பக்கம்:அகமும் புறமும்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370 • அகமும் புறமும்

யானவை. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.

புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.

சங்கப் பாடல்களில் வரும் தெய்வம், சமயம் பற்றிய குறிப்புக்கள் அளவிறந்தனவேயாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கென உருவு அமைத்து நிறுவினர்; வழிபட்டனர் என்பதனைத்

தெய்வம், உணாவே மாமரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

(தொல்–பொருள். அகத்திணையியல்)


என்ற சூத்திரத்தால் உணரலாம்.

இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழிபட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

தெய்வம், கடவுள் என்னும் இரண்டனையும் இன்று ஒரு பொருளனவாக வழங்குகின்றோம். எனினும் தொல்காப்பியர் காலத்தில் இவை வெவ்வேறு பொருளன என்று நினைக்கத் தோன்றுகிறது.