மூலமும் உரையும்
புலியூர்க் கேசிகன் ☆ 133
(இரவுக் குறியீட்டின்கண் ஒரு நாள்; தலைவன் வந்திருக்கின்றான். தலைவி போகத் துடிக்கிறாள். தாய் உறங்கி விட்டனளா என்று தோழி அறிந்துவந்து, அவள் உறங்கியதாகவும், அதனால் செல்லலாம் எனவும் கூறுகிறாள். களவு வாழ்விலே நிகழுகின்ற ஒரு சுவையான பகுதி இது)
'அன்னாய்!வாழி, வேண்டு அன்னை! நம்படப்பைத்
தண்அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதுஉம்
கேட்டியோ?வாழி, வேண்டு அன்னை நம்படப்பை
ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ? எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள், அதன்தலை
வருவர் ஆயின், பருவம்இது' எனச்
சுடர்ந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் - வாழி, தோழி! - அந்தரத்து
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.
"அன்னையே! நீ வாழ்வாயாக! நான் கூறுவதனை விருப்பமுடன் கேட்பாயாக நம் தோட்டத்திலேயுள்ள குளிர்ந்த பள்ளத்திலே நிறைந்திருக்கும் கூதளஞ் செடியின் தழைகளின் கண்ணே, அவை குழையுமாறு வீழ்கின்ற, இன்னிசையான அருவியொலியினைச் சிறிதேனும் நீ கேட்டனையோ?
பின்னரும், அன்னாய், நீ வாழ்க! நான் கூறுவதனைக் கேட்பாயாக நம் தோட்டத்திலுள்ள, அரக்கு ஊட்டினாற் போலும் ஒள்ளிய தளிரினையுடைய அசோகினது ஓங்கிய கிளையிலே கட்டிய ஊசற்கயிற்றினைப் பாம்பு எனக் கருதி, அம்மரத்தின் பெரிய அடியும் துணிபடுமாறு இடி விழுந்தது; அதனையும் நீ கேட்டாயோ?” -