பக்கம்:அகமும் புறமும்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 • அகமும் புறமும்

அமைச்சனை அரசனுடைய கண்களாகவே கருதினர். உலகப் பொதுமறை தந்த பெரியார்,

“சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்,
 சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.”
  (குறள்–445)

என்று விதித்துப் போனார்.

மெக்காவிலியின் கூற்று

மெக்காவிலி தன் நூலின் 22ஆம் பிரிவில் அரசன் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதுப் பற்றிப் பின்வருமாறு குறிக்கிறான்: “அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது எத்துணைப் பெரிய காரியமென்பதைக் கூறத் தேவை இன்று. மன்னன் தன் அறிவு விளக்கத்திற்கேற்பவே அமைச்சரைத் தேர்ந்தெடுப்பான். அறிவுடை அமைச்சரைத் தேர்ந்தெடுப்பவன் அறிவுடை மன்னனாகக் கருதப்படுவான். அமைச்சனுடைய தகுதியை மன்னன் அறியச் சிறந்த வழி ஒன்று உண்டு. எப்பொழுது ஓர் அமைச்சன் மன்னனைக் காட்டிலும் தன்னைப் பெரியவனாக மதிக்கிறானோ, அப்பொழுதே அவன் அத்தொழிலுக்குத் தகுதியற்றவனாகிறான். எவன் ஒருவன் அனைத்திலும் தன்னுடைய ஊதியத்தைப் பெரிதென மதிக்கிறனோ, அவனும் அமைச்சனாகத் தகுதியற்றவன். ஒரு முறை அமைச்சனுடைய தகுதி பற்றி மன்னன் ஆய்ந்து தெளிந்து அவனுடைய உண்மை அன்பை அறிந்துவிட்டால், பிறகு அவன் அன்பை நிலைபெறச் செய்யத்தக்கனவற்றை இயற்ற வேண்டும்; மேலும் பொறுப்புக்களையும் பதவியையும் பயத்தையும் தருவதால் அமைச்சனுடைய அன்பு மாறாமல் இருக்கச் செய்ய வேண்டும். இத்தகைய முறையில் இருவரும் நடந்துகொண்டால், இருவரும் பெறாத நன்மையும இல்லை; இம்முறை மாறினால், இருவரும் அடையும் தீமைக்கும் ஓரளவில்லை.”