதாது, அவர் வரவுபார்த்து வருந்தாநின்றாய், இது நீ செய்துகொள்கின்றது என்னும் கருத்தாற் பேதைமை என்றாள். வாழி- இகழ்ச்சி்க்குறிப்பு. யாம் அவர்பாற் சேறலே அறிவாவது என்பதாம்.

குறள் 1243 (இருந்துள்ளி ) தொகு

(இதுவுமது )

இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் ( ) இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்

பைதனோய் செய்தார் கணில். (03) பைதல் நோய் செய்தார்கண் இல்.

[தொடரமைப்பு: நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என், பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல்.]

இதன்பொருள்
நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என்= நெஞ்சே! அவர்பாற் செல்வதும் செய்யாது, ஈண்டு இறந்துபடுவதும் செய்யாது இருந்து அவர் வரவுநினைந்து நீ வருந்துகின்றது என்னை;
பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல்= இப்பையுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கி வரக்கருதுதல் உண்டாகாது, எ-று.
உரை விளக்கம்
நம் மாட்டு அருள் உடையர் அன்மையின் தாமாக வாரார், நாம் சேறலே இனித் தகுவது என்பதாம்.

குறள் 1244 ( கண்ணுங்கொளச்) தொகு

(இதுவுமது )

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் ( ) கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னைத்

தின்னு மவர்க்காண லுற்று. (04) தின்னும் அவர்க் காணல் உற்று.

[தொடரமைப்பு: நெஞ்சே கண்ணும் கொளச் சேறி, இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும்.]

இதன்பொருள்
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி= நெஞ்சே, நீ அவர்பால் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக;
இவை அவர்க்காணல் உற்று என்னைத் தின்னும்= அன்றி நீ சேறியாயின், இவைதாம் காட்சிவிதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பனபோன்று நலியாநிற்கும், எ-று.
உரை விளக்கம்
கொண்டு என்பது, கொள எனத்திரிந்து நின்றது. தின்னும் என்பது, இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்கவேண்டும் என்றது, தான் சேறல் குறித்து.

குறள் 1245 ( செற்றாரென) தொகு

(இதுவுமது )

செற்றாரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா () செற்றார் எனக் கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்

முற்றா லுறாஅ தவர். (05) உற்றால் உறாஅதவர்.

[தொடரமைப்பு: நெஞ்சே, யாம் உற்றால் உறாஅதவர், செற்றார் எனக் கைவிடல் உண்டோ. ]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே!
யாம் உற்றால் உறாஅதவர்= யாம் நம்மையுறத் தாமுறாத நம் காதலரை;
செற்றார் எனக் கைவிடல் உண்டோ= வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்கு உண்டோ, இல்லை, எ-று.
உரை விளக்கம்
உறுதல்-அன்புபடுதல். அவ்வலி இன்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது என்பதாம்.

குறள் 1246 (கலந்துணர்த்துங் ) தொகு

(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக கழறியது. )

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் ( ) கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய்

பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. (06) பொய்க் காய்வு காய்தி என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு, கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய், பொய்க் காய்வு காய்தி. ]

இதன்பொருள்
என்நெஞ்சு= என்னெஞ்சே!:
கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டாற்புலந்து உணராய்= யான் தம்மொடு புலந்தால், அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் காண்டாற் பொய்யேயாயினும் ஒருகாற் புலந்து பின்அதனை நீங்க மாட்டாய்;
பொய்க்காய்வு காய்தி= அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க்காய்வு காயாநின்றாய், இனி அதனை ஒழிந்து அவர்பால் செல்லத் துணிவாயாக, எ-று.
உரை விளக்கம்
கலத்தலான் என்னும் பொருட்டாய கலக்க என்பது திரிந்துநின்றது. அதனான் உணர்த்தலாவது, கலவியின்பத்தைக் காட்டி அதனான் மயக்கிப் புலவிக்குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு- நிலையில் வெறுப்பு. கண்டான் மாட்டாதநீ காணாதவழி வெறுக்கின்றதனாற் பயனில்லை என்பதாம்.

