பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் வரலாறு

பாயிரம்

    நிலைபெற்ற அறநெறியினைப் பேணி வத்தவர்கள், எப்புறத்தும் வெற்றியுடன் சிறப்புற்ற ஆட்சிச் சக்கரத்தினை நடாத்தியவர்கள், யாதும் பழுதற்ற சீரிய கொள்கையினை உடையவர்கள் வழுதியராகிய பாண்டியர்கள். அவர்களுடைய அவைக்கண்ணே, அறிவு குடிகொண்டிருக்கும் செறிவுடைய மனத்தவரும், வானளாவிய நற்புகழினை உடையவருமாகிய சான்றோர்கள் குழுமியிருந்து, அருமையுடைய முத்தமிழினையும் ஆராய்ந்து வந்தனர். அந்தக் காலத்தே. -
    ஆராய்ந்து சாலச் சிறந்தவையெனத் தெரிந்த சிறப்பினை யுடைய இனிய தமிழ்ப் பாடல்களுள், நெடியவாகி அடிகள் அதிகமாக விளங்கிய இன்பப் பகுதியினைச் சார்ந்த இனிய பொருள் அமைந்த பாடல்கள் நானூற்றை எடுத்து, நூல்களை ஆராய்ந்து சொல்லும் புலவர் பெருமக்கள் தொகுத்தனர்.
   மும்மதங்களால் களித்தலையுடைய களிற்றியானை நிரை, மணியோடும் சேர்த்துக் கோத்த அழகு ஒளிரும் மணிமிடை பவளம், சிறப்பான நித்திலக்கோவை என்ற விதமாக, அத்தகைய பண்பினோடு முத்திறம் உடையனவாகத் தொடுத்தற்கு நினைந்து தொகுத்தது, நல்ல நெடுந்தொகையாகும்.
   அந்நெடுந்தொகைக்குக் கருத்து எனப் பண்பினையுடைய சான்றோர் முற்காலத்தே சொன்னவற்றை நாம் ஆராய்வோமானால், அருமையுடையவாகிய பொருளுடைமையினைக் கருத்தாகக் கொண்டு, எவ்விதக் கோணுதலும் இல்லாமல், பாட்டமைதியோடு பொருந்துமாறு, செய்யுள் தகைமையிற் சிறந்த அகவல் நடையினால், கருத்து இனிதாக இயற்றியோன், பரிகள் பூட்டிய தேரினையுடைய வளவர்கள் காத்துப் பேணும் வளமையான சோழ நாட்டினுள்ளேயும், நாடு எனச் சிறப்பித்துக் கூறப்படும் மிக்க பெருமையுடைய சிறப்பினையும், என்றும் வளங் கெடுதலில்லாத உயர்வினையுமுடைய இடையளநாட்டுத் தீதற்ற கொள்கையினர் வாழுகின்ற பழைமையான ஊர்கள் பலவற்றுள்ளும் சிறந்த ஊர் என்ற புகழுடன் விளங்கிய, சீர்மைக் கெழுமிய மணக்குடி என்னும் ஊரினனான, செம்மை நிரம்பிய தேவன் என்பவனாவன். அவன், தொன்மையாகவே சிறப்புடைய நன்மையாளர் மலிந்த தமிழ்க் குடியினனும் ஆவன்.