52
அகநானூறு - களிற்றியானை நிரை
25. வருவர், வாழி தோழி!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன். திணை: பாலை. துறை: பருவம் கண்டழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்புற்றோன்: பொதியிற் செல்வனான திதியன்.
(தலைவன் வருவதாகக் குறித்துச் சென்ற பருவமும் வந்தது. அவனோ வரவில்லை. அது கண்டு தலைவி மிகவும் ஆற்றாமையுடையவளாயினாள். அவள் வருத்தத்தைக் கண்டு தோழி பருவத்தைக் காட்டி, அவன் தவறாது வருவான் என உறுதிகூறி, அவளுடைய ஆற்றாமையைப் போக்க முயலுகிறாள்.)
"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய,
அவிர்அறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது களுல,
5
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின்று, அல்கலும்,
உரைப்ப போல, ஊழ்கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
10
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி"என, நின்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
வாரா மையின் புலர்ந்த நெஞ்சமொடு,
15
நோவல், குறுமகள் நோயியர், என்உயிர்!என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்
20
இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரே!
நீண்ட கரையினைக் கொண்ட கான்யாற்றின், வேகம் மிக்க நீரானதும் அறவே அற்றுப்போயிற்று. விளங்கும் அறலாம் தன்மையினைக் கொண்ட விரவிய மணலை யுடையவாயின. அகன்ற துறைகள். அவ்விடத்திலேயுள்ள பொழில்களில் எல்லாம், காஞ்சி மரத்தினது அழகிய தாதுக்களைக் கொண்டிருக்கின்ற பூக்கள் ஏராளமாக உதிர்ந்து கிடப்பவாயின.