குறள் 1247 ( காமம்விடு) தொகு

( நாண் தடுத்தலின் அச்செலவு ஒழிவாள் சொல்லியது. )

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே ( ) காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே

யானோ பொறேனிவ் விரண்டு. (07) யானோ பொறேன் இவ் இரண்டு.

[தொடரமைப்பு: நல்நெஞ்சே, ஒன்றோ காமம் விடு, (ஒன்றோ) நாண் விடு, இவ்விரண்டு யான் பொறேன். ]

இதன்பொருள்
நன்னெஞ்சே= நல்ல நெஞ்சே;
ஒன்றோ காமம் விடு= ஒன்றின் நாண்விட மாட்டாயாயின் காம வேட்கையை விடு;
(ஒன்றோ) நாண் விடு= ஒன்றின் அது விடமாட்டாயாயின், நாணினை விடு;
இவ்விரண்டு யானோ பொறேன்= அன்றியே இரண்டும் விடாமை நின்கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன்தாங்கு மதுகை யான்இலன், எ-று.
உரை விளக்கம்
'யானோ' என்னும் பிரிநிலை, நீ பொறுப்பினும் என்பதுபட நின்றது. 'நன்னெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், நல்லை என்னும் குறிப்பிற்று. அது நன்றே எனினும், என் உயிர் உ்ண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன் என்பதாம். முற்றும்மை விகாரத்தான் தொக்கது.

குறள் 1248 (பரிந்தவர் ) தொகு

( இதுவுமது)

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் ( ) பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதையென் னெஞ்சு. (08) பின் செல்வாய் பேதை என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு, அவர் பரிந்து அவர் நல்கார் என்று, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய் பேதை. ]

இதன்பொருள்
என் நெஞ்சு= என் நெஞ்சே;
அவர் பரிந்து நல்கார் என்று= அவர் இவ்வாற்றையை அறியாமையின் நொந்துவந்து தலையளி செய்யார் ஆயினார் என்று கருதி;
பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை= அஃது அறிவித்தற் பொரு்ட்டு, நம்மைப் பிரிந்துபோயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய், எ-று.
உரை விளக்கம்
ஆற்றாமை கண்டுவைத்தும், நல்காது போயினாரைக் காணாதவழிச் சென்று அறிவித்த துணையானே நல்கவருவர் என்று கருதினமையின், 'பேதை' என்றாள்.

குறள் 1249 ( உள்ளத்தார்) தொகு

( இதுவுமது )

உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ ( ) உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ

யாருழைச் சேறியென் னெஞ்சு. (09) யாருழைச் சேறி என் நெஞ்சு.

[தொடரமைப்பு: என் நெஞ்சு, காதலவர் உள்ளத்தாராக, நீ உள்ளி யாருழைச் சேறி. ]

இதன்பொருள்
என் நெஞ்சு= என்னெஞ்சே;
காதலவர் உள்ளத்தாராக= காதலர் நின் அகத்தாராக;
நீ உள்ளி யாருழைச் சேறி= முன்பு எல்லாம் கண்டுவைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து, எ-று.
உரை விளக்கம்
உள்ளம் என்புழி, அம்முப் பகுதிப்பொருள் விகுதி. நின் அகத்து இருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத்தேடிச் சேறல் நகையுடைத்து, அதனை ஒழி என்பதாம்.

குறள் 1250 (துன்னாத் ) தொகு

( அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது. )

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா () துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

வின்னு மிழத்துங் கவின். (10) இன்னும் இழத்தும் கவின்.

[தொடரமைப்பு: துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா, இன்னும் கவின் இழத்தும். ]

இதன்பொருள்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா= நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் நம் அகத்து உடையேமாக;
இன்னும்கவின் இழத்தும்= முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம், எ-று.
உரை விளக்கம்
"குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்"- (குறுந்தொகை-கடவுள்வாழ்த்து) என்புழிப்போல நெஞ்சு என்பது, ஈண்டும் அகப்பொருட்டாய் நின்றது. அவர் நம்மைத் துன்னாமல் துறந்தாராகவும், நாம் அவரை மறத்தன் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி, நின்ற நிறையும் இழப்பேம் என்பதாம்.